இறையரசில் நுழைவதற்கான பயணத்தில் பலர் ஈடுபடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் ஆண்டவர் சிறுபிள்ளைகளின் மாதிரியை இறை அரசிற்கு சமானப்படுத்துகிறார். இப்பகுதியில் இயேசுவின் சீடர்கள் சிறுபிள்ளைகளை இயேசுவிடத்தில் அணுகுவதற்கு இடமளிக்கவில்லை. ஏனெனில் இயேசு உரோமருடன் போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் சிறுவர்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படும் என்ற காரணத்தால் இவர்களை குறைத்தே மதிப்பிட்டனர். சில சந்தர்ப்பங்களில் திருச்சபை வாழ்விலும் கூட நாம் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. சிறார்களை பெற்றோர்களே இயேசுவிடத்தில் கொண்டு வந்திருக்கக்கூடும். பெற்றோர்கள் தமது சிறார்களை இயேசு தொட வெண்டும் என்றே எதிர்பார்த்தனர். ஆனால் இயேசுவோ அவர்களைத் தூக்கி அரவணைத்து ஆசிர்வதித்ததைக் காணலாம்.
சிறுவர்கள் பொதுவாக வேறு நபர்களைக் குறித்தோ சமூகத்தைக் குறித்தோ தப்பபிப்பிராயம் கொள்வதில்லை. குறிப்பாக இனம், மதம், மொழி, வயது, பால், கலாசாரம் போன்றவைகள் இவர்களைப் பிரிப்பது இல்லை. எனவே மற்றவர்களில் இருந்து தம்மைப் பிரித்துக் கொள்ளாமல் எவ்வாறு மற்றவர்களோடு இணைந்து வாழ்வது என சிந்திப்பவர்களே இவர்களாவர். மேலும் தாழ்மையான உள்ளத்துடன் மற்றவர்களிடம் இருந்து எப்பொழுதும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பண்புடையவர்கள். இத்தகைய பண்பே இறையரசில் வேண்டப்படுகின்றது.
சிறுவர்கள் தம்முடைய முக்கியத்துவத்தை உணராதவர்கள். இத்தகைய பண்பு அவர்களிடம் காணப்படுவதனால் வாழ்க்கையில் முக்கியமான இடங்களுக்காகப் போராடமாட்டர்கள். இதனால் பதவி ஆசையோ, பண ஆசையோ, இவர்களுக்கு ஏற்படுவது இல்லை. மேலும் எப்பொழுதும் பெரியவர்களில் தங்கியிருந்து அவர்களிடம் இருந்து ஆலேசனையைப் பெறுவார். இதன் காரணமாக தங்கி இருக்கும் பண்பை வளர்த்துக் கொள்வர். இந்நிகழ்வு நாமும் கடவுளில் தங்கி இரக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
சிறுவர்கள் பிறரில் சந்தேகம் கொள்ள மாட்டார்கள். இலகுவில் எல்லோரையும் தமக்கு நண்பர்கள் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடத்தில் காணப்படுகிறது. மேலும் அவர்களுக்கு ஞாபகசக்தி மிகக்குறைவாகக் காணப்படுவதனால் மற்றவர்கள் செய்யும் தவறுகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளமாட்டார்கள். இந்நிலையினால் மன்னிக்கும் மனப்பாங்கு அவர்களிடத்தில் வளர பழிவாங்கும் மனப்பான்மையை அகற்றிவிடுகின்றனர். இத்தகைய பண்புகள் இவர்களிடம் காணப்படுவதனாலேயே ஆண்டவர் இயேசு இவர்களை இறையரசிற்கு ஒப்பிடுகின்றார். எனவே இப்பேர்ப்பட்ட பண்புகள் எம்மில் மலர வேண்டுமாயின் மனந்திரும்புதல் அவசியம் ஆகும் (யோவான் 3 : 3). இவர்களுக்கே இறையரசு சொந்தமாகின்றது. எனவே சிறுவர்களின் பண்புகளைத் தரிப்பதன் ஊடாக இறையரசிற்குள் நுழைவோமாக!
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக