நாம் வாழும் உலகில் பொதுவாக எல்லா மதங்களும் அறத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகின்றன. கடவுளே அறத்தின் தோற்றுவாய் என இம்மானுவேல் கான்ட் குறிப்பிடுகின்றார். ஆண்டவர் இயேசு தனது மலைப்பொழிவு உபதேசத்தின் போது அறத்தின் அந்தரங்கத் தன்மையைக் குறித்து அதிகம் வலியுறுத்துகின்றார். சிறப்பாக மன்றாடல், தான தர்மம் ஆகிய கருத்துக்களை அதிகம் வலியுறுத்துகின்றார். பொதுவாக அறச்செயல்களில் ஈடுபடுவோர் பிரபல்லியத்தையோ அறச் செயல்களினால் ஏற்படும் நன்மைகளையோ பெற்றுக் கொள்ள விரும்புவர். ஆனால் உண்மையான அறம் என்னவென்றால் அறத்தைப் பெறுவதினால் அவருடைய வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றத்தை, உயர்வைக் கண்டு மகிழ்வடைவதே உண்மையான அறமாகும். ஏசாயா 53 : 12 இல் ஆண்டவர் இயேசு தனது மரண வேதனையின் மத்தியிலும் மற்றவர்களுடைய வாழ்க்கையில் தமது அறப்போதனை ஏற்படுத்திய தாக்கத்தைக் கண்டு மகிழ்வடைந்தார்.
அறங்களும் தானதர்மங்களும் மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் நேர்மறைத் தாக்கத்தினால் அறத்தைப் பெறுவோர் தங்கள் வாழ்க்கையில் அறத்தை வழங்கியோருக்காக கடவுளுக்கு எப்பொழுது நன்றி செலுத்த ஆரம்பி;க்கிறார்களோ அப்பொழுதே எமது அறப்பணியின் உண்மைத் தன்மையை நாம் காணலாம். இதனைத் தான் ஆண்டவர் இயேசு பின்வருமாறு கூறுகின்றார். மனுவிர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்தில் உள்ள உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது எனப் போதிக்கின்றார். எனவே எமது அறப்பணிகள் மற்றவர்கள் முன்பதாக ஒளி வீசுபவைகளாகவும் அவைகள் கடவுள் அண்டை வழிநடத்திச் செல்லும் நற்செய்தி மார்க்கங்களாகவும் காணப்படவேண்டும்.
எமது அறப்பணிகள் அரசியல், மத, பொருளாதார, கலை கலாசார கட்டாயத்தின் பேரினால் புரியப்படுபவைகளாக இருத்தல் கூடாது. சிறப்பாக வரித்தண்டத்தில் இருந்து எம்மை விடுவித்துக் கொள்வதற்காகவோ வன்முறைச் சூழலில் இருந்து எம்மை தப்புவித்துக் கொள்வதற்காகவோ அறத்தை ஒரு கருவியாக பயன்படுத்தக் கூடாது (மத்தேயு 5 : 39 – 42). ஒரு மைல் தூரம் ஒருவர் நடக்குமாறு எம்மைப் பணித்தால் இருமைல் தூரம் நடந்து செல் என ஆண்டவர் இயேசு கூறுகின்றார். இதன் முதல் உரோமச் சூழலில் ஒரு போர்வீரன் தமது பொதியை சுமக்குமாறு ஒருவரை வலியுறுத்தும் போது அவருடன் இணைந்து இரண்டு மைல் தூரம் போர்சேவகனின் பொதியைச் சுமக்குமாறு ஆண்டவர் கூறும் வார்த்தை அறம் வன்முறைச் சூழலில் கட்டாயத்தின் பேரில் புரியப்படாமல் அன்பின் பின்னணியில் ஆற்றப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றார்.
கிறிஸ்தவ அறம் பயனடைவோரின் வளர்ச்சியை மையப்படுத்தியதாகவும், கடவுளின் மாட்சியை வெளிப்படுத்துவதாகவும், அன்பின் அடித்தளத்தில் ஆற்றப்படவேண்டியதன் ஒன்றாகவும் காணப்படுகின்றது.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக