எமது நாளாந்த வாழ்வில் ஏதாவது ஒரு பணியை செய்ய வேண்டுமாயின் ஆயத்தங்கள் மிக அவசியமாக தேவைப்படுகின்றது. இதன் ஒளியில் ஆண்டவர் இயேசுவின் பிறப்பை உற்றுநோக்கும் போது அங்கே இறைவன் பல ஆயத்தங்களை புரிந்ததாக திருமறை கூறுகின்றது. கலாத்தியர் 4ம் அதிகாரத்தில் 4ம் வசனத்தில் காலம் நிறைவேறியபோது கடவுள் தனது மைந்தனை உலகிற்கு அனுப்பியதாக புனித பவுல் அல்லது சின்னப்பர் கூறுகின்றார். அதாவது இங்கு காலம் நிறைவேறுதல் என்பது இயேசு பிறப்பதற்கான புவியியல், மத, அரசியல், பொருளாதார, சூழ்நிலைகளை கடவுள் ஆயத்தப்படுத்தி உள்ளார் என்பதே இதன் அர்த்தமாகும். உதாரணமாக பலஸ்தீன புவியியல், யூத சமய மேசியா எதிர்ப்பார்ப்புக் கொள்கை, கிரேக்க கலாசாரம், உரோம பொருளாதார நிலைகள் போன்றவைகள் அனைத்தையும் கடவுள் ஆயத்தப் படுத்தியதே இதன் அர்த்தமாகும்.
![]() |
இயேசுவின் அழைப்பில் இறைவனின் ஆயத்தம் |
கிறிஸ்துவின் பிறப்பு சம்பவத்தில் கடவுள் இயேசுவை ஆயத்தப்படுத்தியமை புதுமை தரும் ஒன்றாகும். யோவான் நற்செய்திப்படி (யோவான் 1:1-5) இறைவனோடு இயேசு இருந்தார் எனக் கூறப்படுகின்றது. எனினும் பிலிப்பியர் 2:5-11 வரையுள்ள பகுதியில் இறைவனுக்கு சமமாக இருந்த இயேசு தன் நிலைகளை விட்டு இறங்கி மனித சாயலாகி அடிமை நிலையை எடுத்தார் என பவுல் கூறுகின்றார். மேலும் இயேசுவின் பிறப்பில் புலப்படும் சத்திரத்தில் இடமில்லாத அனுபவம் எகிப்திற்கு அகதியாக கொண்டு செல்லப்படும் அனுபவம் போன்ற கசப்பின் அனுபவங்களையும் இயேசுவின் பணியில் ஏற்படப் போகும் தனிமை அனுபவம், சிலுவை மரணம் ஆகிய அனுபவங்களை அனுபவிக்கும் பாதையில் கடவுள் இயேசுவை ஆயத்தப்படுத்தினார்.
இயேசுவின் பிறப்பில் அவரது பெற்றோரான மரியாள், யோசேப்பு ஆகியோரை ஆயத்தப்படுத்திய முறையும் புதுமையானதொன்றாகும். லூக்கா 1ம் அதிகாரம் 26 முதல் 38ம் வசனம் வரையுள்ள பகுதியில் மரியாள் மற்றவர்களின் மீட்பிற்காக ஆண்டவர் இயேசுவை உலகிற்கு ஈந்தருளும் பணியில் அவளுக்கு ஏற்பட இருக்கும் சவால்கள், பயங்கள், அவமானங்கள், இடர்பாடுகள் போன்றவற்றின் மத்தியில் இறைவன் அவளோடு இருப்பாள் என வாக்களித்து அவளை தயார்படுத்தும் முறை அற்புதமானதொன்றாகும். மேலும் மத்தேயு 1;:18-25 வரையுள்ள பகுதியில் மரியாளை ஏற்றுக்கொள்ள ஐயப்பட்ட யோசேப்பை பலப்படுத்தி மீட்புப்பாதையில் பயணிக்கச் செய்த கடவுளின் ஆயத்தம் அளப்பரியதாகும்.
இயேசுவின் பிறப்பில் இறைவன் தகுந்த முறையில் இயற்கையை ஆயத்தப்படுத்தியதை மறந்துவிடக் கூடாது. மத்தேயு 2:1-12ல் ஞானிகளை வழிநடத்த விடிவெள்ளியை ஏற்படுத்தல், இயற்கையில் விண்தூதுவரிகளின் அமைதிப்பாடல், போன்றவைகள் இயற்கை இயேசுவின் பிறப்பை அங்கீகரிப்பதை காணலாம். மேலும் இயேசுவின் பிறப்பில் யூதர்கள் அல்லாத ஞானிகள் சென்று பார்க்கும் நிலை சமுதாயத்தினால் ஓரங்கட்டப்பட்ட மேய்ப்பர்கள் தரிசிக்கும் நிலை போன்றவைகளை குறிப்பிடலாம். மேலும் லூக்கா 2:29-32ம் வசனம் வரையுள்ள பகுதியில் சிமியோன் இயேசுவை கையில் ஏந்தி அவரை புகழ் பாடுவதை காணலாம்.அதாவது இஸ்ரயேலருக்கு ஆறுதலையும் யூதரல்லாதவர்களுக்கும் ஒளியையும் கொடுக்க வந்த கடவுளால் ஏற்படுத்தப்பட்ட இயேசுவை தன் கண்களால் கண்டன என கடவுளுக்கு நன்றி புகழ் பாடினார். இந்நிகழ்வு எவ்வாறு கடவுள் ஆலயத்தையும் அருட்பணியாளர்களையும் ஆண்டவர் இயேசுவின் பிறப்பை காண தயார்ப்படுத்தினார் என்பதை லூக்கா காண்ப்பிக்கின்றார். மேலும் அக்காலத்தில் நிலவிய ஆடம்பர வாழ்வுக்கு எதிராக எளிமை, தாழ்மை போன்ற எண்ணக்கருக்களையும் ஆணாதிக்கதிற்கு எதிராக சமத்துவ தொனியையும் ஒடுக்குமுறைக்கு எதிராக விடுதலை ஒலியையும் துக்கத்திற்கு எதிராக மகிழ்ச்சியையும் கடவுள் ஏற்படுத்தியதை இயேசுவின் பிறப்பு நிகழ்வில் நாம் கண்டு கொள்ளலாம்.
இன்றைய போருக்கு பின்னான எமது அரசியல், பொருளாதார, சமூக, மத, கலை, கலாசாரச் சூழல்களின் மத்தியில் கிறிஸ்தவ பிறப்பை நாம் நினைந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றோம். அன்று கடவுள் எவ்வாறு புறச்சூழல்களை இயேசுவின் பிறப்பிற்கு ஆயத்தம் செய்தாரோ அதே வகையில் கடவுள் எமது புறச்சூழல்களை அவருக்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைக்க இடமளிக்க அழைக்கப்படுகின்றோம். மேலும் யோசேப்பும், மரியாளும் கிறிஸ்துவின் பிறப்பிற்காக தங்களை புடமிடுவதற்கு எவ்வாறு அர்ப்பணித்தார்ளோ அதே வகையில் குடும்பங்கள் இக்காலத்தில் தங்களை கிறிஸ்துவின் பிறப்பிற்காக அர்ப்பணிக்க அழைக்கப்படுகின்றான். மேலும் அன்று கடவுள் சிமியோனையும் ஆலயத்தையும் இயேசுவை வரவேற்க ஏற்றுக்கொள்ள எவ்வாறு ஆயத்தமாக்கினரோ அதே வகையில் ஆறுதலை கொடுக்கவல்ல ஆண்டவரை தரிசிக்கும் வகையில் எங்கள் அக ஆலயங்கள் ஆயத்தப்படவேண்டும்.
அன்று இயேசுவின் பிறப்பிற்காக கடவுள் எத்தகைய ஆயத்தங்களை மேற்கொண்டாரோ அதே ஆயத்தங்களை இன்றும் அவர் செய்து கொண்டு இருக்கின்றார்.எனவே தனிமனிதர்களாக, குடும்பங்களாக, திருச்சபையாகத், தேசமாக இயேசுவின் பிறப்பிற்காக கடவுள் எங்களை தமக்கு ஏற்றவிதத்தில் ஆயத்தப்படுத்த இடமளிப்போமாக!
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக