யூத வரலாற்றில் அப்பாவிகளின் துன்பத்தைக் குறித்து மக்களிடையே அநேக வினாக்கள் காணப்பட்டன. குறிப்பாக எசேக்கியா மன்னனின் மரணம், கிரேக்க அடிமைத்தனத்தின் காலப்பகுதியில் ஓய்வு நாளில் யூத சட்டத்தின் படி யுத்தம் செய்ய மறுத்து ஆலயத்திற்குள் நிராயுதபாணிகளாக காணப்பட்ட மக்களின் கொலை போன்றவற்றின் மத்தியில் யூதர்கள் ஏன் அப்பாவிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற வினாவை எழுப்பினர். இதன் ஒளியில் இயேசு பிறந்தபோது பெத்தலகேமில் 2 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளின் கொலை, மோசேயின் காலத்தில் எகிப்தில் ஏற்பட்ட குழந்தைகளின் மரணம் போன்றவற்றை உள்ளடக்கலாம்.
![]() |
அப்பாவிகளின் மரணம் |
மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் குறிப்பாக இயேசுவின் பிறப்பின்போது கொல்லப்பட்ட குழந்தைகளின் மரணத்தை உற்றுநோக்கும்போது மீட்பின் வரலாற்றில் அவர்கள் இயேசுவுடன் இணைந்து இரத்தத்தை சிந்தியதன் ஊடாக தொடரும் மீட்புப்பணிக்கு தங்களுடைய பங்களிப்பை செலுத்தி இருந்தனர். மேலும் திரு.வெளி 7:7-14ல் நீதிக்காகவும் உண்மைக்காகவும் துன்புறுத்தப்பட்டு ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட புனிதர்களுடன் இக்குழந்தைகளும் உள்வாங்கப்படுகின்றனர். நீதிக்காக செயல்படும் அனைத்து
அப்பாவிகளுக்கும் இப்பெறும் வாய்ப்பு கிட்டிச்சேரும்.
ஒருவருடைய தவறு இன்னுமொருவரை பாதிக்கும் என்ற உண்மை இங்கு நிரூபிக்கப்படுகின்றது. குறிப்பாக ஏரோதுவுக்கு இருந்த அதிகார வெறி குழந்தைகளை பதம் பார்த்தது. எனவே குழந்தைகள் தங்களுடைய சொந்த தவறினால் மரிக்கவில்லை.மாறாக இன்னுமொருவரின் பாவத்தினால் உண்டான விளைவிற்கே இலக்கானார்கள். இதனையே சமூகப் பாவம் என அழைக்கின்றோம். எனவே நாங்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் துன்பத்திற்கு பொறுப்பு கூறவேண்டியவர்களாக காணப்படுகின்றோம். (தொ.நூல் 4:1-10)
"எகிப்தில் இருந்து எனது குமாரனை அழைத்தேன்" (ஓசேயா 11:1) என மத்தேயு கூறும்பகுதி இஸ்ரவேல் மக்கள் எகிப்திய அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நிகழ்வுடன் தொடர்புடையதாகும். மேலும் இராமாவிலே ஏற்பட்ட புலம்பல் பழைய ஏற்பாட்டில் யூதர்கள் பபிலோனியாவிற்கு நாடுகடத்தப்பட்ட வேளையில் இராமாவிலே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முத்தமிட்டு, ஓலமிட்டு ஆயுதபாணிகளாகிய பபிலோனியருக்கு தாரை வார்த்த சம்பவத்திற்கு நிகரான ஓலம் இயேசுவின் காலத்தில் ஏற்பட்டது எனக் காண்பித்து இயேசுவை புதிய இஸ்ரவேலனாகவும் துன்பப்படுகின்ற மக்களுடன் இணைந்து துன்பப்படுபவராகவும் காண்பிக்கின்றார். இயேசுவின் எகிப்தை நோக்கிய இடம் பெயர்வு, அகதி அனுபவம் அனைத்தும் இயேசுவின் துன்புறும் பணிக்கான முன் ஏற்பாடுகளே ஆகும்.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக