மனந்திரும்புதலின் அவசியம்

மனந்திரும்புதலின் அவசியம் ( மத்தேயு 26: 69 – 75, யோசுவா 7: 1 – 26)

திருச்சபை வாழ்வில் மீண்டும் ஒரு தவசுகாலத்திற்கு பிரவேசித்துள்ளோம். இக்காலம் தனிமனித, குடும்ப, திருச்சபை வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க எம்மை அழைக்கின்றது. ஒர நிறுவனத்திற்கு இருப்பு எடுத்தல் எவ்வளவு முக்கியமோ, கல்லூரி மாணவனின் வளர்ச்சியை கணிக்கப்படுவதற்கு அறிக்கைப் புத்தகம் எந்தளவிற்கு முக்கியமோ அந்தளவிற்கு கிறீஸ்தவ வாழ்வில் சீர்தூக்கிப் பார்க்கும் நிலை முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இக்காலத்தில் மனமாற்றம் பற்றிய சிந்தளைகளை நாம் அடிக்கடி தியானிக்க அழைக்கப்படுகின்றோம்.

திருமுழுக்கு யோவானின் ஆரம்ப உரையிலும் ஆண்டவர் இயேசுவின் ஆரம்ப அருளுரையிலும் மனமாற்றத்தின் செய்திகளை நாம் காணலாம். (மாற்கு 1 : 14, 15) இல் ஆண்டவர் இயேசு மக்களை நோக்கி காலம் நிறைவேறிவிட்டது மனந்திரும்பி நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள் என அழைப்பு விடுகின்றார். இங்கு மனமாற்றத்திற்குரிய அழைப்பு யூதருக்கும் யூதரல்லாதோருக்கும் பொதுவாக விடப்படும் ஓர் அழைப்பாகும். அத்தோடு இது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியதொன்றாகவும் காணப்படுகின்றது. இதன் ஒளியில் தவசு காலத்தில் வாழும் எங்களைப் பார்த்தும் ஆண்டவர் இயேசு மனமாற்றத்தின் அழைப்பை விடுவதோடு அது உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியதொன்று என வலியுறுத்துகின்றார்.

(லூக்கா 15 : 21) இல் காணப்படும் அன்புத் தந்தையின் உவமையில் இளையமைந்தன் தன் வாழ்வின் ஒரு நிலையில் நான் எழுந்து என் தந்தையிடம் சென்று தந்தையே உமக்கு எதிராகவும் கடவுளுக்கு விரோதமாகவும் பாவம் செய்தேன் என கூறும் வார்த்தைகள் முக்கியமானவைகள். ஏனெனில் மனந்திரும்புதல், பாவங்களை அறிக்கையிடுதல் கடவுளிடமும் சக மனிதர்களிடமும் மேற்கொள்ளப்பட வேண்டியதொன்றாகக் காணப்படுகி;ன்றது. இறைவனிடம் தவறுகளை அறிக்கையிடுவது சில சந்தர்ப்பங்களில் இலகுவானதாகக் காணப்படலாம். எனவே தான் அன்புத் தந்தை உவமையில் இளைய மைந்தன் மனந்திரம்புதல் பாதையில் தந்தையிடம் முதலில் மன்னிப்புக் கேட்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றான்.

மனந்திரும்புதல் வெறுமனே உணர்ச்சிமிக்கதொன்றாகவோ வார்த்தைக்குள்ளோ மட்டுப்படுத்திவிடக் கூடாது (லூக்கா 5 : 10). மாறாக உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உணர்வு அடித்தளத்தில் இருந்து பிறக்க வேண்டிய ஒன்றாகும் மத்தேயு 26 : 69 – 75 வசனம் வரையுள்ள பகுதியில் பேதுருவின் மனந்திரம்புதல் அவனை பூரண மனிதனாக்கியதை நாம் காணலாம். இங்க மனந்திரும்புதல் என்பது பாவத்தோடு போராடி மேற்கொள்ளுவதற்கு வேண்டிய ஆற்றலை அல்லது சக்தியை கடவுளிடம் இருந்து பெறும் ஓர் நிலை ஆகும் (உரோமையர் 1 : 17). மனந்திரும்பும் அனுபவம் மானிடருக்கு மட்டுமன்றி முழுப்படைப்புக்குமே உரியதொன்றாகத் திருமறை கூறுகின்றது (யோனா 3 : 5 – 8, உரோமையர் 8 : 22). மேலும் தனி மனித பாவத்திற்காக மட்டுமன்றி சமூக பாவத்திற்காகவும் மனந்திரும்ப வேண்டிய தேவை காணப்படுகின்றது (யோசுவா 7 : 1 – 26).
மனந்திரும்பும் அனுபவம் செயல்களில் பிரதிபலிக்க வேண்டுமென திருமுழுக்கு யோவான் தன்னிடம் திருமுழுக்குப் பெற வந்த மக்களிடம் வேண்டுகின்றார். உதாரணமாக பகிர்ந்து வாழும் அனுபவம், நீதி, நேர்மை, வாழ்வு போன்றவை மனந்திரும்புதலின் கனிகளாக இருக்க வேண்டும் என்கின்றார் (லூக்கா 3 : 11 – 14). மேலும் ஆண்டவர் இயேசு எருசலேம் வாழ் மக்களை நோக்கி போர்புரிதலுக்கான மனநிலைகளில் இருந்து அமைதியை ஏற்படுத்தும் மனப்பாங்கை நோக்கி மனந்திரும்புமாறு அழைக்கின்றார் (லூக்கா 19 : 42). மேலும் மலாக்கி இறைவாக்கினர் மக்களை நோக்கி இறைவனுக்குக் கொடுக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுமாறு மக்களை வேண்டுகின்றார் (மலாக்கி 3 : 8 ). பழைய ஏற்பாட்டு அனைத்து இறைவாக்கினர்களும் இறைவனுடன் உள்ள உடன்படிக்கையை மறுபடியும் புதுப்பித்துக் கொள்ளுமாறு வலியுறுத்துவதை நாம் காணலாம்.

மனந்திரும்பும் அனுபவம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள உறவைப் புதுப்பிப்பதோடு நற்செய்திக்கு சான்றுபகரும் ஊடகமாகவும் காணப்படுகின்றது. ஆதிக் கிறிஸ்தவ திருச்சபை மனந்திரும்புதலின் அனுபவத்திற்கூடாக சென்றபோது அவர்களின் சாட்சியான வாழ்வை கண்டு கொண்ட மக்கள் திருச்சபையில் சேர்ந்து கொண்டனர் (தி. பணிகள் 2 : 47). மேலும் புனித பவுல் அல்லது சின்னப்பர் மனந்திரும்புதலின் அனுபவத்திற்குப் பின்னர் கிறிஸ்துவின் நற்செய்தியாளனாக மூன்று வேதபோதக பயணங்களை மேற்கொண்டு நற்செய்தியை அறிவித்ததை நாம் காணலாம் (தி. பணிகள் 13: 1). மேலும் ஏசாயா இறைவாக்கினர் மனந்திரும்புதலின் அனுபவத்திற்கூடாகச் சென்ற பின்னரே கடவுள் அவரை பணிக்காக உபயோகித்தார் (ஏசாயா 6 : 1- 8). இதனொளியில் கடவுளின் பணியை ஆற்ற விரும்புகின்ற ஒவ்வொருவருக்கும் மனந்திரும்புதல் கட்டாயமான ஒன்றாகக் காணப்படுகின்றது.

எங்கள் முன்பதாக கருணையாய் கடவுள் தந்துள்ள லெந்து காலத்தில் தனிமனிதனாக, குடும்பமாக, திருச்சபையாக, தேசமாக மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுக்க கடவுள் எம்மை அழைக்கின்றார். எனவே இக்காலங்களை சரிவர பயன்படுத்த இறைவனிடம் மன்றாடுவோமாக!

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக