இப்பகுதி ஆண்டவர் இயேசுவின் போதனையை பற்றியும் பேசுகின்றது. இவைகள் அனைத்தும் தொழுகை கூடத்திற்குள் நடைப்பெற்றன. இங்கு தொழுகை கூடம் என்பது தேவாலயத்தில் இருந்து வேறுப்பட்டதாகும். 10 குடும்பங்கள் இருந்தால் ஓர் தொழுகை கூடத்தை ஆரம்பிக்கலாம். மேலும் செபம், திருமறை படித்தல், உரையாற்றல் ஆகியவைகளே தொழுகை கூடத்தில் இடம்பெறும். பாடல்களோ, இசைக்கருவிகளோ இக்கூடத்திற்குள் காணப்படவில்லை. இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு இங்கு சென்று போதிக்கின்றார். குரு சீடர்கள் முறைமையை நாம் இங்கு காணலாம். எனினும் இயேசுவின் போதனை ஏனைய ரபிமார்களின் போதனையில் இருந்து வேறுப்பட்டதாகும். ரபிமார்கள் பழைய ஏற்பாட்டு பகுதியை மாத்திரம் வாசிப்பார்கள். ஆனால் இயேசுவின் போதனையோ அவருடைய சொந்தக் கருத்தையும் அதிகாரத்தையும் கொண்டமைந்திருந்தது. இந்நிலை ஓர் அருளுரையாளருக்கு இருக்கவேண்டிய அனுபவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. மேலும் ரபீமார்கள் கடவுளுடைய வார்த்தையை மாத்திரம் அறிந்திருந்தார்கள். ஆனால் இயேசுவோ கடவுளுடைய வார்த்தையையும் கடவுளையும் அறிந்திருந்தார். எனவே ஓர் பேச்சாளன் கடவுளைப்பற்றிய தனிப்பட்ட அனுபவத்தை கொண்டிருத்தல் முக்கியமானதாகும்.
![]() |
தீய சக்திகளுக்கு மேலான அதிகாரம் |
இயேசுவின் பணி போதனையோடு மாத்திரமின்றி புதுமைகளையும் உள்ளடக்கி இருந்தது. எனினும் இயேசுவின் புதுமைகள் புதிய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த மந்திரவாதியான அப்பொலனியஸ் போன்றவர்களில் இருந்து வேறுப்பட்டதாக காணப்பட்டது. ஆண்டவர் இயேசு புதுமைகள் செய்யும் போது பிசாசுகளின் உதவியை நாடவில்லை. (வி. ப-யாத் 3:5) மேலும் புதுமைகள் கடவுளின் அரசில் தீய ஆவியின் வல்லமையைவிட இயேசுவின் வல்லமை அதிக பலம் வாய்ந்தது என்பதை காண்பிக்கின்றது. எனவே தான் தங்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு அநாவசியமாக ஈடுபடுகின்றார் என தீய ஆவிகளி கூறின. (1:24) புதுமைகள் கடவுளின் அரசின் வருகையையும் கடவுள் மனித வாழ்வில் செயற்படுகின்றார் என்பதையும் நிரூபித்துக்காட்டுகின்றன. (3:27) இயேசு தமது சொந்த புகழுக்காக புதுமைகள் எதனையும் செய்யவில்லை. இவைகல் அனைத்தும் இன்றைய பணியாளர்களுக்கு விடுக்கப்படும் சவால்கள் ஆகும். புதுமைகளை பெறுபவர்கள் தமது விடுதலையின் அடையாளமாக மற்றவர்களுக்கு பணி செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை பேதுருவின் மாமியை குணமாக்கிய நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது. (1:29-34)
இயேசு தமது பணிகளில் போதனைக்கும் செயல்களுக்கும் இடையேயுள்ள தொடர்பை வெளிப்படுத்தியுள்ளார். இயேசுவின் வாழ்வில் போதனை வேறு வாழ்க்கை முறை வேறு என வகைப்படுத்திவிட முடியாது. ஆனால் ஏனைய மதத்தலைவர்களுடைய வாழ்வில் போதனைக்கும் வாழ்க்கைக்கும் இடையே வேறுப்பாட்டை காணலாம். இயேசு மக்களின் ஆன்மீகத்தேவையை மாத்திரம் பூர்த்தி செய்யாமல் அவர்களின் சரீரத் தேவையையும் நிறைவு செய்திருந்தார். எனவே தான் இரட்சணிய சேனை அமைப்பின் ஸ்தாபகர் சோப்பு, சூப்பு, இரட்சிப்பு ஆகிய மூன்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முழு மானிட விடுதலையை பற்றி பேசுகின்றார். மேலும் ஆண்டவர் இயேசு விண்ணகத்திற்கும் மண்ணகத்திற்கும் இடையே உள்ள தொடர்பை நினைவுப்படுத்துகின்றார். மண்ணக வாழ்வின் தொடர்பு நிலையாகவே விண்ணக வாழ்வு காணப்படும் என போதிக்கின்றார்.
மேற்கூறப்பட்ட இரண்டு பணிகளுக்கும் மன்றாடல் வாழ்வு முக்கியமானதானது. (1:35) இம்மன்றாடல் வாழ்வு கடவுளுடன் உள்ள தொடர்பை பணிகளின் மத்தியிலும் புதுப்பித்து கொள்வதற்கும் தொடர்ந்து ஆற்றப்பட வேண்டிய பணிகளின் தன்மையையும், வகைகளையும், இடங்களையும் தீர்மபனித்து கொள்வதற்கும் பணிகளில் சுய பெருமை ஏற்படாதபடி கடவுளே அனைத்திற்கும் காரணர் என்ற உண்மையை உணர்ந்து கொள்வதற்கும் மன்றாடல் உறவு அவசியமாகின்றது. (1:38-39) எனவே எமது வாழ்வு பயணிக்கும் போது இப்பணி மாதிரியை பிரயோகித்தல் வேண்டப்படுகின்றது.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக