ஆண்டவரின் அழைப்பை உணர்ந்துக் கொள்ள ஆயத்தமா?

ஆண்டவரின் அழைப்பை உணர்ந்துக் கொள்ள ஆயத்தமா? (ஏசாயா 6:1-8)

திருமறையிலும் திருச்சபை வரலாற்றிலும் கடவுள் காலத்திற்கு காலம் தனது திட்டத்தை நிறைவு செய்வதற்காக பலரை அழைப்பதை நாம் உணரலாம். இதனை தனிநபர் அழைப்பு, சமூக அழைப்பு, பொதுவான அழைப்பு, சிறப்பு அழைப்பு என வகைப்படுத்தலாம். ஏசாயா அல்லது இசையாசின் அழைப்பை (ஏசாயா அல்லது இசையாஸ் 6:1-6) வசனம் வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். இக்கட்டுரையில் கடவுளின் அழைப்பை மனிதன் புரிந்துக் கொள்வதற்கு ஏசாயாவின் அல்லது இசையாவின் அடித்தளத்தில் சிந்திப்போம்.

ஆண்டவரின் அழைப்பு

ஏசாயாவின் அழைப்பு உசியா அரசனின் மரணத்தை அடுத்து ஏற்படுகின்றது.உசியா ராஜா மரணமடைந்தப்போது தேசத்தில் பொருளாதாரஈ அரசியலில் உறுதிப்பாடற்ற நிலை தோன்றியது. இந்நிலையில் தேசத்தின் எதிர்காலம் பற்றி அறிவதற்கு பலரும் பல மார்க்கங்களை கையாண்டனர். ஆனால் ஏசாயாவோ கடவுளுடைய ஆலயத்திற்கு செல்வதை நாம் காணலாம். வாழ்வின் பலதரப்பட்ட அனுபவங்களின் மத்தியிலும் முழுமையாக நம்பிக்கை கொண்டு ஏசாயா வாழ்ந்த போது கடவுள் தன்னை சிறப்புப் பணிக்கு அழைக்கின்றார் என்பதை உணர்ந்தார்.

கடவுள் தன்னுடைய பணியை ஆற்றுவதற்கு மனிதர்களை தெரிவு செய்யும் போது அதற்கான முதற்படியை கடவுளே எடுப்பதை திருமறை கூறுகின்றது. விடுதலைப்பயணம் 3:7ல் எகிப்தில் துன்புறும் மக்கள் சார்பில் பணியாற்ற கடவுள் மோயீசனை அழைக்கின்றார். எனவே கடவுளின் அழைப்பு மனிதனின்  தகுதி நிலையால் ஏற்படும் ஒன்றன்று. மாறாக கடவுளின் அருளால் மனிதருக்கு கிடைக்கின்றது. இதனையே ஏசாயாவின் அழைப்பிலும் காண்கின்றோம். கடவுள் முன்னிலையில் தன்னுடைய குற்றநிலையை, இயலாமையை ஏசாயா உணர்கிறார். (ஏசாயா 6:5) புனித சின்னப்பரும் (பவுலும்) தன்னுடைய அழைப்பில் புலப்படும் தகுதியற்ற நிலையை அறிக்கை இடுகின்றார். (1 கொரி 15:8) மனம் போன வழியில் வாழ்ந்த புனித ஒகஸ்ரின் அடிகளார் கடவுளின் உன்னத அழைப்பை உணர்ந்தப் போது தனது பாவங்களை எண்ணி மனம் வருந்தி பாவங்களின் தொகுப்பை நூல் வடிவில் வடித்ததை வரலாற்றில் காணலாம். எனவே கடவுளின் அழைப்பில் மானிடர் தங்களுடைய தகுதியற்ற நிலையை ஏற்றுக் கொள்வது மிக அவசியம் ஆகின்றது. தகுதியற்ற நிலையில் இருந்து தகுதியான நிலையை நோக்கி பிரயாணிக்கும் போது தூய்மையாக்கலின் அனுபவத்தின் ஊடாக அழைக்கப்படுபவர் செல்ல வேண்டியது அவசியமாகின்றது. ஏசாயா தூய்மையற்ற நிலையில் வாழ்ந்த படியினால் கடவுள் அவனது நாவுகளை தூய்மைப்படுத்துகின்றார். (ஏசாயா 6:7)

சமூக, கலாசார, பொருளாதார, கலை அனுபவங்களின் மத்தியில் இருந்தே அழைப்பு வெளிப்படுகின்றது. கடவுள் தனிமனிதனையோ, அல்லது சமூகத்தையோ அழைக்கும் போது அழைப்புடன் கூட அடையாளத்தையும் வழங்குவதை அவதானிக்கலாம். குறிப்பாக ஆபிரகாமின் அழைப்பில் விருத்தசேதனத்தையும் நோவாவின் அழைப்பில் வானவில்லையும் மோசேயின் அழைப்பில் தனது பெயரையும் அடையாளங்களாக வழங்குகின்றார். இவ் அடையாளங்கள் அழைப்பின் முழுமையையும் நம்பிக்கையையும் தெளிவையும் அழைக்கப்படுபவர்களுக்கு கொடுப்பதை நாம் காணலாம். திருச்சபை வரலாற்றிலும் கடவுளால் அனுப்பப்பட்டவர்களுக்கு கடவுள் தன்னை வெளிப்படுத்தியது நாம் அவதானிக்கலாம்.

கடவுளின் அழைப்பை மனிதர் நாம் வாழும் இன, மத, மொழி, கலை, கலாசார விழுமியங்களுக்குள் கட்டுப்படுத்திவிட முடியாது. பாபிலோனிய தேசத்தில் அடிமை வாழ்வை அனுபவித்த யூதர்களை விடுதலை செய்யும் பணியில் கடவுள் கோரேசை பயன்படுத்தியதாக ஏசாயா 45:1ல் வாசித்து அறியலாம். கோரேசு அல்லது சைரஸ் ஒரு யூதன் அல்ல. ஆனால் கடவுள் தனது மீட்புத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இம்மனிதனைத் தெரிவு செய்கின்றனர். அதன் ஒளியில் நாம் வாழும் சூழலில் நடைபெறும் மீட்புப்பணிகளில் எம்மைச் சாராதவர்களும் கடவுளின் அழைப்பில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர் என்ற உண்மையை கடவுளால் அழைக்கப்படும் ஒவ்வொருவரும் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

கடவுளின் அழைப்பில் ஓர் சமூகப் பொறுப்பை நாம் உணர்ந்துக் கொள்ளவேண்டும். தொ.நூல் 12:1-3 இல் கடவுள் ஆபிரகாமை நோக்கி 'உன் வழியாக மண்ணுலகின்  மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்' என ஆசி வழங்குகின்றார். இங்கு கடவுள்  மற்றவர்களுக்கு ஆசிர்வாதமாக வாழும்படி ஆபிரகாமை அழைக்கின்றார். கடவுள் தனிமனித  வாழ்வை வலுப்படுத்துவதற்காக எம்மை அழைப்பது இல்லை. மாறாக உலக மக்கள் அனைவருக்கும் ஆசிர்வாதமாக வாழுமாறே எம்மை அழைக்கின்றார்.

கடவுளின் அழைப்பில் நாம் நிறைவேண்டிய பொறுப்பை திருமறை எமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துகின்றது. குறிப்பாக ஆண்டவர் இயேசு தமது சீடர்களை அழைக்கும் போது என்னை பின் தொடர்ந்து வாருங்கள் நான் உங்களை மனிதர்களைப் பிடிக்கின்றவர்கள் ஆக்குவேன் என அழைப்புடன் கூடிய பொறுப்பை வலியுறுத்துகின்றார். ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தப் பின்பு பேதுருவை நோக்கி என் ஆடுகளை நீ மேய்ப்பாயாக என அவனுடைய அழைப்பை மீளவும் உறுதிப்படுத்தி அவன் ஆற்றவேண்டிய பணியின் தன்மையையும் நினைவூட்டுவது அழைப்பில் புலப்படும் பொறுப்புணர்ச்சியை காண்ப்பிக்கின்றது.

ஏசாயா மனித வாழ்வில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் மத்தியில் கடவுளின் திட்டத்தை உணர்ந்து கொள்வதற்காக ஆலயத்திற்கு செல்கின்றனர். ஆனால் அங்கு கடவுள் அசாதாரண சூழலுக்கான காரணத்தையோ அதனட மட்டில் வெளிப்படும் இறைத்திட்டத்தையோ ஏசாயாவிற்கு உணர்த்தவில்லை. மாறாக மனிதர்கள் மட்டில் கடவுள் கொண்டுள்ள கரிசனையையே நாம் காணலாம். ஏசாயா 6:8ம் வாக்கியம் பின்வருமாறு கூறுகின்றது. 'யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? என வினவும் என் தலைவரின் குரலை கேட்டேன்'. அதற்கு 'இதோ நானிருக்கிறேன் அடியேனை அனுப்பும்' என்றேன். இங்கு ஏசாயா தனது பாரத்தை இறைவனிடம் சொல்ல விளைகின்ற போது இறைவன் மாறுத்தரமாக தனது வேதனையை ஏசாயாவிற்கு வெளிப்படுத்துகின்றார். கடவுளின் அழைப்பில் நாம் இறைவனின் வேதனையை உள்ளத்துடிப்பை கடவுள் மனுக்குலம் மட்டில் கொண்டிருக்கும் கரிசனையை எம்மால் புரிந்துக் கொள்ளமுடியும். கடவுள் தன்னுடைய வேதனையை மனுக்குலத்தோடு பகிர்ந்து கொள்வதற்காக மக்களை அழைக்கின்றார். அக்கடின பொறுப்பை நிறைவேற்றும் பணியல் ஏசாயா தன்னை இணைத்துக் கொள்கின்றார். எனவே நாம் வாழும் கடவுள் மக்கள் மட்டில் கொண்டுள்ள பாரத்தை கரிசனையை வெளிப்படுத்துவதற்காக இன்னும் பலரை அழைக்கின்றார்.

அவருடைய அழைப்பிற்கு பிரமாணிக்கமாக பதிலளிக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும். 1910ம் ஆண்டில் எடிம்பரோவில் நடைப்பெற்ற அனைத்துலக தூதுப்பணி மன்றக்கூட்டத்தில் சாள்ஸ் பிறவுன் அவர்கள் கடவுளின் அழைப்பைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார். 'கடவுள் ஒரு மனிதனை அல்லது சமூகத்தை அழைத்து கடமைகளையோ பொறுப்புக்களையோ வழங்கும் போது அதனை நிறைவேற்றுவதற்கு வேண்டிய ஆற்றலையும் சக்தியையும் மக்களையும் வழங்குகின்றார்' எனக் கூறுகின்றார். இதன் ஒளியில் கடவுள் தனது பணியை நிறைவேற்ற மக்களை அழைத்தப்போது மோசேக்கு ஆரோனையும், புனித சின்னப்பருக்கு (பவுலுக்கு) அவருடைய பலவீனத்தில் பலத்தையும் வழங்குகின்றார். இவ் அனுபவங்கள் கடவுளின் அழைப்பில் உடனோடிருக்கும் பிரசன்னத்தை எம்மால் உணர்ந்துக் கொள்ளமுடியும்.

நாம் வாழும் இன்றைய போர்க்கால வறுமை, பல்சமய சூழல்களின் மத்தியில் பணியாற்ற கடவுள் எம்மை அழைக்கின்றார். அவருடைய அழைப்பில் புலப்படும் கடமைப்பாட்டையும் பொறுப்புணர்ச்சியையும் சமூகப் பொறுப்பையும் உணர்ந்துக் கொள்ள வேண்டுமாயாகில் எமது தகுதியற்ற நிலையை நாம் அடிக்கடி உணர்ந்துக் கொள்ளவேண்டும். மேலும் ஆண்டவர் மக்கள் மட்டில் கொண்டுள்ள தன்னுடைய வேதனையை கரிசனையை பகிர்ந்து கொள்வதற்காக இன்னும் மக்களை தேடுகின்றார். அவர் தேடும் மக்களில் அவரது தாகத்தை தீர்க்கும் ஒருவராக எம்மால் மாறிவிட முடியுமா? என சிந்தித்து செயல்படும் காலம் இப்பொழுதே வந்துள்ளது.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக