மனிதன் கடவுளுடன் தொடர்பு கொள்ளும் சாதனங்களில் மன்றாடல் முக்கியயமானதாகும். இதனை தனி மனித மன்றாடல், குடும்ப மன்றாடல் என இரண்டாக வகுக்கலாம். மன்றாடலுள் நன்றி செலுத்துதல், இறைவனுக்குப் புகழ்பாடுதல், விண்ணப்பங்களை தெரிவித்தல், தவறுகளை அறிக்கை செய்தல், துயரங்களின் மத்தியில் இறைவனை நோக்கிப் புலம்பதல் ஆகியவற்றை உள்ளடக்கலாம். திருமறையில் பலதரப்பட்ட மன்றாடல்கள் காணப்பட்டபோதிலும் ஆண்டவர் இயேசு தமது சீடர்களுக்குக் கற்றுக் கொடுத்த குடும்ப மன்றாடல் அன்று தொட்டு இன்றுவரை எல்லாருடைய மனதிலும் ஆழப்பதிந்துள்ளதை அவதானிக்கலாம். இதனை மத்தேயு 6 : 9 – 13 வரையுள்ள பகுதியில் காணலாம்.
இம்மன்றாடலில் இறைவனை எங்கள் தந்தாய் என அழைக்கும் பகுதியில் இருந்து கடவுள் இவ்வுலகில் வாழுகின்ற அனைவருடைய தந்தை என நாம் அறிக்கை இடுகின்றோம். அதாவது கடவுளின் பிதாத்தன்மையை எந்த இனத்திற்குள்ளோ மதத்திற்குள்ளோ கலாசாரத்திற்குள்ளோ நாம் அடக்கி வி;ட முடியாது. அவர் அனைத்துப் படைப்புக்களையும் கடந்தவர் என்ற நம்பிக்கையை இச் செபத்தின் மூலம் நாம் அறிக்கை இடுகின்றோம். மேலும், விண்ணுலகில் இறைவனின் சித்தம் நடைபெறுவது போல் மண்ணுலகிலும் இடம்பெற வேண்டுமெனில் மானிடர்களின் செயற்பாடு தேவைப்படுகின்ற தொன்றாகக் காணப்படுகின்றது. அதாவது செபத்திற்கும் செயலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பின் முக்கியத்துவத்தை இங்கு நாம் அறிக்கை இடுகின்றது. எனவே தான் யாக்கோபு தனது நிரூபத்தில் செயல் இல்லாத செபமோ பற்றுறுதியோ அர்த்தமற்றது என அறிக்கை இடுகின்றார். எனவே இறைவனின் திட்டத்தில் மனிதரை இனைத்துக் கொள்;ளும் பாலமாக இப்பரிந்து மன்றாடல் செபம் காணப்படுகின்றது. மன்றாடலில் மற்றவர்களுக்காக மன்றாடல் வேண்டப்படும் ஒன்றாகும். யோபு 42 : 10 இல் யோபு மற்றவர்களுக்காக மன்றாடிய போது கடவுள் அவனுடைய துன்பத்தில் இருந்து அவனை விடுவித்து நிறைவாய் ஆசிர்வதித்ததை திருமறை கூறுகின்றது. இதன் ஒளியிலேயே பரமண்டல செபத்தைப் பார்க்கும்போது எங்கள் அனுதின உணவை எங்களுக்குத் தாரும், எங்களைத் தீமையில் இருந்து காத்தருளும் ஆகிய பகுதிகள் மற்றவர்களுக்காக நாம் மன்றாட வேண்டியதன் தேவையை எமக்கு வலியுறுத்திக் காட்டுகின்றது.
பரமண்டல செபம் இறந்த காலத்திற்கும், நிகழ் காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் கடவுள் உரியவர் என்பதையும் இந்த மூன்று காலங்களையும் கடவுள் கட்டுப்படுத்தும் தன்மையுள்ளவர் என்பதையும் எமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. உதாரணமாக எங்கள் அனுதின உணவை எங்களுக்குத் தந்தருளும் என்ற பதம் நிகழ்காலத் தேவையையும் எங்களுக்கு எதிராக தவறு செய்வோரை நாம் மன்னித்தது போல என்ற வார்த்தை இறந்த கால செயற்பாட்டையும் தீமையிலிருந்து எங்களை மீட்டருளும் என்ற வார்த்தை எதிர்கால செயற்பாட்டையும் உணர்த்தி நிற்கின்றது. எனவே இம் மூன்று காலங்களுக்கும் கடவுள் உரித்துடையவர் என்பதை வெளிப்படுத்தும் ஓர் பற்றுறுதி அறிக்கையாகவும் இச்செபத்தை நாம் பார்க்கலாம். மேலும் மனிதன் எக்காலத்திலும் இறைவனில் தங்கி இருக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் இம்மன்றாடல் எமக்கு உணர்த்துகின்றது.
சோதனைக்குள் பிரவேசிக்கப்பண்ணாமல் தீமையின் நின்று எங்களைக் காத்தருளும் என்ற வாக்கியம் சோதனைகள்;, தீமைகள் உலகில் எப்பொழுதும் காணப்படுபவைகள் என்பதை உணர்த்தி நிற்கின்றது. எனவே தீமைகளை அழித்துவிடுமாறு நாம் மன்றாடுவதின் முக்கியத்துவத்தை இயேசு இங்கு உணர்த்துகின்றார். யோவான் 17ம் அதிகாரத்தில் காணப்படும் உன்னத குருத்துவ மன்றாடலின் போது ஆண்டவர் இயேசு தமது தந்தையை நோக்கி தீமையில் இருந்து சீடர்களை காத்தருளும் என மன்றாடுகின்றார். 1 குறிப்பேடு 4 : 10 இலும் யாபேஸ் இறைவனை நோக்கி தீமையில் இருந்து பாதுகாத்தருளுமாறு பணிவுடன் மன்றாடுகின்றார். எனவே பரமண்டல செபம் நாளாந்த வாழ்வின் கடவுளின் செயற்பாட்டை உணர்ந்து கொள்ளுமாறு எம்மை அழைக்கின்றது.
தவறு செய்யும் மனிதர் மன்னிப்பை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ளவேண்டியதன் தேவையை இச்செபம் உணர்த்தி நிற்கின்றது. அதாவது இறைவனிடம் மன்னிப்பைப் பெறுவதற்கு முன்னர் மனிதரிடம் மன்னிப்பை பெற வேண்டிய முக்கியத்துவத்தையும் அழுத்தத்தையும் இச் செபம் வலியுறுத்தி நிற்கின்றது. அதாவது இச்செபத்திற்குள் ஒப்புரவாகல் என்னும் ஓர் அருட்கொடையும் பாவமன்னிப்பின் அடித்தளத்தில் கூட்டி எழுப்பப்படும் திருமுழுக்கும் மறைமுகமாக புதைந்துள்ளது. அதாவது மத்தேயு 5: 22, 23 இல் உண்மையான வழிபாடு ஒப்புரவாகுதலின் மையத்தில் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்ற உண்மை கூறப்படுகின்றது. எனவே தான் இச்செபம் ஓர் உண்மையான வழிபாடு எனக் கூறினால் மிகையாகாது.
எனவே மகத்துவமுள்ள மன்றாடலாகிய பரமண்டல செபம் இறைவனின் அனைத்துலகத்தன்மையும் மற்றவர்களுக்காக மன்றாட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் கடவுளின் எல்லா கடந்த தன்மையும் செபத்திற்கும் செயலுக்கும் இடையிலான தொடர்பையும் வலியுறுத்தி நிற்கின்றது. மேலும் இச்செபம் உண்மையான வழிபாடாகவும், ஓர் அருட்கொடையாகவும் ஒப்புரவாகுதலை வலியுறுத்தும் சாதனமாகவும் காணப்படுகின்றது. எனவே எமது நாளாந்த தனிமனித, குடும்ப, தேசிய செப வாழ்வில் இச் செபத்தை செபித்து பலனடைய இறையாசியை வேண்டி நிற்போமாக!
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக