இயேசுவின் எருசலேம் பவனியும் ஆலய சுத்திகரிப்பும்

இயேசுவின் எருசலேம் பவனியும் ஆலய சுத்திகரிப்பும் (மாற்கு 11: 1 – 19, மத்தேயு 21: 1 – 11, லூக்கா 19: 28 – 40, யோவான் 12 : 12 – 19)

ஆண்டவர் இயேசு தமது பணியின் நிறைவில் எருசலேமிற்கு பவனியாக சென்றார் என சமநோக்கு நற்செய்திகள் கூறி நிற்க, யோவான் நற்செய்தியாளனோ எருசலேம் ஆலய சுத்திகரிப்பு பணியின் ஆரம்பத்தில் இடம்பெற்றதாகக் குறிப்பிடுகின்றார். ஆண்டவர் இயேசுவின் பணியில் வார்த்தைகள் மட்டுமல்ல செயல்களும் பல உண்மைகளைப் போதிக்கின்றன. அவ்வாறு செயல் வடிவம் சார்ந்த போதனாமுறையாக இச்சம்பவம் விளங்குகின்றது. இங்கு பெத்பகே என்பது எருசலேமுக்கு அருகில் உள்ள இடமாகவும் பெத்தானியா என்பது தொலைவில் உள்ள இடமாகவும் காணப்படுகின்றது.

மேலும் ஒலிவமலை யோசிபஸ் என்ற வரலாற்று ஆசிரியரின் சிந்தனைப்படி ஒலிவமலை மேசியாவுடன் தொடர்புடையது எனக் கூறுகின்றார். மனித வாழ்வில் முக்கியமானதையும் முதன்மையானதையும் கடவுளுக்கு கொடுக்க வேண்டும் என்பதை ஒருவனும் ஒருக்காலமும் ஏறி இராத கழுதைக்குட்டி என்ற பதம் சுட்டிக்காட்டுகின்றது (சகரியா 9 : 9, 14 : 4, உபாகமம் 21: 3, 1 சாமுவேல் 6: 7, லூக்கா 23: 53).

பொதுவாகவே யூதர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் அல்லது கடவுளுக்குரியவர் என வாழ்த்துவார். இவ்வாழ்த்தும் ஒலிகள் கூடாரத் திருவிழாவுடனும் பஸ்காப் பண்டிகையுடனும் தொடர்புடையதாகும் (தி. பாடல்கள் 118 : 25, 2 சாமுவேல் 14 : 4, தி. பாடல்கள் 20 : 9). எனினும் ஓசன்னா என்ற சொல்லை மேசியாவிற்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டுமென மறைநூல் அறிஞர்கள் ஆத்திரமடைந்து இயேசுவை நோக்கி ஓசன்னா என்று ஓசையிடாதபடி சீடர்களையும் மக்களையும் வேண்டிக் கொள்ளும் எனக் கேட்டபோது இயேசு அவர்களை நோக்கி இவர்கள் பேசாதிருந்தால் கல்லுகள் புகழ்பாடும் என்றார். இதன் மூலம் கடவுளின் புகழை நாங்கள் அறிவிக்கத் தயங்கும்போது அப்புகழை அறிவிக்க கடவுள் பிறிதொருவரை பயன்படுத்தலாம் என்ற உண்மை புலனாகின்றது.

மக்கள் இயேசுவிடம் இருந்த விருப்பத்தின் நிமித்தமோ இன்னும் அதிகமான புதுமைகளை பெறவேண்டும் என்ற நோக்கத்திற்காகவோ ஆண்டவர் இயேசுவை ஓர் அரசியல் விடுதலையாளனாக எண்ணிய காரணத்திற்காவோ தங்களையும் மறந்து தமது ஆடைகளை கழுதை செல்லும் வீதியிலே விரித்திருந்தார்கள். எனினும் அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பணியை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே கட்டுப்படுத்த விரும்பினர். ஏனெனில் ஆண்டவர் இயேசுவின் மீட்புத்திட்டம் அனைத்துலகம் சார்ந்த ஒன்றாகக் காணப்பட்டது. எனினும் யூதர்கள் இதனை தங்களுக்கு உரியதோர் விடுதலையாகக் கருதினர். எனவே தங்களுடைய சொந்த விருப்பத்தை நிறைவேற்றுமாறு இயேசுவைப் பணித்தனர். ஆனால் இயேசுவோ இதற்கு உடன்படவில்லை. எமது நாளாந்த வாழ்விலும் எமது சித்தத்தை நிறைவேற்றுமாறு கடவுளை வேண்டிக்கொள்ளுவதும் கடவுளைப் பயன்படுத்துவதும் மிகப்பெரிய தவறாகும். எருசலேம் பயணத்தின்போது ஆலய சுத்திகரிப்பு நடந்ததை வசனம் 15 – 19 வரையுள்ள பகுதி காண்பிக்கின்றது. எருசலேம் ஆலயத்தில் பஸ்கா பண்டிகைக்கு வருகின்ற மக்களின் வசதி கருதி பலிப்பொருட்கள் விற்கப்பட்டன. மேலும் யூத நாணயமாகிய திபேரியு நாணயத்தில் காணிக்கை கொடுப்பதற்காக நாணயமாற்று வீதமும் பேணப்பட்டன. இவைகளில் காணப்பட்ட தவறு என்வெனில் மதத்தின் பெயரில், ஆலயத்தின் பெயரில் ஏழைகளை ஒடுக்கியதே ஆகும். குறிப்பாக புற இன மக்கள் வழிபடும் இடங்களில் பலிப்பொருட்களை விற்றதன் ஊடாக வழிபாட்டில் இருந்து அவர்களை ஒதுக்கி வைத்தலை இயேசு கண்டித்தார். நாணயமாற்று வீதத்தில் கள்ளமாற்று வீதத்தை உபயொகித்ததை இயேசு புறக்கணித்தார். மேலும் மதவாதிகள் தங்கள் இல்லங்களுக்கு செல்லும் குறுக்குவழிப் பாதையாக ஆலயத்தைப் பாவித்ததையும் ஆண்டவர் அவதானித்தார்.

கடவளின் பெயரை உபயோகித்து ஏழைகளை ஒதுக்கியதையும் கடவுளை சொந்தப் பயன்பாட்டிற்காக பயன்படுத்தியதையும் ஆண்டவர் இயேசு கண்ட போது கோபமடைந்தார். இது நீதிக்கான கோபமாகவும் வன்முறையற்ற கோபமாகவும் நாம் காணலாம். மேலும் நாங்களும் எமது நாளாந்த வாழ்வில் கடவுளுக்கு எதிராகச் செயற்படும்போது கடவுள் கோப்படுகின்றார். மேலும் ஏசாயா 56 : 6, 7 இல் ஆலயத்தின் நோக்கம் எல்லா மக்களுக்குமான ஜெபவீடாகக் காணப்பட வேண்டும் என்பதே ஆகும். இதனை மாற்கு ஆசிரியர் நன்றாக வலியுறுத்துகிறார். ஆனால் எருசலேம் ஆலயமோ அதனை எல்லா மக்களுக்குமான ஓர் ஆலயமாக மாற்றி விடவில்லை. இதனாலேயே ஆண்டவர் இயேசு இதனைக் கள்ளர்குகை என்கிறார் ( எரேமியா 7 : 11). எனவே ஆலயத்தை தமக்கு உரியதாக மாத்திரம் உபயோகித்து ஆண்டவர் புகழை மற்றவர்களுக்கு அறிவிக்க மறுக்கும் மக்களை ஆண்டவர் இயேசு கள்ளர் எனக் குறிப்பிடுகின்றார்.

இவ்விரண்டு நிகழ்சிகளும் ஆண்டவர் புகழை அறிவிக்க விரும்பிய மக்களை தடுத்த மதக் கூட்டத்தையும் (இயேசுவை ஓசன்னா என்று அறிக்கை இடவேண்டாம் என மதவாதிகள் மக்களைத் தடுத்தனர்). கடவுளின் புகழை சொந்த இலாபத்திற்காக விலை பேசிய பிரதான ஆசாரியர்களையும் இயேசு கண்டிக்கிறார். ஓர் கல்லின்மேல் கல் இராதபடி அனைத்தும் அழிந்து போகும் என ஆண்டவர் கூறிய வார்த்தை கி. பி 70 இல் நிறைவேறியது. எனவே கடவுளின் புகழை எமது வாழ்க்கை ஊடாகவும் வர்த்தை ஊடாகவும் அறிவிக்க அழைக்கப்படுகின்றோம்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக