தோமாவின் முன்நிலையில் இயேசுவின் காட்சி

தோமாவின் முன்நிலையில் இயேசுவின் காட்சி (யோவான் 20 : 24 – 29)

ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியை இயேசுவின் சீடர்கள் தோமாவிற்குக் கூறியபோது அவன் நம்பவில்லை. ஏனெனில் உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களுக்குக் காட்சி அளிதத்போது அவன் சீடர்களுடனான ஐக்கியத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டிருந்தான். எனவே கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் பங்குபற்றிக் கொள்ள அவனால் முடியவில்லை. சங்கீதக்காரனாகிய தாவீது போராட வேண்டிய களத்தில் தன்னை இருத்திக் கொள்ளாமல் அரண்மனையில் உலாவியதே அவனுடைய வீழ்ச்சிக்கான காரணமாக மாறியது. மேலும் பேதுரு சீடர்களுடன் கூட்டிணையாமல் தன்னை தனிமைப்படுத்தி அரண்மனை முற்றத்தில் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டதே இயேசுவை மறுதலிப்பதற்கான வாய்ப்பை அளித்தது. இதன் ஒளியில் நாம் எங்களுடைய இருப்பிடங்கள் எங்கே உள்ளன என்பதை ஆராய அழைக்கப்படுகின்றோம்.

தோமாவைப் பொறுத்தவரை காணாதது ஒன்றையோ அறியாத உண்மையையோ இலகுவில் நம்ப விரும்பவில்லை. இது மிகவும் அவசியமானதாகும். எங்கள் கிறிஸ்தவ வாழ்வில் பிறருடைய விசுவாசத்தின் அடித்தளத்தில் எங்கள் விசுவாசத்தைக் கட்டி எழுப்புதல் தவறானதாகும். ஒவ்வொருவருக்குமான கடவுளுடனான தனிப்பட்ட அனுபவம் மிகவும் அவசியமானதாகும். இந்த அனுபவத்தையே தோமா வேண்டி நின்றார். ஏனெனில் தனிப்பட்ட அனுபவம் கடவுளை சரிவரப் புரிந்து கொள்ளுவதற்கு மிகவும் வேண்டப்படும் ஒன்றாக எண்ணினார். ஏனெனில் அவரின் காயங்களுக்கு தானும் காரணம் என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்டார். எனவே தான் அக்காயங்களைப் பார்த்து தொட்டு மன்னிப்பின் நிச்சயத்தையும் அனுபவத்தையும் பெறுவதற்கு அவன் விரும்பினான்.

ஆண்டவர் இயேசு மறுபடியுமாக தோமையார் இருந்த வேளையில் காட்சி அளித்தார். இயேசுவை அனுபவித்த தோமா இப்பொழுது என் ஆண்டவரே என் தேவனே என அறிக்கை இடுகின்றார். இவ் அறிக்கை அவனுடைய அனுபவத்தில் இருந்து எழுகின்றது. இயேசுவின் தெய்வீகத் தன்மையை இவ்அறிக்கை வெளிப்படுத்துவதோடு இயேசுவிற்கு தான் அடிமை என்பதை வெளிப்படுத்துகின்றார். இவ் அறிக்கையின் ஒளியில் தோமாவை ஆண்டவர் இயேசு பணிக்காக அனுப்புகின்றார். இதனை ஏற்ற தோமா கி.பி 54 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்து பின்னர் இலங்கையிலும் நற்செய்தியைப் பரப்பி சென்னையிலுள்ள மைலாப்பூரில் மரித்தார். இயேசுவின் உயிர்ப்பிற்கு சான்று பகர்வோர் அவரை அனுபவிக்க அறிக்கை இட அனுப்பப்பட ஆயத்தமாய் இருக்க வேண்டும்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக