பேதுருவின் அறிக்கை

பேதுருவின் அறிக்கை (யோவான் 6 : 66 – 71) 

நான்கு நசற்செய்திகளிலும் பேதுரு இயேசுவைக் குறித்துக் கூறிய அறிக்கைகள் காணப்படுகின்றன. ஒத்தமைவு நற்செய்தியில் இயேசுவின் அறிக்கை பிலிப்பி , செசரியா ஆகிய பட்டணங்களில் இடம்பெற்றதாக நற்செய்தியாளர்கள் கூறுகின்றனர் (லூக்கா 9 : 18 – 21, மத்தேயு 16 : 13 – 19, மாற்கு 8 : 27 – 29). இத்தகைய அறிக்கைளில் இருந்து யோவானில் காணப்படும் பேதுருவின் அறிக்கை முக்கியமானதாகும். ஏனெனில் இயேசுவின் சீடர்களில் அநேகர் அவரை விட்டு பின்வாங்கிச் சென்றபோது பேதுரு இயேசுவை நோக்கி யாரிடத்தில் நாம் செல்லுவோம்? வாழ்வு தரும் வார்த்தைகள் எல்லாம் உம்மிடத்தில் உள்ளதென அறிக்கை இடுகிறார்.

இயேசுவைப் பின்பற்ற விரும்பியோர் ஏதோவொரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டு அவரைப் பின்பற்ற முற்பட்டனர். அக்காரணங்கள் பூர்த்தியாகாமல் போகும் வேளையில் அவரை பின்பற்றுவதை விட்டுவிட ஆரம்பித்தனர். அதாவது நற்செய்தி ஏதோவொரு இலாபத்தைப் பெற்றுத்தரும் என்ற நோக்கத்திலே அவர்கள் செயற்பட ஆரம்பித்தனர். அந்நோக்கம் நிறைவடையாமல் நற்செய்தியின் கடினத்தன்மையை அவர்கள் உணர்ந்தபோது இயேசுவை விட்டு பின்வாங்க ஆரம்பித்தனர்.

பேதுருவின் அறிக்கை இயேசுவிற்கும் பேதுருவிற்கும் இடையே நிலவிய தனிப்பட்ட உறவின் அடித்தளத்தில் ஏற்பட்ட ஓர் அறிக்கை அகும். அதாவது கிறிஸ்தவ மதம் ஓர் தத்துவமோ இல்லையேல் கொள்கையோ அல்ல. மாறாக அனுபவத்தில் இருந்து எழும் உண்மையை அடித்தளமாகக் கொண்டு எழும் ஓர் மதமாகும். இதன் ஒளியில் இயேசுவைப் பற்றிய அறிக்கைகள் அனுபவத்தில் இருந்து எழ வேண்டியதன் முக்கியத்துவத்தை எமக்குக் காண்பிக்கின்றது.

ஒத்தமைவு நற்செய்தியில் பேதுரு இயேசுவை உயிருள்ள கிறிஸ்து என அறிக்கையிடுகிறார். பேதுரு மேற்கொண்ட அறிக்கை ஓர் ஆபத்துத் தன்மை மிக்கதாகும். ஏனெனில் இவ் அறிக்கைக்கு ஏற்ப அவன் வாழ அழைக்கப்பட்டான். நாமும் எமது திருமுழுக்கின் போது இயேசுவை உயிருள்ள ஆண்டவராக அறிக்கை இடுகின்றோம். இவ் அறிக்கையின்படி வாழ்வதே அழைப்பின் நோக்கமாகும். அறிக்கைகள் உணர்வின் அடித்தளத்தில் மேற்கொள்ளப்படாமல் மாறாக விசுவாசத்தின் அடித்தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே இயேசுவைக் குறித்து நாம் மேற்கொள்ளும் அறிக்கைகள் அவர் மீது நாம் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகவும் காணப்படலாம்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக