பெத்தானியா ஊரில் அபிஷேகம்

பெத்தானியா ஊரில் அபிஷேகம் (மாற்கு 14 : 3 – 9)

இந்நிகழ்வு நான்கு நற்செய்திகளிலும் காணப்படுகின்றது. நடைபெற்ற இடத்தைப் பற்றி மாற்குவில் சீமோனின் இல்லம் என்றும் லூக்காவில் தொழுநோயுள்ள சீமோனின் இல்லம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. யோவானிலே இப்பெண் மரியாள் என்று குறிப்பிடப்படுகின்ற அதே வேளை லூக்காவிலே பாவியான பெண் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இச்சம்பவம் ஆண்டவர் இயேசு மீது இப்பெண் கொண்டிருந்த அன்பை வெளிப்படுத்துகின்றது. இதன் அடித்தளத்தில் யூத சமூக வரையறைகளையும் தாண்டி இவர் இயேசுவிடத்தில் வருகின்றார். உண்மையான அன்பு தடைகளைத் தாண்டிச் செல்லும் தன்மையுள்ளது. அன்பின் நிமித்தம் 300 தினேரியம் பெறுமதி கொண்ட வெள்ளைக்கல் பரணியை உடைக்கின்றாள். இச்செயலின் மூலம் அன்பு பெறுமதியைக் குறித்து எண்ணாது என்பதைக் காணலாம். மேலும் இப்பெண் தனது அன்பினை செயல் வடிவத்திலே காண்பித்தாள். ஏற்ற சந்தர்ப்பம் வரும்வரை காத்திருந்து தனது தியாக சிந்தையையும் பலன் எதிர்பாராது பணி செய்யும் தன்மையையும் இவள் வெளிப்படுத்தினாள். இச்சம்பவம் ஒரு வழிபாட்டுச் சூழலைப் போன்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படுகின்றது. இதனால் இவள் நல்ல காரியத்தை செய்ததாக எல்லா ஆசிரியர்களும் கூறுகின்றார் (மத்தேயு 15 : 28, மாற்கு 10 : 14, 12 : 34, லூக்கா 7 : 9)

இப்பெண்மணி செயல் அடித்தளத்தில் தன்னுடைய பற்றுறுதியை வெளிப்படுத்தினார். அதை ஆண்டவர் இயேசு ஏற்றுக் கொண்டார். நாம் எத்தகைய சூழலில் இயேசுவிற்குப் பணியாற்றுகின்றோமோ அதை அவர் அங்கீகரிக்கின்றார் (வெளி ஃதிரு.வெளிப்பாடு 4 : 10,11, ஏசாயா 55 : 6). எமது செயல்களின் அடித்தளத்திலேயே எமக்கு பாவமன்னிப்பும் நியாயதீர்ப்பும் உன்டென்பதை இப்பகுதி காண்பிக்கின்றது (மத்தேயு 25 : 40).

இப்பெண்மணியின் செயலைப் பொறுத்தவரை மத்தேயுவும், மாற்குவும் இயேசுவின் தலையின்மீது தைலம் ஊற்றியதாக கூறுகின்றவேளை லூக்காவும் யோவானும் இயேசுவின் பாதத்தின் மேல் தைலம் ஊற்றப்பட்டதாகக் காண்பிக்கின்றனர். மாற்குவின் அடித்தளத்தில் இப்பெண்ணின் செயல் ஒரு தீர்க்கதரிசன செயலாகக் காணப்படுகின்றது. ஏனெனில் பழைய ஏற்பாட்டில் அரசர்களை அபிஷேகம் பண்ணும்பணியை இறைவாக்கினர்களே செய்து வந்தனர் (2 அரசர்கள் 9 : 1 – 13). இப்பெண் யூத பாரம்பரியத்திற்கு எதிராகச் சென்று இயேசுவாகிய அரசரை அபிஷேகம் செய்ததன் ஊடாக இயேசுவை மேசியா என எடுத்துக் காண்பிக்கிறார். அத்தோடு தன்னை ஓர் இறைவாக்கினராகவும் காண்பிக்கிறார். சீடர்கள் இயேசுவை மேசியாவாக அடையாளம் காண தயங்கிய வேளையில் அவருடன் நேரடித் தொடர்பு கொண்டிராத இப்பெண் இயேசுவை மேசியா என அடையாளம் காண்பதும் அறிக்கை இடுவதும் பாராட்டுதற்குரியதாகும் (மாற்கு 14 : 3). மேலும் இச்செயல் இயேசுவின் மரணத்திற்கான ஆயத்தத்தையும் அடக்கத்திற்கான அபிஷேகத்தையும்குறித்து நிற்கின்றது. ஏனெனில் ஒத்தமை நற்செய்திகளின்படி இயேசுவின் அடக்கத்திற்கான செயற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை.

இப்பெண்மணியின் செயல் இயேசுவின் சீடர்களை ஆச்சரியமடையச் செய்தது. ஏனெனில் ஆண்டவர் இயேசு ஆடம்பரத்தை விரும்பாத ஒருவராக இருந்தார். இத்தகைய சூழ்நிலையில் இச்செயல் பணவிரயத்தை ஏற்படுத்துவதாகவும் அப்பணத்தை ஏழைகளுடன் பகிர்ந்திருக்கலாம் என்ற செய்தியை முன்வைக்கின்றனர் (மாற்கு 14 : 4, 5). எனினும் ஈண்டவர் இயேசுவின் பதில் ஏழைகள் இவ்வுலகில் இருக்க வேண்டும் என்பதைக் காட்டாமல் தன்னுடைய மரணத்தையும் உயிர்ப்பையுமே இங்கு காண்பிக்கின்றார் (இணைச்சட்டம் 15 : 1 – 8) வரையுள்ள பகுதியில் ஏழைகள் மீதான கரிசணை ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதோடு செல்வந்தர் தம்மை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் ஊடாகவே ஏழ்மை அகற்றப்படலாம் என இயேசு போதிக்கின்றார். எனவே இப்பெண்மணியின் இச்செயல் என்றும் எங்கும் நினைவுகூரப்பட வேண்டும் என்பதை மத்தேயு காண்பிக்கின்றார். இயேசுவின் இறுதிராவுணவு நினைவு கூரப்படுவது போல் இப்பெண்ணின் செயலும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஆசிரியர் நினைவு கூறுகின்றார்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக