இயேசு 5000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு உணவளித்த சம்பவம் 4 நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது. மாற்கு நற்செய்தியின் அடிதத்ளத்தில் உணவளித்த சம்பவத்துடன் சீடர்களின் பணியின் மீள்வருகையும் மக்கள் மீதான கரிசனையும் வெளிப்படுத்தப்படுகின்றது. ஆண்டவர் இயேசு கலிலேயாவில் வாழ் மக்களைப் பார்க்கும்போது மேய்ப்பர்கள் அற்ற மந்தையைப் போல காட்சி அளித்தனர். ஏனெனில் இவர்கள் ரோம அடிமைத்தனத்தில் வாழ்ந்தபடியால் செல்லாக்காசுகளைப் போல கருதப்பட்டனர். இவர்கள் தொலைக்கப்பட்டவர்களாகவும் உணவுக்காக அலைந்து திரிபவர்களாகவும் பாதுகாப்பைத் தேடி அலைபவர்களாகவும் காணப்பட்டனர். இத்தகைய மக்கள் மீதே ஆண்டவர் இயேசு கருணை காட்டினார்.
இயேசு மக்களுக்கு உணவளித்த நிகழ்வை இயற்கைக்கு அப்பாற்பட்ட புதுமையாக பொதுவாக மக்கள் கருதுவர். இந்நிகழ்வை யோவான் நற்செய்தியாளன் இறுதி இராவிருந்துடன் தொடர்புபடுத்துவார். மாற்குவில் ஆண்டவர் அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி உடைத்து சீடர்களுக்குக் கையளிக்கின்றார். இங்கு அநேகருக்கு பயன்படுவதற்காக அப்பம் உடைக்கப்படுகின்றது (தி. பணிகள் 2 : 42 – 60, 20: 7, 11, 27 : 35, 1 கொரிந்தியர் 10 : 16, 11 : 24). அடைக்கப்பட்ட அப்பம் மக்கள் பயன்பாட்டிற்காக சீடர்களிடம் கொடுக்கப்படுகின்றது. சீடர்கள் அதனை மக்கிளிடம் கையளிக்கின்றனர். இங்கு சீடர்கள் இயேசுவின் துணையின்றி செயற்பட முடியாது. அது போல இயேசுவும் சீடர்களின் உதவியின்றி செயற்பட விரும்பவில்லை. எனவே தான் கடவுளின் கரங்களாகவும் கால்களாகவும் மனுக்குலம் காணப்படவேண்டும் என்றும் கடவுளின் திட்டத்தில் பங்குதாரராக மாற வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அப்பத்தை உடைக்னும் முன்னர் ஆண்டவர் இயேசு தமது தந்தையை நோக்கி மன்றாடினார். இச் செயல் ஆண்டவர் இயேசு கடவுளில் தங்கி இருந்த வாழ்வை தனது வாழ்நாளில் கடைப்பிடித்தார் என்பதைக் காணலாம்.
மக்கள் மீது கொண்ட கரிசணையினால் இயேசு அவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்ப விரும்பவில்லை. எனவே அவர்களுக்கு உணவளிக்குமாறு தமது சீடர்களிடம் கேட்டுக் கொண்ட போது சீடர்கள் வனாந்தரமான இடம், அதிக பணம் தேவை போன்ற பதில்களை அளித்து பொறுப்பில் இருந்து விலகிச் செல்ல முற்பட்டபோது ஆண்டவர் இயேசுவோ அதற்கு இடங்கொடுக்கவில்லை. பல வேளைகளில் நழுவல் தன்மை போக்குக் கொண்டவர்களாக வாழுகின்ற எமக்கு இச்சம்பவம் சிறந்த உதாரணமாகும். மேலும் சிறுவனின் செயல் பலருக்கு சவாலாகக் காணப்பட்டது. ஆண்டவர் இயேசுவிடம் தன்னையும் தன்னுடையவைகளையும் ஒப்படைத்தபோது அதனை பிறருக்கு ஆசிர்வாதமாகப் பயன்படுத்தினர். இன்று கடவுள் பயன்படுத்தாதபடி நாம் எம்மை ஒப்படைக்காத நிலைகள் காணப்படுகின்றன (உரோமையர் 12 : 2 , 1 கொரிந்தியர் 9 : 27, எபேசியர் 4 : 23). இப்புதுமை இயேசுவின் மேசியத்துவத்தை நிரூபிக்கின்றது (ஏசாயா 25 : 4). மேலும் ஆண்டவர் இயேசு பிசாசினால் சோதிக்கப்படும் போது பிசாசு கற்களை அப்பமாக்கும் பணியில் கடவுளின் வல்லமையை சுயநல நோக்கத்திற்காக பயன்படுத்துமாறு வேண்டுகின்றான். அதாவது கற்களை அப்பமாக்கி இயேசுவின் பசியை போக்குமாறு கேட்கின்றார். ஆனால் இயேசுவோ கடவுளின் வல்லமையை சுயநல நோக்கத்திற்காகப் பயன்படுத்தாமல் அநேகருக்கு உணவு வழங்குவதற்கான முயற்சியில் அதனைப் பயன்படுத்துகின்றார். மேலும் மக்கள் மறுநாளும் உணவுதேடி வந்தபோது ஆண்டவர் இயேசு புதுமையைச் செய்ய மறுத்ததோடு பகிர்வின் வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வயிறாற உணவு உண்ட மக்கள் இயேசுவை தலைவராக்க முற்பட்டபோது ஆண்டவர் இயேசு புதுமைகள் வாயிலாக எழுகின்ற பிரபல்லியத்தை முற்றாக நிராகரித்தார். அதாவது புதுமைகள் ஒரு போதும் தனது திருப்பணியின் இலக்கை மாற்றிவிடாதபடி பார்த்துக் கொண்டார். இச் செயல் இன்றைய கிறிஸ்தவத் திருப்பணியருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக