இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றி 4 நற்செய்திகளும் பேசுகின்றன. மாற்கு நற்செய்தியாளனே முதலில் இச்சம்பவத்தை உலகிற்கு எடுத்துக் கொடுத்தார். இதன்படி மாற்கு 16 : 9 – 20 வரையுள்ள பகுதியை பிற்சேர்க்கை எனக் குறிப்பிடுவர். எனினும் இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்வை மெய்ப்பிதற்காக வெறுமையான கல்லறை, இரண்டு காட்சிகளை முக்கியத்துவப்படுத்துவதற்காக இரு மனிதர், காணச் சென்ற பெண்மணிகள் போன்றவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். மேலும் ஆதித்திருச்சபையில் காணப்பட்ட கலாபனைகளும் துன்ப அனுபவங்களும் கல்லைப் போன்ற பாரமுடையவர்கள். யார் இவைகளுக்கு விடை தருவார்கள் என்ற கூற்று கல்லை யார் புரட்டுவார்கள் என்ற கேள்வியுடன் தொடர்புபடுகின்றது. மேலும் உயிர்த்தெழுந்த ஆண்டவர் கலிலேயாவிற்குச் சென்றுவிட்டார் என்ற கூற்று உயிர்த்தெழுந்த ஆண்டவர் துன்பப்படுகின்ற ஒடுக்கப்படுகின்ற மக்களேடே என்றும் இருக்கின்றார் எனப் பொருள்படுகின்றது. ஆண்டவர் இயேசுவை கடவுள் உயிரோடு எழுப்பியபடியால் மரணத்தைவிட கடவுளின் வல்லமை மேலானது என்பதைக் காணலாம். அதாவது கடவுளின் வல்லமையை மரணத்திற்குள் மாத்திரம் கட்டுப்படுத்தி விடக் கூடாது (தி. பணிகள் 2 : 22, 23, 32).
லூக்கா நற்செய்தியாளனின் அவதானிப்பின்படி உயிர்த்தெழுந்த ஆண்டவர் எம்மாவூருக்கு சென்றதைக் குறிப்பிடுகின்றார். எம்மாவூர் உரோமைப்படைகளின் தலைமை முகாம் காணப்பட்ட இடமாகும். இங்கிருந்தே யுத்தத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. எனவே உயிர்த்தெழுந்த ஆண்டவர் காயப்பட்ட கரங்களை விரித்தவராக சமாதானத்தின் பிரதிநிதியாக எம்மாவூருக்குச் செல்லுகின்றார். மேலும் தமது உயிர்ப்பின் பிரசன்னத்தை வார்த்தைகளைப் பிட்கும்போதும் அப்பத்தை உடைக்கும் போதும் சீடர்களுக்குக் காட்சி அளித்தார். இதன் ஊடாக வார்த்தைத் திருப்பணியின் ஊடாகவும் திருவிருந்து அருட்கொடையின் ஊடாகவும் உயிர்த்து கிறிஸ்து பிரசன்னமாகின்றார். இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வு அவரை ஓர் நூலுக்குள்ளோ, வரலாற்றுக்குள்ளோ அடக்கிவிட முடியாது எனக் காண்பிக்கின்றது. ஏனெனில் அவர் எங்கும் பிரசன்னமாகுபவர். மேலும் அவரைப் பற்றி அறிவதைவிட அவரை அறிவது மேலானதாகும். இந்த அறிவை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுமாறு யோவான் நற்செய்தியில் மகதலேனாள் பணிக்கப்படுகின்றாள். மேலும் மகதலேனா மரியாளுக்கு யோவான் நற்செய்தியின்படி இயேசு முதலில் காட்சி அளித்தபடியால் பெண் சமத்துவம் பேணப்படுகின்றது. மேலும் உயிர்த்தெழுந்த ஆண்டவர் தம்மை மறுதலித்தவர்களுக்கும் தமக்கு தீங்கு இழைத்தவர்களுக்கும் மன்னிப்பை வழங்கியதன் ஊடாக பழிவாங்கும் மனப்பான்மையை அகற்றுமாறு எங்களை அழைக்கின்றார். முரண்பாடுகள் மிக்க இவ்வுலகில் இயேசுவின் இச்செயல் எமக்கு சவாலாக அமைகின்றது.
மத்தேயு நற்செய்தியின்படி உயிர்த்தெழுந்த ஆண்டவரை சீடர்கள் வணங்கி அவரை அறிக்கையிட்டதோடு ஆண்டவர் அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்கும் பொறுப்பையும் கொடுக்கின்றார் (மத்தேயு 28 : 19 – 20). இங்கு நற்செய்தி என்பது உண்மையை அறிவத்தலாகும். அதாவது இயேசுவின் உயர்த்தெழுதல் உரோமை அரசியலின் அநீதிக்கும் யூத மதத்தின் அநீதிக்கும் அடிக்கப்பட்ட சாவுமணி ஆகும் (தி. பணிகள் 2 : 32). எனவே இயேசுவின் உயிர்த்தெழுதுதல் உண்மைக்கு சான்று பகருமாறு எம்மை அழைக்கின்றது. எனவே இயேசுவின் உயிர்ப்பு சலுகைக்கு உரியதான அல்ல, மாறாக பொறுப்புக்கு உரியதாகும்.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக