அத்திமரத்தின் உவமை

அத்திமரத்தின் உவமை (மாற்கு 11 : 12 – 14, 11 : 20 – 26)

ஆண்டவர் இயேசுவின் பணிகளில் அறுதிக்காலத்தில் நடைபெற்றதாக இதனை மாற்கு குறிப்பிடுகின்றார். பெத்தானியாவில் இருந்து எருசலேமை நோக்கி சென்ற இயேசுவிற்குப் பசி உண்டாகி இருக்குமா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க தனது சொந்தப் பசிரயப் போக்குவதற்காக கடவுளின் வல்லமையை உபயோகிக்க இயேசு முற்பட்டிருப்பாரா? போன்ற வினாக்கள் எழுகின்றன (மத்தேயு 4 : 2). மேலும் மாற்கு தன்னுடைய வர்ணனையில் இது அத்திப்பழங்கள் இல்லாத காலம் எனக் குறிப்பிடுகின்றார். பழமற்ற ஒரு காலப்பகுதியில் மரத்தில் கனியைத் தேடுவது நியாயமான ஒரு செயலா என ஒரு சிலர் வினாவுவர்.

இங்கு அத்திமரம் என்பது இஸ்ராயேல் மக்களைக் குறித்து நிற்கின்றது. அவர்களுடைய வாழ்வில் வழிபாடுகள் விசுவாச அறிக்கைகள் காணப்பட்டபோதிலும் உயர் கனியை அவர்களால் கொடுக்க முடியாமல் இலைகள் நிறைந்த அத்திமரத்தைப் போல் வாழ்வு காணப்பட்டது. வாக்குறுதிகள் பல கிடைக்கப்பெற்றும் அவைகளை நிறைவேற்றமுடியாமல் இருக்கும் மக்களுக்கு இவ் அத்திமரம் ஓர் உவமையாகக் காட்டப்படுகின்றது (ஏசாயா 5 : 4, 7, லூக்கா 6 : 46, யாக்கோபு 2 : 14, 17). பலன் கொடுக்க முடியாத மரம் தனது பலனை இழக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது பிறருக்கு பிரயோஜனமற்ற வாழ்வு இறைவனாலும் மனிதராலும் வேண்டப்பட முடியாதது என்பதை இந்நிகழ்வு குறிப்பிடுகின்றது (மத்தேயு 7 : 19, 26 – 27, 21 : 43). மேலும் ஒவ்வொரு மரத்தின் தன்மையும் அதன் கனிகளினால் அறியப்படும் (மத்தேயு 7 : 16). இதன்படி கனிகள் ஒரு மனிதனின் செயற்பாடு எத்தகையது என்பதையும் அவன் யார் என்பதையும் பிரதிபலிக்கின்றன. கனிகளற்ற வாழ்வு நியாயந்தீர்க்கப்பட வேண்டியவைகள் என யோவான் ஸ்நானகன் கூறுகின்றார்.

மத்தேயு நற்செய்தியின்படி சீடர்களும் மாற்கு நற்செய்தியின்படி மரம் சபிக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். இங்கு கிறிஸ்தவ வாழ்வில் இருக்க வேண்டிய ஆன்மீகக் குறிப்புகளைப் பற்றி ஆசிரியர் குறிப்பிடுகிறார். செப வாழ்வ பற்றுறுதியின் வாழ்வு, எதிர்பார்ப்பு அறவாழ்வு போன்றவைகள் வலியுறுத்தப்படுகின்றன. மேலும் கடவுள் எம்மில் அன்பு கூறுவதாலும் எமக்கு வேண்டியவைகளை அவர் தருவதாலும் அவரில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்கின்ற செய்தி வலியுறுத்தப்படுகின்றது (லூக்கா 12 : 32 , 28). எனவே எமது பதவிகளிலோ அல்லது பணத்திலோ எமது ஆசைகளை வைக்காமல் கடவுளில் அதிக நம்பிக்கை வைப்பது எமது கிறிஸ்தவ வாழ்வில் வேண்டப்படுகின்றது (தி. பாடல்கள் 118 : 8, 9).

மேலும் எமது அறவாழ்வில் மன்னிப்பின் தன்மையைப்பற்றி ஆசிரியர் இங்கு பேசுகின்றார். செபவாழ்வு மன்னிப்பை மையமாகக் கொண்டு அமைய வேண்டும். ஏனெனில் பரமண்டல செபத்தில் கடவுளைத் தந்தை என்று சொல்லுவதற்கு மன்னிப்பு வேண்டப்படுகின்றது (மத்தேயு 6 : 6 – 12). மேலும் சகோதர மன்னிப்பின் ஊடாகவே ஒப்புரவாகுதல் தோன்றி உண்மையான வழிபாட்டை கடவுளுக்கு கொடுக் முடியும் (மத்தேயு 5 : 22, 23). இதன் ஒளியில் மனிதனையும் கடவுளையும் ஒன்றாக இணைக்கும் சிலுவையும் இதனை வேண்டி நிற்கின்றது. எனவே அத்திமர உவமை உண்மையான ஆன்மீகத்தை எமது வாழ்க்கையில்; வெளிப்படுத்த அழைக்கின்றது. இப்புதிய ஒளியுள்ள வாழ்வு இயேசுவின் உயிர்த்தெழுதலின் ஊடாக ஆரம்ளபித்து புதிய இஸ்ரவேலாக எம்மை மாற்றுகின்றது.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக