கனப்படுத்த வேண்டியவள்

கனப்படுத்த வேண்டியவள் (லூக்கா 1:39-45)

இயேசுவின் பிறப்பில் அநேகர் பங்கெடுப்பதை நாம் காண்கின்றோம். குறிப்பாக கடவுளின் ஆவி, இயேசுவின் பெற்றோர், ஞானிகளின் வருகை, மேய்ப்பர்களின் பிரசன்னம், தேவதூதர்களின் பாடல், எலிசபெத் - சகரியாவின் வாழ்வு முதலியவற்றை குறிப்பிடலாம். இங்கு எலிசபெத் ஆண்டவர் இயேசுவின் பிறப்பின் நிகழ்வில் ஆற்றிய பங்களிப்பை சுருக்கமாக ஆராய்வோம்.

கனப்படுத்த வேண்டியவள்

தேவதூதன் அபியா என்ற ஆசாரிய வகுப்பை சார்ந்த சகரியாவிற்கு தோன்றி அவனது முதிர்வயதில் ஓர் குழந்தையைப் பெற்றெடுப்பாய் என வாழ்த்து மொழி கூறுகின்றார். ஆனால் சகரியாவோ ஆபிரகாமைப் போன்று (தொ.நூல் 15:8) சந்தேகப்படுகின்றார். எனினும் சகரியாவின் மனைவியாகிய எலிசபெத்தோ தேவதூதனின் வாழ்த்து மொழியை சந்தேகமில்லாமல் ஏற்றுக்கொள்கின்றார். இதன்மூலம் எலிசபெத் விசுவாசத்தின் தாயாக கருதப்படுகின்றாள். விசுவாசத்தை தனது வாழ்க்கையில் அனுபவமாக்கிக் கொண்ட படியால் இவள் நீதிமானின் நிலைக்கு உயர்த்தப்படுகின்றாள். (உரோமையர் 1:17, லூக்கா 1:6) இங்கு எலிசபெத் கடவுளால் இடப்பட்ட கட்டளைகளையும் கற்பனைகளையும் கடைப்பிடித்தப் படியால் நீதியுள்ள ஒரு பெண்ணாக கருதப்பட்டாள். (இணைச்சட்டம் 4:40, லேவியர் 26:14-16) குறிப்பாக யூதப்பாரம்பரியத்தில் சட்டங்களையும் சடாங்காச்சாரங்களையும் கடைப்பிடிப்போர் மாத்திரம் நீதிமான்களாக கருதப்பட்ட சூழலில் ஓர் பெண் அதற்கு அப்பால் சென்று விசுவாச வாழ்வின் ஊடாக நீதிமான் ஆகியதை நாம் கனப்படுத்தியே ஆகவேண்டும்.

லூக்கா 1:42-44 வரையுள்ள பகுதியில் எலிசபெத்தை மரியாள் காணச் சென்ற சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கே மரியாளும் எலிசபெத்தும் ஒரே விதமான அனுபவத்தின் ஊடாக செல்வதை நாம் காணலாம். எனவே எலிசபெத் மரியாளுடைய சூழலை புரிந்துக்கொள்பவளாக அவளின் அனுபவங்களுக்கு செவி சாய்ப்பவளாக அவளுடைய துன்பங்களை கேட்பவளாக காட்டப்படுகின்றார். இதன்மூலம் மற்றவர்களின் பாரங்களை தன் பாரத்திலும் விட மேலானது என்பதை எலிசபெத் புரிந்து கொள்கின்றாள்.மேலும் தன்னிலும் பார்க்க மேலான ஒரு பொறுப்பை அதாவது மீட்பரை உலகிற்கு கொண்டு வரும் பாக்கியத்தை கடவுளின் கிருபையால் மரியாள் பெற்றுள்ளாள் என்பதை எண்ணி எலிசபெத் ஒருபோதும் எரிச்சல் கொள்ளவில்லை. மாறாக ஆண்டவரின் தாயார் என்னிடத்தில் வருவதற்கு நான் எவ்வளவு பேறுபெற்றவளாக காணப்படுகின்றேன் என மகிழ்வடைந்தாள். இங்கு 'ஆண்டவர்' என்பது 'மேசியாவை' குறிக்கும் பதமாக காணப்படுகின்றது. எனவே மற்றவர்களை உற்சாகப்படுத்துகின்ற பாராட்டுகின்ற வாழ்த்துகின்ற எலிசபெத் கனப்படுத்தப்பட வேண்டியவளே.

லூக்கா 1:46-55ம் வசனம் வரையுள்ள பகுதியை நாம் பொதுவாக மரியாளின் பாடல் என அழைக்கின்றோம். எனினும் இப்பாடலில் எலிசபெத்தின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் காணப்படுவதை அவதானிக்கலாம். இப்பாடல் 1 சாமுவேல் 2ம் அதிகாரத்தில் உள்ள அன்னாளின் பாடலுடன் ஒப்பிடப்படுகின்றது. இதன் அடித்தளத்தில்  அன்னாளும் எலிசபெத்தும் முதிர்வயதில் கருவுற்ற நிகழ்வு கடவுளின் பார்வையில் கிருபையின் செயற்பாடாகும். இதனால் ஒரு சிலர் இது மரியாளின் பாடல் அன்று எலிசபெத்தின் பாடல் என்றே கூறுவர். ஏனெனில் மரியாள் இளம் பெண்மணியாகக் காணப்பட்டப் படியால் கருவுற்ற செயல் கடவுளின் அருளால் ஏற்பட்டதென கூறினாலும் எலிசபெத்தின் அனுபவமே தனித்துவமான ஓர் அனுபவம் என ஒரு சிலர் வாதிடுவர். மேலும் மரியாளின் பாடல்களில் ஒரு சில வரிகளும் ஒத்திருப்பதால் மரியாளின் பாடலை எலிசபெத்தின் பாடல் எனக் கூறுவோரும் உண்டு. ஏனெனில் இலத்தீன் மொழி பெயர்ப்பில் மரியாளின் பாடல் காணப்படவில்லை. இது எவ்வாறாக இருப்பினும் மரியாளின் பாடலுக்குள் எலிசபெத்தின் தாக்கம் காணப்படுகின்றது. குறிப்பாக கடவுளை சமூக, அரசியல், பொருளாதார சீர்த்திருத்தவாதி எனக் காணும் புரட்சிகரமான சிந்தனையை மரியாளுக்கு வழங்கியதில் எலிசபெத்தின் பங்களிப்பை மறந்துவிடக் கூடாது. அன்றைய கட்டுப்பாட்டுள்ள சமூகத்தில் கடவுளை மனித அனுபவங்களுடன் பொருத்திப் பார்க்கும் உன்னத பண்பை எலிசபெத் மரியாளுக்குக் காண்பிக்கின்றார்.

லூக்கா 1:60ல் யோவான ஸ்நானகன் பிறந்தவுடன் 8 நாட்களுக்குப்பின் விருத்தசேதன நிகழ்வு ஏற்பட்ட போது பிள்ளைக்கு பெயர் வழங்கும் நேரம் வந்த போது எலிசபெத் அப்பிள்ளைக்கு யோவான் எனற பெயரை இடவேண்டும் எனக் கட்டளை இடுகின்றார். யூத பாரம்பியத்தில் பிள்ளைக்குப் பெயரிடும் உரிமை தந்தையிடமே காணப்பட்டது. இவ் உரிமையை இங்கு கடவுள் எலிசபெத்திற்கு வழங்கியதன் ஊடாக ஆண் ஆதிக்கத்தின் வலிமையை, உரிமையை சவால் இடும் கருவியாக எலிசபெத் கடவுளால் பாவிக்கப்படுகின்றார். மேலும் கடவுள் ஆதியிலே உலகத்தைப் படைத்து பெயர் இடும் அதிகாரத்தை ஆதாமுக்கு வழங்கியதை நாம் காணலாம்.(தொ.நூல் 2:19-20) இவ் உரிமையை மறுபடியும் கடவுள் எலிசபெத்திற்கு அளித்த நிகழ்வு தன்னுடைய அதிகாரத்தை எலிசபெத்துடன் பகிர்ந்துக் கொண்டமைக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கிறிஸ்து பிறப்பின் நிகழ்வு எலிசபெத்தின் நீதியான வாழ்வு, பிறரை வாழ்த்தும் பண்பு, கடவுளை மனித அனுபவங்களுடன் இணைத்துப் பார்க்க பிறருக்கு உதவும் முயற்சி ஆதிக்கத்திற்கு எதிராக செயற்பட ஆண்டவருக்கு தன்னை அர்ப்பணிக்கும் நிலை போன்றவற்றை தன்னகத்தே கொண்டமைந்தப்படியால் அவள் கனத்திற்கு பொருத்தமுடையவள் ஆகின்றார். எனவே நாமும் இத்தகைய பண்புகளை எம்மில் இறைவன் உருவாக்கிக் கொள்ள அவருக்கு இடமளிப்போமாக!

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக