கிறிஸ்தவ வாழ்வில் திருத்துவக் காலம் சிறப்பானதோர் காலமாகும். திருச்சபையின் வளர்ச்சியை திருத்துவம் குறித்து நிற்கின்றது. தந்தையாம் கடவுளைப் படைப்பாளராகவும் குமாரனாம் கடவுளை மீட்பாளராகவும் தூய ஆவியாம் கடவுளை தூய்மை ஆக்குபவராகவும் இவ் அனுபவம் காட்டி நிற்கின்றது. ஒரே கடவுளைப் பன்மை அனுபவப் பின்னணியில் பார்க்குமாறு திரித்துவம் சவால் இடுகின்றது. உதாரணமாக திருத்துவத்தில் நமது என்ற வார்த்தைப் பிரயோகம் எமது தனிப்பட்ட சுயநலத்தன்மையை குறித்துக் காட்டுகின்றது (ஏசாயா 6 : 8, ஆதியாகமம் (தொட. நூல் 1 : 25, 26). நாம் வாழும் சுய நலம் மிக்க உலகில் பொதுநலத்தைக் குறித்து சிந்திக்க திரித்துவம் சவால் இடுகின்றது.
திரித்துவக் கடவுளாருக்கு இடையில் எவ்வித வேறுபாடுகளோ ஏற்றத் தாழ்வுகளோ காணப்படுவது இல்லை. திரித்துவத்தில் பணிகள் இடத்தே வேறுபாடுகள் காணப்பட்டபோதிலும் வேற்றுமையில் ஒற்றுமை வெளிப்படையாகத் தென்படுகின்றது. இவ் ஒற்றுமையின் அனுபவம் நாம் வாழும் உலகில் எம்மை வேறுபடுத்தி நிற்கும் இனம், மத, மொழி, திருச்சபை, கலை, கலாசார, பால் போன்ற பண்புகளில் இருந்து எம்மை நாங்கள் விடுவித்து ஒற்றுமையை ஏற்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். இதனையே திருத்தவக் கடவுளின் சமூகம் சார்ந்த தன்மை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
திருத்துவக் கடவுள் எம்முடன் உடன் இருப்பவராகவும் எமது அனுபவங்களில் ஒன்றிணைபவராகவும் காட்டப்படுகின்றார். குறிப்பாக திருச்சபை வழிபாட்டில் பயன்படுத்தப்படும் இறைஆசி இதனை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. கார்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும், பிதாவாகிய தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியானவருடைய ஐக்கியமும் உங்களுடன் இருப்பதாக. எனக் குறிப்பிடுகின்ற வார்த்தை திருத்துவக் கடவுளின் உடனிருப்பு நிலையை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது (2 கொரி 13 : 13 ). மேலும் உடன் இருக்கும் கடவுள் நற்செய்தியை அறிவிக்கின்ற பணியையும் எமக்குத் தந்துள்ளார் ( மத்தேயு 28 : 19, 20 ). திருத்துவக் கடவுள் நற்செய்தியை அறிவிக்கும் பொறுப்பை எமக்குத் தந்துள்ளார்.
திருத்துவக் கடவுள் வெறுமை, ஒன்றுமில்லாமை போன்றவற்றில் இருந்து அனைத்தையும் உருவாக்குபவர் (தொ. நூல் 1 : 1 – 3 ). கடவுள் வார்த்தையினால் உலகில் உள்ள அனைத்தையும் படைத்தார். அனைத்தும் ஒன்றுமில்லாமையிலிருந்து தோன்றியது. எனவே அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கையும் இருளில் இருந்து ஒளியையும் திருத்துவக் கடவுள்; படைக்கின்றார். அப்படைப்பில் பங்குதாரர் ஆகுமாறு எம்மை அழைக்கின்றார். இப்படைப்பின் புதியதோர் வடிவமாகவும் உரிமையாக்கும் சடங்காகவும் இயேசுவின் திருமுழுக்கு காணப்படுகின்றது. இந்நிகழ்வு திருத்துவத்தின் பங்குதாரர் ஆகும் தன்மையை எமக்கு வலியுறுத்துகின்றது. எனவே திருத்துவம் பன்மைத்தன்மையையும் வேறுபாட்டில் இருந்து ஒற்றுமையையும் உடனிருக்கும் கடவுளின் பிரசன்னத்தையும் நற்செய்தி அறிவிப்பின் முக்கியத்துவத்தையும் கூட்டுப் பகிர்வின் மேன்மையையும் எமக்கு உணர்த்துகின்றது.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக