சீடர்களுக்கான இயேசுவின் காட்சி

சீடர்களுக்கான இயேசுவின் காட்சி (யோவான் 20 : 19 – 23)

இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கான இன்னுமோர் சான்றாக சீடர்களுக்கான தரிசனம் காணப்படுகின்றது. இயேசு தோமா இல்லாதபோது ஏனைய சீடர்களுக்கு அளித்த காட்சி இன்றைய திருச்சபைக்குப் பல்வேறு செய்திகளை வலியுறுத்தி நிற்கின்றது. குறிப்பாக 20 : 21 இல் தந்தை என்னை அனுப்பியது போல நான் உங்களை உலகத்திற்குள் அனுப்புகின்றேன் என்ற இயேசுவின் வார்த்தை திருச்சபை அனுப்பப்படுகின்ற திரு அவையாக மாறவேண்டியதன் முக்கியத்துவத்தைக் காண்பிக்கின்றது. மேலும் கிறிஸ்துவில் திருச்சபை தங்கி இருக்க வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகின்றது. மறுகரையில் ஆண்டவர் இயேசுவிற்கு தமது பணியை முன்னெடுத்து செல்வதற்கு திருச்சபை அவசியமாகின்றது (எபேசியர் 1 : 28, 1 கொரிந்தியர் 12 : 12). இயேசுவின உயிர்ப்பிற்கு சான்று பகரும் வாயாக திருச்சபை காணப்படுவதனால் ஆண்டவர் இயேசுவிற்குத் திருச்சபை மிகவும் அவசியமானதாகும். எனவே தந்தையாம் கடவுளையும், மைந்தனாம் இயேசு கிறிஸ்துவையும் பிரதிபலிக்கும் பிரதிநிதிகளாக திருச்சபை காணப்படுகின்றது.

ஆண்டவர் இயேசு தமது வாயால் ஊதி வாழ்வளிக்கும் ஊற்றாகிய பரிசுத்த ஆவியைப் பெறுமாறு தமது சீடர்களுக்கு கட்டளை இடுகின்றார். (தொட. நூல் 2 : 7) இல் கடவள் மனிதனைப் படைத்து அவனுக்குள் உயிருள்ள சுவாசத்தை அருளிச் செய்தார். அதன் மூலம் அவன் உயிருள்ள மனிதனானான். மேலும் எசேக்கியேல் 34 : 9 இல் உலர்ந்த எலும்புகள் மிகுந்த பள்ளத்தக்கில் உயிருள்ள ஆவியானவர் தசை எலும்புகளை மக்களுக்கு வழங்கி வாழ்வளிப்பதை நாம் காணலாம். எனவே அனுப்பப்படுகின்ற திருச்சபை மக்களுக்கு வாழ்வளிக்கும் பணியை ஆற்றுமாறு பணிக்கப்படுகின்றது. இன்றைய சூழலில் பல்வேறு காரணிகளால் வாழ்விழந்துள்ள சமூகத்திற்கு திருச்சபை வாழ்வாதாரத்தை வழங்கும் அமைப்பாக மாற வேண்டிய தேவை காணப்படுகின்றது.

உயிர்த்த ஆண்டவர் மன்னிப்பின் அடையாளமாக திருச்சபை மாற வேண்டும் என்பதை எதிர்ப்பார்க்கின்றார். ஏனெனில் ஆண்டவர் இயேசு தன்னை மறுதலித்தவர்களையும் தனக்கு தீங்கு இழைத்தவர்களுக்கோ எத்தகைய தீங்கையும் செய்யவில்லை. மாறாக அவர்களைப் பழிவாங்கவும் இல்லை. பிறருக்கு மன்னிப்பை எடுத்துக் கூறும் பணியை அவர்களிடம் கையளித்தார். எனவே திருச்சபை பிறருக்கு மன்னிப்பினை வழங்குவதற்காக உலகிற்குள் அனுப்பப்பட்ட உன்னத ஸ்தாபனமாகும். எனவே அனுப்பப்பட்ட திருச்சபை கடவளின் பிரதிநிதியாகவும் வாழ்வாதார ஊற்றாகவும் மன்னிப்பை வழங்கும் நிறுவனமாகவும் மாற அழைக்கின்றது.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக