இப்படியும் வாழலாம்

இப்படியும் வாழலாம் (லூக்கா 3:1-18)

நாம் வாழும் உலகில் பல்வேறுப்பட்ட முறையில் மக்கள் வாழ்வதை அவதானிக்கலாம். எனினும் யோவான் ஸ்நானகனின் வாழ்வு எம் எல்லோருடைய வாழ்க்கை முறையையும் சவால் இடுவதை நாம் அவதானிக்கலாம். குறிப்பாக அவருடைய எளிமையான வாழ்க்கை முறை மேசியாவின் பணிக்கான உண்மையான ஓர் ஆயத்தமாகும். அவர் அந்நாளில் துறவுகளின் ஆடையான ஒட்டக மயிரினால் செய்த ஆடையையும் அரையிலே வார்கச்சையையும் அணிந்தவராகவும் வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் உண்டு வந்தார். (மாற்கு1:6) நாம் எளிமையாக வாழும் போது அநேகரை வாழ வைக்க முடியும். இதன் அடித்தளத்திலேயே யோவான் ஸ்நானகன் தன்னிடத்தில் வந்த மக்களுக்கு பகிர்வின் செய்தியை எடுத்துரைக்கின்றார். நாம் எம்முடையதை பிறருடன் பகிரும் போது எளிமையான வாழ்விற்கு இட்டுச் செல்லும். (லூக்கா 3:1) புனித பிரான்சிஸ் என்னும் கடவுளுடைய மனிதர் எளிமையான வாழ்க்கை வாழுவதே நற்செய்தியை பகிர்ந்துக் கொள்வதற்கான ஆரம்ப குண இயல்பு என்கின்றார்.

இப்படியும் வாழலாம்

யோவான் ஸ்நானகனின் வாழ்வில் எளிமையான வார்த்தைகளிலேயே அவர் எப்பொழுதும் பேசினார்.தன்னிடம் திருமுழுக்கு பெற வருகின்றவர்களை நோக்கி நான் உங்களுக்கு தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கின்றேன் எனக்குப் பின்வரும் மேசியா உங்களுக்குத் தூய ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்குத் திருமுழுக்கு தருவார் என எளிமையான வார்த்தைகளைப் பேசினார். (லூக்கா 3:16) மேலும் தங்களைக் குறித்துப் பெருமையான வார்த்தைகளைப் பேசி தங்களைத் தாங்களே நீதிமான்கள் எனக் கருதிய யூதர்களை வன்மையாகக் கண்டிக்கின்றார். பெருமையான வார்த்தைகள் ஒருபோதும் மனிதனை நீதிமானாக மாற்றிவிடமுடியாது. மாறாக கடவுளின் அருளே அவனை நியாயத்தீர்ப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு உதவும். இதன் ஒளியில் யூதர்களின் அடிப்படை விசுவாசத்தை சவால் இடுவதை நாம் காண்கின்றோம். (லூக்கா 3:7) இவ் எளிமையான வார்த்தை அநேகரைக் குழப்பமடையச் செய்ததுடன் பெருமையுடனும் செருக்குடனும் வாழ்ந்த மக்களுக்கு சவாலாகவும் காணப்பட்டது. இதனையே மரியாள் தன்னுடைய பாடலிலும் குறிப்பிடுகின்றார். (லூக்கா 1:46-55)

யோவான் ஸ்நானகனின் வாழ்வு ஆவியின் எளிமையையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. மத்தேயு 5:3ல் ஆவியில் எளிமையையுள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் ஆவியில் எளிமை என்பது புதிய மொழிப்பெயர்ப்பில் ஏழையரின் உள்ளத்தோர் என மொழிப் பெயர்க்கப்படுகின்றது. ஏழைகள் தங்கள் நாளாந்த வாழ்வில் எப்பொழுதும் இன்னுமொருவரில் தங்கி இருப்பர். அதைப்போன்று நாமும் கடவுளில் தங்கி இருக்க வேண்டியதன் தேவையை யோவான் ஸ்நானகனின் வாழ்வு உணர்த்துகின்றது. கடவுளில் அவன் தங்கி இருந்தப்படியால் எதைச் செய்வதற்கும் எதைச் சொல்வதற்கும் அவன் பயப்படவில்லை. குறிப்பாக ஏரோது தன் சகோதரனின் மனைவியாகிய ஏரோதியாளை தன் மனைவியாக மாற்றிக் கொண்ட நிகழ்வு தவறானது என கண்டித்து உணர்த்துகின்றார்.(மாற்கு 6:14-29) ஆவியில் எளிமையுள்ள ஓர் இறைவாக்கினராக யோவான் ஸ்நானகனை மாற்றியதோடு மாத்திரமின்றி உண்மைக்காக மரிக்கவும் அவரை தூண்டியது.

யோவான் ஸ்நானகனின் எளிமையான வாழ்க்கை, எளிமையான வார்த்தை, ஆவியின் எளிமைத்தன்மை போன்றவைகள் அவரை மேசியாவிற்கு வழியை ஆயத்தப்படுத்துபவராகவும் நற்செய்திக்கு சான்று பகருபவராகவும் மாற்றி உள்ளதை காணலாம். இதே வகையில் நாமும் எளிமையான வாழ்க்கையும், எளிமையான வார்த்தையையும், ஆவியின் எளிமையையும் அணிகலன்களாக அணிந்து ஆண்டவருக்கு சான்று பகர முற்படுவோமாக!

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக