எல்லை கடந்த அன்பு

எல்லை கடந்த அன்பு (மாற்கு 7 : 24 – 30)

ஒத்தமைவு நற்செய்திகளில் காணப்படும் இச்சம்பவம் விளங்கிக் கொள்வதற்கும் விளங்கப்படுத்துவதற்கும் கடினமானதாகக் காணப்படுகின்றது. குறிப்பாக ஆண்டவர் இயேசு கலிலேயாவை விட்டு புறவின மக்கள் வாழும் பகுதிக்குள் செல்லுகின்றார். உதாரணமாக ஏரோதுவை நோக்கி நரி எனக் குறிப்பிட்ட இயேசு (லூக்கா 13 : 31) ஏரோதுவின் அச்சுறுத்தலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சென்றிருக்கக் கூடும். இல்லையேல் தனது திருப்பணியில் ஓய்ந்திருந்து இறைவனுடன் மன்றாடுவதற்காக சென்றிருக்கக் கூடும். (மாற்கு 6: 14 – 16). திருப்பணியில் இறைவனுடன் தனித்திருந்து உரையாடுதல் மிகவும் வேண்டப்படும் ஒன்றாகும். இயேசுவிற்கும் கானானியப் பெண்ணுக்கும் இடையே நடைபெறும் உரையாடலை 3 நிலைகளுக்குள் உள்வாங்கலாம். முதலாவதாக கானானியப் பெண்மணியும் ஆண்டவர் இயேசுவும் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தும் நிலை ஆகும். இரண்டாவதாக இருவருமாக தங்கள் அடையாளங்களைக் குறித்துப் புரட்சிப் போராட்டத்தில் ஈடுபடும் நிலை. இந்நிலையிலேயே ஆண்டவர் இயேசு பெண்மணியை நொக்கி பிள்ளைகளின் அப்பத்தை நாய்க் குட்டிகளுக்குப் போடுவது நலமல்ல எனக் கூறுகின்றார். அப்பொழுது பெண்மணி மேசையில் இருந்து விழும் துணிக்கைகளை நாய்க்குட்டிகள் தின்னுமே என இறையியல் ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் வாதாடுகின்றார். இத்தகைய சூழ்நிலையில் இயேசுவிற்குள் ஏற்படும் மாற்ற நிலையையே மீள்பரிசீலனை நிலை என அழைக்கின்றோம். இங்கே ஆண்டவர் இயேசுவிற்குள் ஓர் மாற்ற உணர்வு ஏற்படுகின்றது. பெண்ணிடமிருந்து கற்றுக்கொண்டதற்கு அமைய தன்னிலே தானே மனமாற்றமடைய வேண்டும் என இயேசு விரும்பினார். எனவே எமது நாளாந்த வாழ்வில் மாற்றங்கள் எத்தகைய சூழ்நிலைகளிலோ அல்லது யாரிடம் இருந்தோ வந்தாலும் நாம் அதை ஏற்றுக் கொள்ள அழைக்கப்படுகின்றோம்.

மத்தேயு நற்செய்தியின்படி ஆண்டவர் இயேசு பெண்மணியை நோக்கி அம்மா உமது விசுவாசம் பெரிது எனப் பாராட்டுகின்றார். இப்பெண்மணி இனம், மதம், மொழிஈ கலாசாரம் ஆகிய எல்லைகள் அனைத்தையும் தாண்டி கிறிஸ்துவண்டை வருகின்றார். இங்கே இறுதியியல் நம்பிக்கையின் அடித்தளத்தில் கிறிஸ்துவுக்குள் அனைத்தும் கூட்டிணைக்கப்படும் என்ற உண்மை முழுமை அடைகின்றது. (எபேசி 1 : 10). மேலும் இப்டிபண்மணி இயேசுவை நோக்கி ஆண்டவரே முதலில் உமது பிள்ளைகள் உண்ணட்டும் மிகுதியாக ஏதாவது ஆசிர்வாதம் இருந்தால் அதை என்னுடைய பிள்ளைக்குத் தந்தருளும் என மன்றாடுகின்றார். இத்தகைய மன்றாடல் இன்று திருச்சபைக்கு அவசியமானதாகும். கடவுளே உம்முடைய அசிர்வாதத்தை உலகில் உள்ள, தேவை உள்ள மக்களுக்கு அளித்தருளும். மிகுதியாக ஏதாவது இருப்பின் என்னை ஆசிர்வதியும் என மன்றாட அழைக்கப்படுகின்றோம். இம்மன்றாடல் மற்றவர்கள் மையம் சார்ந்த, சமூகம் சார்ந்த மன்றாடலிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். இதனையே திருவிருந்துப் பற்றி ஞாபகப்படுத்துகின்றது.

ஆண்டவர் இயேசு இப்புதுமையை செய்ததன் ஊடாக தன்னுடைய பணி யூத இனத்திற்கு மாத்திரம் உரித்தானது ஒன்றல்ல. அது அனைத்துலகம் சார்ந்த ஒன்றாகும் என்பதை நிரூபித்தார். (மத்தேயு 8 : 11, மத்தேயு 28 : 19, 20) மேலும் ஆண்டவர் இயேசு இப்பெண்ணைக் குணமாகக்pய போதிலும் தன்னைப் பின்பற்றி வருமாறு வற்புறுத்தவில்லை. இது எமக்கு சவால்தரும் ஒரு செய்தி ஆகும். ஏனெனில் இன்றைய நாட்களில் சுகமளித்தல் நிகழ்வு இயேசுவின் மேசியத்துவத்தின் அடையாளமாகப் பார்க்கப்படாமல் மாறாக மதமாற்றத்தின் கருவியாக வரலாற்றிலும் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது சில சந்தர்ப்பங்களில் மதங்களுக்கு இடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக