உயிர்ப்பில் புலப்படும் பொறுப்பு

உயிர்ப்பில் புலப்படும் பொறுப்பு (யோவான் 21 : 15 – 19)

உயிர்த்தெழுந்த ஆண்டவர் மறுபடியும் தனது சீடர்களுக்குக் காட்சி அளிக்கின்றார். இம்முறை பேதுருவுடன் கூட நீண்ட உரையாடல் நடைபெறுவது போன்று ஆசிரியர் விபரிக்கின்றார். குறிப்பாக இயேசு பேதுருவை நோக்கி என்னில் அன்பு கூறுகின்றாயா? என்ற வார்த்தை மிகவும் அர்த்தமுள்ளதாகும் (21 : 15). இங்கு இவைகளை விட என்பது பேதுருவிற்குச் சொந்தமான உடமைகளான வலைகளை விட நீ என்னில் அன்பு கூறுகின்றாயா? என்பதைக் குறிக்கின்றது. அதவாது இயேசுவின் மீது அன்பு வைத்தல் என்பது எமக்கு உண்டான எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவதைவிட மேலானதாகும். மேலும் இயேச பேதுருவை நோக்கி ஏனைய சீடர்களைவிட உன்னால் என்னில் அன்பு செலுத்த முடியுமா என மறைமுகமாகக் கேட்கப்படுகின்றது. ஏனெனில் பேதுரு யார் உம்மைக் கைவிட்டுச் சென்றாலும் நான் ஒருபோதும் உம்மைவிட்டு விலகிச் செல்ல மாட்டேன் என அளித்த உறுதி மறுபடியும் புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பை ஆண்வர் இயேசு பேதுருவிற்கு வழங்குகின்றார். எனவே இவ் உரையாடல் மனந்திரும்புதலின் மறுபக்கத்தை எமக்குக் காண்பிக்கின்றது.

இயேசு பேதுருவிடம் நீ என்னை நேசிக்கின்றாயா? என்ற வினாவை 3 தரம் இங்கு வினாவுகின்றார். இதன் மூலம் 3 முறை இயேசுவை மறுதலித்த பேதுரு தனது அறிக்கையின் வாயிலாக ஆண்டவரே நான் உம்மை நேசிக்கின்றேன் என்பதை நீர் அறிவீர் என்ற மறுமொழி பேதுருவின் உன்மைத்தன்மையை எடுத்துக் காண்பிக்கின்றது. மேலும் இயேசுவை எமது சொந்தப் பலத்தின் உதவியினால் அன்பு செலுத்திவிட முடியாது. மாறாக அவரை நேசிப்பதற்கு அவருடைய உதவி அவசியமாகின்றது. ஆண்டவர் இயேசுவை நேசிப்பது ஒரு சலுகை வாய்ந்ததொன்றலல்ல. மாறாக அது கடமை வாய்ந்த ஒன்று. அவர் மட்டில் நாம் பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியது ஒன்றாகும். எனவே தான் நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிந்திருக்கின்றீர் என பேதுரு கூறியபோது இயேசு அவரை நோக்கி என் ஆடுகளை நீ மேய்ப்பாயாக என்ற பொறுப்பை வழங்குகின்றார். இயேசுவை நேசிப்பது அவருடைய பொறுப்புக்களை நாம் நிறைவேற்றுவதன் ஊடாகவே வெளிப்படுத்த முடியும். அதாவது அவருடைய அன்பு உம்மை உந்தித்தள்ள வேண்டும். ஏனெனில் அப்பொழுதே அவருக்காக எம்மால் பணியாற்ற முடியும். எனவே அன்புறவு செயல் அடித்தளத்தினாலே தீர்மானிக்கப்படுகின்றது.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக