துணிச்சலுடன் நற்செய்தியை அறிவித்தல் (மாற்கு 6 : 14 – 29)
பழைய புதிய ஏற்பாடுகளில் இறைவாக்குகளைப் பற்றியும் இறைவாக்கினரைப் பற்றியும் நாம் காணலாம். சிறப்பாக துணிவுடன் கடவுளுடைய வார்த்தையை எடுத்தக் கூறும் போது நமது வாழ்வில் பல்வேறு அனுபவங்களுக்குள் நாம் செல்ல வேண்டிய தேவை ஏற்படலாம். இவற்றை இங்கு கவனிப்போம்.
துணிச்சலுடன் இறைவாக்கினை நாம் எடுத்துச் சொல்லும்போது அவ்வார்த்தை மக்கள் மத்தியில் அசெகரிய நிலையைத் தோற்றுவிக்கலாம். இதன் காரணமாக மக்கள் இறைவார்த்தையைக் குறித்துப் பேசாமல் அவ்வார்த்தையை அறிவித்தவரைக் குறித்து விமர்சிப்பதை அவதானிக்கலாம். குறிப்பாக ஆண்டவர் இயேசு நாசரேத்தூர் செப ஆலயத்தில் அனைத்துலக கடவுளின் தன்மையைப் பற்றி (லூக்கா 4 : 16 – 21, மத்தேயு 5 : 45, 46) எடுத்துக் கூறிய போது மக்கள் அவ்வார்த்தையைக் குறித்தும் குடும்பப் பின்னணியைக் குறித்தும் விமர்சிப்பதைப் பார்க்கின்றோம். (மாற்கு 6 :3).
இறைவாக்கு உரைக்கும் பணியில் இன்னுமோர். அனுபவம் தனிமை ஆகும். உண்மைக்காக, நீதிக்காக நாம் பணியாற்றும் பொது தனிமனிதராலோ சமூகத்தாலோ குடும்பங்களாலோ தனிமைப்படுத்தப்படலாம். குறிப்பாக ஆண்டவர் இயேசு தனது இறைவாக்குப் பணியின் நிமித்தம் தனிமைப்படுத்தும் அனபவத்தை அனுபவித்தார். இதனாலேயே தனது தந்தையை நோக்கி ' என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்' எனப் புலம்புகின்றார். (மாற்கு 15 : 34). இவ் அனுபவம் தந்தையாலும் சீடர்களாலும் சமூக உறுப்பினர்களாலும் கைவிடப்பட்டபோது மனக்கசப்பினால் எழுந்த வார்த்ததைகள் ஆகும்.
துணிவுடன் கடவுளின் வார்த்தையை எடுத்துக் கூறும்போது சில சந்தர்ப்பங்களில் மக்கள் எங்களை சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். உதாரணமாக எரேமியா இறைவாக்கினர் யூதர்கள் சிறையிருப்பிற்கு செல்வதற்கு மன்னர் பபிலோனியர்கள் இடத்தில் யூதர்களை சரண் புகுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் யூதர்களோ எரேமியா இறைவாக்கினரின் வார்த்தைக்கு கீழ்ப்படிய மறுத்து எரேமியா இறைவாக்கினர் தங்களுடைய அரசியல் பலத்தை குறைத்து மதிப்பிடும் துரோகி எனக் கூறி அவர் மீது சந்தேகப்பட்டு பலவகையான இன்னல்களை அவரக்குக் கொடுத்தனர். இறைவாக்கு உரைக்கும் பணியின் உச்சக் கட்டத்தண்டனையாகக் கிடைப்பது மரணமாகும். உதாரணமாக யோவான் ஸ்நானகன் ஏரோதுவை நோக்கி உன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவியை உனது மனைவியாக நீர் வைத்துக் கொள்வது தவறு எனக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஏரோது தனது மகளின் வேண்டுதலுக்கு அமைய யோவான் ஸ்நானகனைக் கொலை செய்தான். உண்மையை இடித்துக் கூறும் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பரிசு இதுவே ஆகும். (மாற்கு 6 : 14 – 29).
இறைவாக்கு உரைவாக்கும் அனுபவம் எமது வாழ்வில் விமர்சனத்தையோ, தனிமை அனுபவத்தையோ, சந்தேகப் பார்வையையோ, மரணத்தையோ கொண்டு வரலாம். ஆனால் இவைகள் அனைத்தும் எமது பணிக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்கள் ஆகும். எனவே துணிச்சலுடன் நற்செய்தயை அறிவிக்க தூயவரிடம் வேண்டுவோமாக.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக