கிறிஸ்துவில் நிலைத்திருத்தல்

கிறிஸ்துவில் நிலைத்திருத்தல் (யோவான் 15 : 1 – 18)

பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் திராட்சைக் கொடியாக வர்ணிக்கப்பட்டுள்ளனர். திராட்சைச் செடியாக கடவுளுடன் அவர்கள் பேண வேண்டிய உறவு வலியுறுத்தப்படுகின்றது. எனினும் கடவுள் அவர்களிடம் இருந்து எதிர்பார்த்த கனியை பெற முடியாமல் போனதை இட்டு மிகவும் மனம் வருந்துகின்றார் ( ஏசாயா 5 : 1- 6). புதிய ஏற்பாட்டில் மெய்யான திராட்சைச் செடியாக யோவான் இயேசுவைக் காண்பிக்கின்றார் ( யோவான் 15: 1-10). இதன்படி கடவுளால் அனுப்பப்படுகின்ற மெய்யான மேசியா இயேசுவே என யோவான் காண்பிக்கின்றார் (வி. பயணம் 4 : 11). பழைய இஸ்ராயேலர் கடவுள் எதிர்பார்த்த பலனை கொடுக்காமல் போகவே அப்பொறுப்பு புதிய இஸ்ராயேலரிடம் கையளிக்கப்பட்டது. அவர்கள் அப்பணியை நிறைவேற்றும்போது தமக்குக் கிடைத்த பெரிய பொறுப்பாக இதனைக் கருதிக் கொள்ள வேண்டும். ஏனெனில் பெரிய காட்டத்தி மரத்துடன் ஒட்டப்பட்ட கிளைகளாக நாங்கள் காணப்படுகின்றோம் என்பதை மறந்து விடக் கூடாது (உரோ 9, 10, 11). எனவே கடவுளின் அழைப்பு ஓர் சலுகை அல்ல. மாறாக பொறுப்பு வாய்ந்ததொன்றாகும்.

நாங்கள் கடவுளை தெரிந்து கொள்ளவில்லை. மாறாக கடவுளே எங்களைத் தெரிந்து கொண்டுள்ளார். ஏனெனில் சந்தோஷத்தை அனுபவித்துக் கொள்ளவும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவுமே கடவுள் எங்களைத் தெரிந்து கொண்டுள்ளார். கடவுளுடைய அழைப்பில் துன்பங்களின் மத்தியிலும் மகிழ்ச்சியை அனுபவிப்பதே அழைப்பின் மேன்மையாகும். பரி. பவுல் சிறை அனுபவத்தின் போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனக் கூறுகின்றார் ( பிலி 4 :6 ). மேலும் கடவுள் எம்மை தெரிந்து கொண்டதன் ஊடாக நாங்கள் கடவுளிலும் மற்றவர்களிலும் அன்பு செலுத்தவும் அன்பைப் பகிர்ந்து கொள்ளவும் அழைக்கப்பட்டுள்ளோம். அதன் ஊடாக நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை உலகத்தார் அறிந்து கொள்வார்கள் (யோவான் 13 : 34, 35).

கடவுள் தமது நட்புறவை எம்முடன் பகிர்ந்து கொள்வதற்காக எம்மை அழைத்துள்ளார். பழைய ஏற்பாட்டில் கடவுளின் பணியாளர்களை கடவுளின் ஊழியர்கள் என கடவுள் அழைத்ததை நாம் காண்கின்றோம் (இணைச்சட்டம் 34 : 5, யோசுவா 24 : 29, திரு. பாடல்கள் 89 : 20, யாக்கோபு 1: 1, தீத்து 1: 1). கடவுளுடைய அடிமைகள் என இவர்கள் அழைக்கப்பட்டபோது மகிழ்வடைந்தார்கள். ஆனால் இயேசுவோ அடிமையின் நுகத்தை எடுத்து தம் சீடர்களை நண்பர்களாகக் காண்கின்றார். இதன் மூலம் தமக்கும் சீடர்களுக்கும் இடையே இருந்த இடைவெளியைக் குறைக்கின்றார். எமது அழைப்பிலும் பணியிலும் எமக்கும் மற்றவர்களுக்கும் இடையேயுள்ள இடைவெளிகளை நாமும் குறைக்க அழைக்கப்படுகின்றோம்.

இயேசுவின் அழைப்பில் அவருடன் பங்குதாரராக இணையும் வாய்ப்பு எமக்குக் கிட்டுகின்றது.  ஓர் அடிமைக்கு எஜமான் தனது சிந்தையில் உள்ள எல்லவாற்றையும் பகிர்ந்து கொள்ளமாட்டான். மாறாக ஆண்டவர் இயேசு சீடர்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டதன் ஊடாக அவர்களைத் தம்முடன் பங்குதாரர்களாக மாறுமாறு அழைக்கின்றார். கடவுளுடைய பங்குதாரர்களாக மாறும்போது கடவளின் பாரத்தை சுமக்க நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும். எனவே கடவுளின் பாரத்தை சுமப்பது எமது அழைப்பில் விசேட கடமையாகும் ( ஏசாயா 6 : 8 ).

கடவுள் எம்மை உலகில் இருந்து பிரித்தெடுத்து வாழுமாறு எம்மை அழைக்கவில்லை. மாறாக உலகிற்குள் செல்லவும் அனுப்பப்படவும் எம்மை அழைத்திருக்கின்றார். எனவே நாங்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக உலகிற்குள் செல்கின்றோம். எனவே எமது அழைப்பில் கிறிஸ்துவின் பிரதிநிதித்துவத்தை அதாவது கிறிஸ்துவின் சார்பில் செயற்படும் பிரதிநிதிகளாக நாங்கள் இருக்கின்றோம் என்பதை மறந்து விடக் கூடாது. மேலும் கிறிஸ்துவை விளம்பரப்படுத்தும் அல்லது பிறருக்கு அறிவிக்கும் விளம்பரதாரர்களாக நாங்கள் காணப்படுகின்றோம். எனN தான் பரி. பவுல் கிறிஸ்துவை பிரதிபலித்து வாழுங்கள்எனப் புத்தி கூறுகின்றார். எனவே கிறிஸ்துவில் நிலைத்திருத்தல் என்பது அவருடைய சந்தோஷத்தில் எம்மை ஈடுபடுத்திக் கொள்ளுதல், நட்புறவில் இணைதல், அவரின் பாரத்தை சுமத்தல், கிறிஸ்துவை விளம்பரப்படுத்தல் போன்றவற்றோடு கிறிஸ்துவின் திருப்பெயரில் தன்னலம் துறந்து பிறருக்காக பற்றுறுதியுடன் மன்றாடவும் எம்மை அழைக்கின்றது.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக