திருமறைப் பகுதிகள்
- பழைய ஏற்பாடு (யோனா 1 : 1 – 3)
- புதிய ஏற்பாடு (தி. பணிகள் 10 : 9 – 16)
30 ஆண்டு நடைபெற்ற கொடிய யுத்தம் முடிவடைந்துவிட்டது என பெருமூச்சிவிட்டாலும் முறண்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இத்தகைய சூழலில் ஒப்புரவாகுதலின் ஊடாக விரும்பப்படும் அமைதியை நோக்கி நாம் பயணிக்க வேண்டும் என பலரும் பேசுகின்றனர். ஒப்புரவாகுதல் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயும், மனிதனுக்கும் சக மனிதனுக்கும் இடையேயும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயும் ஏற்படுத்த வேண்டிய தேவையை இன்று உலகம் உணருகின்றது. இப்பணி கடவுளால் முன்னெடுக்கப்பட்டு திருச்சபையினால் தொடர்ந்தாற்றப்பட கொடுக்கப்பட்டதொன்றாகும் (2 கொரிந்தியார் 5 : 17 – 18, யோவான் 20 : 21). இப்பணியில் மனமாற்றத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகினறது. இன்றைய லெந்து கால சூழலில் மனிதனுக்கும் சக மனிதனுக்கும் இடையே அல்லது சமூகங்களுக்கு இடையே ஒப்புரவாகுதலின் ஊடாக அமைதியை நோக்கிப் பயணிக்கும் போது மனமாற்றத்தின் பங்களிப்பு எத்தகையதாக அமைய வேண்டும் என்பதை இங்கு ஆராய்வோம்.
மனமாற்றம் என்ற சொல் மக்களிடையே மலிந்து காணப்படுகின்ற மதமாற்றம் என்ற சொல்லில் இருந்து வேறுபடுகின்றது. இந்நிலை உண்மையிலே மனந்திரும்புதல் என்றால் என்பதைக் குறித்து சிந்திக்க எம்மை அழைக்கின்றது. புதிய ஏற்பாட்டில் மெற்றனோயா (metanoia) என்ற சொல் உள்ளான மனமாற்றத்தைக் குறிக்கப் பாவிக்கப்படுகின்றது. மாற்றத்திற்கான அழைப்பு அகில உலகம் சார்ந்த ஒன்றாகும். திருமுழுக்கு யோவான் தனது போதனையிலும் (மாற்கு 1 : 4 ), ஆண்டவர் இயேசு தனது போதனையிலும் (மாற்கு 1 : 14, 15 ), திருத்தூதுவர்கள் தமது போதனைகளிலும் ( தி. பணிகள் 2 : 38) மனமாற்றத்திற்கான அழைப்பை விடுகின்றனர். இப்பணி திருச்சபைக்கு உள்ளும் திருச்சபைக்கு வெளியிலும் ஆரம்;பிக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
யோனாவின் வாழ்வையும் பணியையும் உற்று நோக்கும் போது கடவுள் யோனாவை பார்த்து, நினிவே பட்டணத்திற்குச் சென்று நற்செய்தியை அறிவிக்குமாறு வேண்டுகிறார். ஆனால் யோனாவோ நினிவேக்குச் செல்லாமல் தர்சு பட்டணத்திற்குப் பயணமாகின்றார் (யோனா 1 : 3). ஏனெனில் இஸ்ரயேல் மக்களை கி. மு 722 இல் அசீரியர்கள் அழித்தனர். இந்த அசீரியர்களின் தலைநகரமே நினிவேப் பட்டணமாகும். எனவே, வரலாற்றில் நடைபெற்ற ஒரு கசப்பு அனுபவத்தை மனதில் வைத்துக் கொண்ட யோனா நினிவே மக்களின் அழிவைக் காண விரும்பினானே ஒழிய மாறாக அவர்களின் மாற்றத்தின் ஊடாகப் பிறக்கும் வாழ்வைக் காண விரும்பவில்லை. எனவே தான் தன் எதிரி அழிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நினிவேக்கு செல்லாமல் தர்சுக்கு கப்பல் ஏறுகின்றான். இங்கு நினிவே மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதற்கு முன்னர் (யோனா 3 : 5 – 8) அந்த மக்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை யோனாவிற்கு அவசியம் என்பதை உணர்ந்த கடவுள் மீனின் ஊடாக ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றார். இங்கு நினிவே மக்களின் மனமாற்றத்தை விட யோனாவின் 'மனமாற்றமே' பெரிதும் பாராட்டப்படுகின்றது.
மனந்திரும்புதலுக்கான அழைப்பை திருச்சபைக்குள்ளோ, திருச்சபைக்கு வெளியிலோ நாம் பறைசாற்ற முன்னர், அந்த மாற்றத்தின் ஊடாக நாம் சென்றுள்ளோமா? என்பதை அறிந்து கொள்ளல் அவசியமாகும். உதாரணமாக திருத்தூதுவர் பணி நூலில் காணப்படுகின்ற பேதுரு, எல்லோரையும் உள்வாங்கும் பண்பை உடையவராகக் காணப்படவில்லை. எனவே, கடவுள் வானத்திலிருந்து ஒரு காட்சியைக் காண்பித்து 'என்னால் படைக்கப்பட்ட எதையும் நீ அசுத்தம் என தள்ளிவிடாதே!| எனக் கூறுகின்றார். இந்த அனுபவம் பேதுருவிற்கு புதிதாக இருந்தாலும் பின்னர் கொர்நேலியுவின் வாழ்வையும், பணியையும் புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருந்தது. அதாவது மாற்றத்தைக் குறித்து கொர்நேலியுவுக்கு பேசுவதற்கு முன்பாக அவனை உள்வாங்கக் கூடிய பண்பை பேதுரு கற்றுக்கொள்கின்றார். இங்கே கொர்நேலியு மாற்றமடைந்தார் என்பதைவிட பேதுவின் மனமாற்றமே மிகப் பெரிய அளவில் திருச்சபை வாழ்விலும் பணியிலும் செல்வாக்குச் செலுத்தியதை காணலாம் (திருத்தூதர் பணிகள் 10 : 9 – 16, 34 , 38).
தனிநபர் மனமாற்றம், சமூக மனந்திரும்புதலுக்கு வழி நடத்திச் சென்றதை மேற்கூறிய இரண்டு திருமறைப் பகுதிகளும் எடுத்துக்காட்டுகின்றன. எனவே மனந்திரும்புதல் ஆரம்பத்தில் திருச்சபைக்கு உள்ளேயே ஆரம்பிக்கப்பட வேண்டும். வரலாற்றில் நடைபெற்ற கசப்பு உணர்வுகளை, காயங்களை, வரலாறுகளை காவிச் செல்வதை தடுத்து நீதியின், உண்மையின் பாதையில் பயணிக்க மனந்திரும்புதல் அவசியமாகின்றது (திருப்பாடல்கள் 85 : 10, தி. பணிகள் 2 : 32). மேலும் எம்மைப் பிரித்தாலும் அரசியல், பொருளாதார, சமூக, மத காரணங்களை அடையாளம் காணவும் அவற்றில் இருந்து விடுதலைபெற்று கிறிஸ்துவுக்குள் வேறுபாடற்ற சமூகத்தை உருவாக்க நாம் பாடுபட அழைக்கப்படுகின்றோம் (கலாத்தியர் 3 : 28). மேலும் மனந்திரும்புதலின் அனுபவம் ஒர் தொடர்நிலை சார்ந்ததாகவும், கிரயம் மிக்கதாகவும் காணப்படுகின்றது (எபேசியர் 2 : 14 – 18). குறிப்பாக கிறிஸ்துவின் மரணம் எவ்வாறு பிரிந்து நின்ற யூதர்களையும், கிரேக்கர்களையும் ஒன்றாக்கியதோ அதே போன்று ஒப்புரவாகுதலின் அனுபவத்தின் ஊடாகப் பயணிக்கும் போது செலுத்த வேண்டிய கிரயத்தை முற்கூட்டியே தீர்மானிக்க அழைக்கப்படுகின்றோம். இதுவே சீடத்துவத்தின் அழைப்புமாகும்.
2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு கணவன்மாரை இழந்த வடக்குப் பிரதேச பெண்மணிகளையும், தெற்குப் பிரதேச பெண்மணிகளையும் ஒன்றிணைக்கும் மாநாடு உரோமன் கத்தோலிக்க சபையைச் சார்ந்த 'கியூடெக்' என்ற நிறுவனத்தின் அணுசரணையுடன் நடாத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மக்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர். வடக்குப் பகுதியைச் சார்ந்த தாயையும், தந்தையையும் இழந்த சிறுவன் இரண்டு சகோதரர்களுடன் எழுந்து நின்று யுத்தத்தின் கொடூரத்தையும், துன்பக் கதையையும் மற்றவர்களுடன் பகிர்ந்த கொண்டான். அப்பொழுது தெற்கிலிருந்த வந்த விதவைப் பெண்மணி இரண்டு குழந்தைகளுக்கு தாயானவள் எழுந்து நின்று அந்த சிறுவனை நோக்கி மகனே நீ அழாதே இன்று முதல் நீயும் உன்னுடைய சகோதரர்களும் என்னுடைய பிள்ளைகள் ஆகின்றீர்கள். எங்களுடைய பிரதேசத்திற்கு வாருங்கள் எனப் பதில் உரைத்தாள். இவளின் கூற்று மன்றத்தையே கலங்க வைத்தது. மனமாற்றத்தின் பாதையின் ஊடாகச் செல்லப் பலரைத் தூண்டியது. இப்பேர்ப்பட்ட மனந்திரும்புதலின் ஊடாக ஏற்படும் ஒப்புரவாகுதலே எல்லாரையும் உள்வாங்குவதன் ஊடாக அமைதியை ஏற்படுத்த உதவும்.
சிந்தனைக்கு:
- எங்களைப் பிரித்து நிற்கும் அரசியல், பொருளாதார, சமூக, மத காரணங்களை அடையாளம் காண்க.
- மேற்கூறிய காரணங்களை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்க.
- தனி நபராக, திருச்சபையாக மனந்திரும்ப வேண்டியதன் தேவையை உணருகின்றீர்களா?
- மனந்திரும்புதலின் பாதையில் செலுத்தப்பட வேண்டிய கிரயங்கள் எவை என அடையாளம் காண்க.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக