திருவிருந்தின் ஊடாக வெளிப்படும் மகிமை

திருவிருந்தின் ஊடாக வெளிப்படும் மகிமை (லூக்கா 22 : 14 – 20)

எமது திருச்சபை வாழ்வில் திருவிருந்து பிரதானமான ஒரு இடத்தை எடுக்கின்றது. அருட்கொடைகளுள் ஆண்டவர் இயேசுவினால் உருவாக்கப்பட்ட ஓர் உன்னத கொடையாக திருவிருந்தை நாம் கருதலாம். திருமறையில் திருவிருந்தின் மேன்மையைக் குறித்தும் அதன் ஊடாக வெளிப்படும் சவால்களைக் குறித்தும் இங்கு ஆராய்வோம்.

ஆண்டவர் இயேசு மரிப்பதற்கு முன்னர் ஏற்படுத்திய திருவிருந்தில் தம்முடைய உடலையும், உதிரத்தையும் மற்றவர்களின் நன்மைக்காக கொடுப்பதாகக் கூறுகின்றார் (லூக்கா 22 : 14 – 20). எனவே திருவிருந்தைப் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வை சிந்தனைகளை, மனப்பாங்குகளை மற்றவர்களின் நன்மைக்காகப் பயன்படுத்துவது மிக அவசியமாகின்றது.

ஆதித்திருச்சபையில் திருவிருந்து ஓர் ஐக்கியத்தை பேணும் அடையாளமாகவும் பகிர்ந்து வாழும் பண்பை உணர்த்தி நிற்பதாகவும் காணப்டுகின்றது (தி. பணிகள் 2 : 42 – 47). இவ் அடையாளச் சின்னம் இன்றைய திருச்சபைக்கு மிகவும் பொருத்தமானதாகும். திருவிருந்தின் ஊடாக ஐக்கியம், பகிர்வு போன்றவை எமது வாழ்வில் மலரும் போது அதன் ஊடாக பிறர் இயேசுவைக் கண்டு கொள்வதற்கு உதவியாக அமையும் (தி. பணிகள் 2 : 47). எனவே திருவிருந்து ஓர் நற்செய்தியைப் பரப்பும் ஊடகமாக காணப்படுகின்றது.

ஆண்டவர் இயேசு எம்மாவூருக்கு சென்று கொண்டிரந்த சீடர்கள் மத்தியில் அப்பத்தைப் பிட்டு சீடர்களுக்கு கொடுத்த வேளையில் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு இயேசுவைக் கண்டார்கள் (லூக்கா 24 : 30). எனவே திருவிருந்தின் ஊடாக சீடர்கள் இயேசுவைக் கண்டார்கள். அதே வகையில் திருவிருந்துப் பந்தி நாம் இயேசுவின் ஆவிக்குரிய பிரசன்னத்தைக் கண்டு கொள்ளவும் அனுபவிக்கவும் வழிவகுக்கின்றது.

திருவிருந்து என்னும் அருட்கொடை வார்த்தை என்னும் அருட்கொடையுடன் இணைந்து பயணம் செய்கின்றது. வார்த்தையாகிய இயேசு திருவிருந்தின ஊடாகவும் மனிதனை வந்தடைகின்றார் (தி. பணிகள் 20 : 7). பவுல் வார்த்தையை அறிவித்து அப்பத்தை பிட்டுக் கொண்டதன் ஊடாக வார்த்தையாகிய இயேசுவை மக்களுக்கு அறிவிக்கின்றார். வார்த்தையும் திருவிருந்தும் இணைந்து செயற்படுவதன் ஊடாக விடுதலை ஏற்படுகின்றது. எனவே திருவிருந்து மனிதனை விடுவிக்கும் ஓர் சாதனமாகும்.

திருவிருந்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் சாதனமாகக் காணப்படுகின்றது. குறிப்பாக பரி. பவுல் உரோமாபுரிக்கு பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கடலில் ஏற்பட்ட புயல்காற்றினால் மாலுமிகளும் பிரயாணிகளும் நம்பிக்கை இழந்தனர். அப்பொழுது பவுல் அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் அப்பத்தை எடுத்துப் பிட்டு அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றார் (தி. பணிகள் 27 : 35). இதன் ஊடாக நம்பிக்கையற்ற மக்களுக்கு நம்பிக்கை அருளும் சாதனமாக திருவிருந்து காணப்படுகின்றது.

எனவே மற்றவர்களுக்கு நன்மை செய்யுமாறு எம்மைத் தூண்டுகின்றதும் நற்செய்தியின் ஊடாகமாகவும் பிறருக்கு விடுதலை, நம்பிக்கை போன்றவற்றை வழங்கும் சாதனமாகவும் திகழ்கின்ற திருவிருந்தை வாழ்வில் அனுபவிக்க மன்றாடுவோமாக!

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக