திருமறையில் பல்வேறுபட்ட செப வீரர்களையும் செப மாதிரிகளையும் நாங்கள் பார்க்கின்றோம். இங்கு தானியேல் 9 : 13 – 19 ம் வசனம் வரையுள்ள பகுதியில் புலப்படுகின்ற செப மாதிரியை ஆராய்வோம். தானியேல் தன் மக்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும்போது இறைவனுக்கும் தனக்கும் இடையேயுள்ள தனிப்பட்ட உறவை வலியுறுத்துகின்றார் ( தானியேல் 9 : 15 ). இங்கே கடவுளை எங்கள் தேவனாகிய ஆண்டவரே என்ற பதத்தின் மூலம் அழைக்கின்றார். இவ் அழைப்பு கடவுளின் அனைத்துலகத் தன்மையையும் அனைவருக்கும் உரிய உரிமையையும் எடுத்துக் காட்டுகின்றது. அதாவது தனி மனிதராகவும் இஸ்ரயேல் சமூகத்தின் பிரதிநிதியாகவும் நின்று தானியேல் கடவுளிடம் பரிந்து பேசுகின்றார். எனவே செபத்தில் கடவுளோடு உள்ள தனிப்பட்ட உறவு நிலை மிகவும் அவசியம் ஆகுகின்றது.
செபத்தில் கடவுள் கடந்த காலத்தில் எவ்வாறு எமக்கு உதவி செய்தார் என்பதை நினைத்து நன்றி செலுத்துதல் மிகவும் தேவைப்படுகின்றதொன்றாகும். இதற்கமைய தானியேல் 3 : 15 இல் கடவுள் தம் இனத்தை எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து மீட்டு வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்திற்கு கொண்டு சென்ற நிகழ்வை நினைத்து தனிமனிதனாகவும் சமூகமாகவும் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றான். கடவுளுக்குரிய மகிமையை செலுத்தியது மாத்திரமன்றி தன் நன்றி அறிதலான இதயத்தையும் வெளிப்படுத்துகின்றார்.
தானியேல் 9 : 15 இல் நாங்கள் எல்லோரும் பாவம் செய்து துன்மார்க்கமாய் நடந்தோம் என தனி நபர் பாவத்திற்காகவும் சமூக பாவத்திற்காகவும் தானியேல் மன்றாடுகின்றார். செபம் கடவுளின் புனிதத்தன்மையும் ( ஏசாயா 6 : 1 – 8 ) மனிதனின் இயலாத்தன்மையையும் அதாவது பாவநிலையையும் உணர்த்த வேண்டும்.
( 1 யோவான் 1 : 7 – 9) இதன் ஒளியில் தானியேல் கடவுள் வைத்த இடத்தில் தானும் தன்னுடைய சமூகமும் இருக்கவில்லை என்பதை பகிரங்கமாக அறிக்கை இடுகின்றார். செபத்தில் பாவத்தைக் குறித்த பகிரங்க அறிவிப்பு மிக அவசியமாகின்றது. புனித ஒகஸ்ரீன் அவர்கள் தனது பாவங்களைக் குறித்த பெரும் அறிக்கையை நூல் வடிவில் தயாரித்து வழங்கியதை நாம் காணலாம்.
செபத்தில் மற்றவர்களுக்காக மன்றாடுதல் தனித்துவமானதாகும். இதன் அடித்தளத்தில் தானியேல் கடவுளின் கோபம் நீதியின் அடித்தளத்தில் இஸ்ராயேல் மேல் வந்து இறங்கிவிடக் கூடாது என சமூகத்திற்காக மனற்hடுகின்றார் ( தானியேல் 9 : 16 ). அதாவது கடவுளின்; கடவுளின் நீதி கோபத்தின் வெளிப்பாடாக மக்கள் மீது வெளிப்படும் போது அதன் உக்கிரகத்தன்மையை உணந்த தானியேல் கடவுளிடம் கெஞ்சுகின்றான். இத்தகைய கெஞ்சும் நிலை எமது செபங்களில் தொனிக்க வேண்டும் ( யோபு 42 : 10 ).
தானியேல் 9 : 17 – 18 வசனங்களில் கடவுளைப் பார்த்து செவியைத் திறந்தருளும், கண்களைத் திறந்து பார்த்தருளும். தாமதியாதிரும் போன்ற வார்த்தைகளைப் பாவிக்கின்றார். மேலும் கடவுள் தனது மன்றாட்டலுக்கு செவிசாய்த்தருள வேண்டுமென அவருக்குத் தன்னை அர்ப்பணிக்கின்றார். அதாவது கடவுளை செயற்படுமாறு அவரைத் துரிதப்படுத்தும் நிலை இங்கு காணப்படுகின்றது. மேலும் செபத்தில் கடவுளை செயல்பட வைப்பதற்கு மனிதனுடைய செயற்பாடு மிகவும் அத்தவியாவசியமானதாகக் காணப்படுகின்றது. இதன் ஒளியில் செபமும் செயல்பாடும் ஒன்றினைய வேண்டியதன் தேவையை தானியேலும் வலியுறுத்துகின்றார்.
தானியேலின் மன்றாடல் பழைய ஏற்பாட்டு செப வீரர்களின் மன்றாடல்களுக்குள் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. அவன் பாபிலோனியாவில் அடிமைத்தனத்தில் இருந்தபோதும் கடவுளை அனைத்துலகக் கடவுளாகக் கண்டு அவரை நோக்கி தினமும் மூன்று முறை மகிமைப்படுத்தும் உணர்வுடன் நன்றி உள்ள உணர்வுடனும் பாவமன்னிப்பு உணர்வுடனும் பரிந்து மன்றாடுதல் உணர்வுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்சார்ந்த உணர்வுடனும் மன்றாடியதை நாம் காணலாம். மேலும் தானியேல் செப வாழ்வின் மூலம் தனது விசுவாச வாழ்வை வர்த்திக்கப்பண்ணினான். அதன்மூலம் அரசியல் ஒடுக்கு முறைகளுக்கு எதிராகத் தனித்து நின்று செயற்பட்டான். இதன் ஒளியில் நாமும் எமது செபவாழ்வைக் கட்டி எழுப்பவும் அது தனி நபர் மையம் சார்ந்ததாகவோ குடும்ப மையம் சார்ந்ததாகவோ அமைந்திடாமல் சமூகம் சார்ந்த ஒன்றாகவும் இறைவாக்குரைக்கும் ஒன்றாகவும் மாற்றிக் கொள்ள முயற்சிப்போமாக!
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக