இயேசுவை கொல்லாதிருங்கள்

மீண்டும் ஓர் வருடத்தின் நிறைவில் இயேசுவின் பிறப்பை நினைந்துகொள்ள கடவுள் எங்களுக்கு ஓர் வாய்ப்பை தந்துள்ளார். இயேசுவின் பிறப்பின் கதையை நாம் படிக்கும்போது மத்தேயு 2:1-17 வசனங்களில் இயேசுவை ஏரோது அரசன் கொலை செய்யத் தேடுவதை நாம் பார்கின்றோம். இம்முயற்சி ஏரோதுவும் பிலாத்துவும் இணைந்து செயற்படுவதன் ஊடாக அவரை சிலுவைக்கு ஒப்புகொடுக்கின்றனர். அத்துடன் இயேசுவை கொலையும் செய்கின்றனர்.

இயேசுவை கொலை செய்தல் என்பது அவரது ஆளுமையை, பணியை கொல்லுவதற்கு சமமாகின்றது. ஏசாயா 11:6-9 ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசு நீதியை இவ்வுலகில் ஏற்படுத்துவதற்காக வருகை தந்தார் என நாம் படிக்கின்றோம். அவரது பணியை நாம் உற்று நோக்கும் போது இவ்வுண்மை புலாணாகின்றது. எனவே சமூகத்தில் நீதியை ஏற்படுத்துவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இக்கடமையை நாம் கொல்லுவது கிறிஸ்துவை கொல்லுவதற்கு சமமாக காணப்படுகின்றது.

இயேசுவின் பிறப்பில் ஒற்றுமை முக்கியமாக காணப்படுகின்றது. அவரது பிறப்பு ஏழையையும் பணக்காரனையும், படித்தவனையும் பாமரனையும், ஞானிகளையும் மேய்ப்பர்களையும், ஒன்றாக இணைத்திருந்தது. இவ் இணைப்புப் பணியையே கடவுள் இயேசுகிறிஸ்துவிடம் கொடுத்துள்ளதாக பரிசுத்த பவுல் 2 கொரிந்தியர் 5:17-20 ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் கூறுகின்றார். இந்த ஒப்புரவாக்குதலின் பணி இன்றைய இலங்கை சூழலில் மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது. இப்பணியை செய்ய வந்த இயேசுவையே ஏரோது கொல்ல தேடினான். இன்றும் இப்பணியை செய்வோர் பல அச்சுறுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். இவர்களை கொல்லுதல் இயேசுவை கொலை செய்வதற்கு சமமாக காணப்படுகின்றது.

ஏசாயா 6 ஆம் அதிகாரம் 9 ஆம் வசனத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இயேசு இவ்வுலகிற்கு வருகை தந்ததாக நாம் படிக்கின்றோம். இப்பணியை ஆண்டவர் எங்களிடத்தில் தந்துள்ளார். அதாவது அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் அவர்கள் கடவுளின் பிள்ளைகள் எனப்படுவர். யோவான் 20: 19 ஆம் வசனம் முதல் 23 ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்கு அமைதியை அருளுகின்றார். தற்காலிக அமைதியை ஏற்படுத்துவதற்காக பிலாத்து இயேசுவை கொலை செய்தான். இன்றும் சமூகத்தில் தற்காலிக அமைதியை ஏற்படுத்துவதற்காக பலர் கொல்லப்படுகின்றனர். அமைதிக்காக பாடுபடுவோரை கொலை செய்தல் இயேசுவை கொலை செய்வதற்கு சமமாகின்றது.

இயேசுவின் பிறப்பை பற்றி பரிசுத்த பவுல் கூறும்போது கடவுளுக்கு சமமாக இருந்த இயேசு எல்லாவற்றையும் விட்டு அடிமையின் தாழ்மையின் உருவெடுத்ததாக பிலிப்பியர் 2 ஆம் அதிகாரம் 5 ஆம் வசனம் முதல் 11 ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் குறிப்பிடுகின்றார். இயேசுவின் பிறப்பு எம்மை நாமே மற்றவர்களுக்காக இழக்க அழைக்கின்றது. இவ்வழைப்பிற்கு எதிராக நாம் செயற்படும் போது இயேசுவை கொலை செய்ய முற்படுகின்றோம். ஏரோது மற்றவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக துக்கத்தை உண்டாக்கினான். மற்றவர்களின் வாழ்வில் துக்கத்தை ஏற்படுத்துவோர் இயேசுவை கொலை செய்ய தேடும் மக்களின் பட்டியலுக்குள் உள்ளடக்கப்பபடவேண்டும்.

இவ்வுலகில் ஆண்டவர் இயேசு நீதியை, ஒப்புரவாகுதலை, அமைதியை மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக வருகை தந்தார். எனினும் இவைகளை ஏற்று கொள்ளாத ஏரோது இயேசுவை கொலைசெய்ய தேடினான். இன்றும் நாம் அமைதிக்காக, நீதிக்காக, ஒற்றுமைக்காக பணி செய்ய மறுக்கும்போதோ அல்லது பணி செய்பவர்களை துன்பப்படுத்தும்போதோ இயேசுவை கொலைசெய்கின்றோம். எனவே இந்த கிறிஸ்து பிறப்பின் போதாவது இயேசுவை கொலைசெய்யாதிருக்க பார்த்துக்கொள்வோமாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக