ஆண்டவர் இயேசு சோதிக்கப்படுவதற்காக அலகையினால் வனாந்தரத்திற்கு அழைத்துச்; செல்லப்பட்டார். வனாந்தரம் என்பது பிசாசுகளின்; இருப்பிடம் எனக் கருதப்பட்டது. இத்தீமைகளின் இருப்பிடத்தில் இயேசு இருந்து அத்தீமைகளை தூய ஆவியரின் துணை கொண்டு மேற்கொண்டபடியினால் தீய ஆவியை விட தூய ஆவியானவர் பலமுள்ளவர் என்ற கருத்து புலனாகின்றது. கற்களை அப்பமாக்கி பசியைப் போக்குமாறு அளிக்கப்பட்ட ஆலோசனை உணவுத்தேவையை ஓர் குறுக்கு வழியில் பூர்த்தி செய்யும் பொறுப்பை இயேசுவிடம் இருந்து எதிர்பார்க்கின்றது. ஆனால் இயேசுவோ குறுக்குவழிப் பயணத்தை வெறுக்கின்றார். நாம் வாழும் இன்றைய உலகில் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முதலாளி வர்க்கம் பலவகையான கிருமி நாசிகளையும் குறைந்த காலத்தில் பலனளிக்கக் கூடிய உர வகைகளையும் ஒட்டு முறைகளையும் உலகிற்குப் பரிசாகத் தந்துள்ளன. இதனால் மறக்கரி வகைகளின் அளவு , நிறை பெரிதாகின்றன. பழங்கள் மரத்தில் பழுப்பதற்கு முன்னரே பிடுங்கப்பட்டு பழுக்கவைக்கப்படுகின்றன. இவைகளினால் மானிடருக்கு ஏற்படுவது மரணங்களும் நோய்களுமே. மாறாக விவசாய முதலாளி வர்க்கத்தினர் தமது செல்வத்தோடு இன்னும் செல்வங்களை சேர்த்து வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நடுத்தர விவசாயிகள் கடன் சுமைகளினால் தற்கொலை புரிகின்றனர். இவற்றிற்கு அப்பால் நீர், சூழல், காற்று போன்றவைகள் மாசடைகின்றன. இவைகளே குறுக்குவழியின் விளைவுகள் ஆகும்.
இரண்டாவது சோதனையில் பிசாசு இயேசுவை நோக்கி எருசலேம் ஆலய உட்பரிகையில் இருந்து குதிக்குமாறும் அவ்வாறு செய்யப்படும்போது கடவுளின் தூதுவர்கள் உம்மை தமது கரங்களில் ஏந்துவார்கள் எனவும் கூறினார். இவ்வார்த்தை கடவுளின் வார்த்தை மீதும் கடவுள் மீதும் சந்தேகத்தை எழுப்பச் செய்யும் கேள்விகள் ஆகும். மனித வாழ்வில் ஏற்படும் துயர அனுபவங்கள், இழப்புக்கள், இயற்கை அழிவுகள், தொடர் தோல்விகள் போன்றவைகள் கடவுளின் இருப்பு நிலையைக் குறித்தும் கடவுளின் வார்த்தையைக் குறித்தும் சந்தேகத்தை எழுப்புகின்றன. இவைகள் கடவுளுக்கும் எமக்கும் இடையேயுள்ள உறவை துண்டிக்கின்றன. ஆனால் ஆண்டவர் இயேசுவோ கடவுளுக்கும் தமக்கும் இடையே எழக்கூடிய அனைத்து சந்தேகமான அனுபவங்களையும் தகர்த்து எறிந்து சந்தேகத்திற்குப் பதிலாக விசுவாசத்தை முன்வைத்தார்.
பிசாசை வணங்குவதன் ஊடாக ஆசிர்வாதங்களையும், அதிகாரங்களையும் அனுபவிக்குமாறு 3 வது சோதனையின் ஊடாக ஆண்டவர் இயேசு வழிநடத்தப்படுகின்றார். நாம் வாழும் இன்றைய உலகில் அதிகாரங்களும், ஆசிர்வாதங்களும், சலுகைகளும், பொறுப்புக்களும், மதிப்புக்களும் இன்னுமொருவரை ஒடுக்குவதன் ஊடாக மனித உயிரை பேரம் பேசுவதன் ஊடாகப் பெறப்படுமாயின் அவைகள் அனைத்தும் பிசாசை வணங்குவதற்கு சமமாகக் காணப்படுகின்றது. எனவே தான் சாத்ராக், மேசாக், ஆபேத்நேகோ போன்றவர்கள் அதிகாரத்தை நிராகரித்து அக்கினி சுவாலையின் ருசியை தமது வாழ்வில் அனுபவித்தனர். போலிகாப் உரோம அரசனாகிய செசாரின் உருவத்தை பணிந்து கொள்ள மறுத்தமையால் வெட்டப்பட்டு தீக்கு இரையாக்கப்பட்டான். பிசாசை வணங்குதல் என்பது பிரபல்லியத்தினால் எழும் மதிப்பே ஆகும். அது தற்காலிகமானது ஒன்றாகும். ஆனால் ஆண்டவர் இயேசுவோ பணி செய்வதனால் உண்டாகும் தன்னிறைவுக்கு ஆகவும் பிறரின் பொருட்டு துன்பத்தை அனுபவிக்கும் துன்ப சீலன் மாதிரியை தனது மாதிரி ஆகவும் மாற்றினார்.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக