இயேசுவின் பிறப்பு

இயேசுவின் பிறப்பு (மத்தேயு 1:18-25, லூக்கா 2:1-7)

மத்தேயுவும் லூக்காவும் இயேசுவின் பிறப்பின் முக்கியத்துவத்தை எடுத்து காண்பிக்கின்றார். ஆனால் யோவான் ஆண்டவர் இயேசு வரலாற்றுக்கு முற்பட்டவர் என்ற உண்மையை எடுத்துக் காண்பிக்கின்றார். ( யோவான் 1:1-18) இயேசுவின் பிறப்பில் பலவிதமான மனித உணர்வுகள் வெளிப்படுகின்றன. மரியாளுக்கு அதிர்ச்சியின் உணர்வாகவும் அதிகாரம் படைத்த ஏரோதுவுக்கு கலக்கத்தின் உணர்வாகவும் மந்தை மேய்க்கும் இடையர்களுக்கு அச்சத்தின் உணர்வாகவும் பெத்தலகேமில் குழந்தைகளை இழந்து பெற்றோருக்கு கலக்கத்தின் உணர்வாகவும் காணப்பட்டது. இதன் ஒளியில் இயேசுவின் பிறப்பு இன்று எத்தகைய உணர்வை எம்மத்தியில் தோற்றுவிக்கின்றது.

இயேசுவின் பிறப்பு

இயேசுவின் பிறப்பு பலருடைய மனநிலைகளை குழப்பியதை காணலாம். உண்மையை மறைத்து நிம்மதியாக உறங்க முற்பட்ட யோசேப்புவை இயேசுவின் பிறப்பு குழப்பத்தில் ஆழ்த்தியது. அதிகாரத்தை தக்கவைக்கும் வகையில் செயற்பட்ட ஏரோது இயேசுவின் பிறப்பை கேள்விப்பட்ட போது குழப்பமடைந்தான். மற்றவர்களின் நன்மைக்காக அவமானப்பட ஆரம்பத்திலே மறுத்த மரியாளுக்கு ஓர் குழப்பத்தின் செய்தியாக இயேசுவின் பிறப்பு மாறிவிட்டது.

இயேசுவின் பிறப்பு பலரை இணைக்கும் உறவுப் பாலமாக காணப்படுகின்றது. மண்ணகத்தையும் விண்ணகத்தையும் இணைத்தது. படித்த ஞானிகளையும் பாமர இடையர்களையும் ஒன்றாக இணைத்தது. ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் ஆண்பெண் வேறுபாடுகளை தகர்த்தெறிந்து ஆணையும் பெண்ணையும் இணைத்தது. யூத மதத்தை பின்பற்றும் யூதர்களையம் பிற மத கொள்கையை கடைப்பிடிக்கும் ஞானிகளையும் ஒரே மேடையில் கொண்டு வந்து நிறுத்தியது. மேலும் மனிதருக்கும் இயற்கைக்கும் இடையேயுள்ள தொடர்பு உறுதியாக்கப்பட்டது. எனவே பிளவுப்பட்டுள்ள மக்களிடையே ஓர் ஒற்றுமையை இயேசுவின் பிறப்பு ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துவை பிறரில் பிறப்பிக்குமாறு எம்மை அழைக்கின்றது. (கலா 4:19) நாம் உண்மையை ஏற்றுக்கொள்ளும் போது அதனை அறிக்கை இடும்போது கிறிஸ்து பிறக்கின்றார். (திரு. தூ 2:22-23) பிறருக்கு வாழ்வை கொடுக்கின்ற போதும் வழியை காண்பிக்கும் போதும் கிறிஸ்து பிறக்கின்றார். (யோவான் 14:6) மேலும் கிறிஸ்துவில் இருந்த தாழ்மையின் சிந்தை எம்மில் உருவாகும் போது (பிலி 2:5-6) கிறிஸ்துவின் உடல் ஐக்கியத்திற்காக செயற்பட உந்தித்தள்ளும்போதும் (எபே 4:1-6) கிறிஸ்துவின் ஆவி விடுதலைப் பணியை தூண்டுமாறு எம்மை பணிக்கும் போதும் (2 கொரி 3:16-17) கிறிஸ்து எம்முள்ளும் பிறருள்ளும் பிறக்கின்றார்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக