தடைகளைத்
தாண்டும் ஆண்டவர் (மாற்கு 1: 40 – 45)
தொழுநோய்
என்ற வியாதி தற்போதைய காலத்தை
விட குறைந்தளவு தாக்கத்தையே இயேசுவின் காலத்தில் கொடுத்திருந்தது. பொதுவாக இந்நோய் ஒருவரின்
மூட்டுப்பக்கத்தில் ஆரம்பித்து வலி உணர்வைக் கொடுத்து
பின்னர் அவரின் நரம்புப் பகுதிகளைத்
தாக்கும். இத்தகைய சூழ்நிலையில் இந்நோயால்
பாதிக்கப்பட்ட மக்கள் சமுதாயத்தில் இருந்தும்
குடும்பங்களில் இருந்தும் புறக்கணிக்கப்பட்டு தனிமையில் வாழ்ந்து வந்தனர். இம்மக்களுக்கான நிபந்தனைகளை லேவியராகமம் 13ம் அதிகாரத்தில் நாம்
காணலாம். இத்தகைய சூழ்நிலையிலேயே ஆண்டவர்
இயேசு இம்மனிதனை சந்திக்கின்றார். குறிப்பாக அனைத்து சட்டங்களையும் மீறி
இயேசுவிடத்தில் வந்த இம்மனிதனை இயேசு
ஏற்றுக்கொள்ளுகிறார்.
![]() |
தடைகளைத் தாண்டும் ஆண்டவர் |
இயேசவின்
கருணை நோயாளிமீது விளங்குவதை 41ம் வசனம் காண்பிக்கிறது.
இக்கருணை உணர்வு கோபத்துடனான உணர்வாகும்.
அதாவது தீமைகளினாலும் சமுதாயக் கட்டுப்பாடுகளினாலும் ஒதுக்கப்பட்டு இம்மனிதன் துன்புறுத்தப்படுகின்றானே என எண்ணும்போது இயேசு
மிகவும் கோபமடைந்தார். இக்கோபம் நீதிக்கான கோபம் ஆகும். (மாற்கு
10: 14, 11: 15 – 17). நீதிக்கான
கோபத்துடன் வெளிப்படும் கருணை செயல்வடிவம் பெறுகின்றது.
வசனம் 41 இல்
இயேசு அவன்மீது கருணை கொண்டு அவரைத்
தொட்டு குணமளிக்கின்றார். இந்நிகழ்வு வெறுமனே சரீர சுகத்தை
மட்டும் குறித்து நிற்காமல் அவனுடைய அடையாளத்தையும் அவனுக்கு
வழங்குகின்றது. அதாவது தொடுதலே மிகப்
பெரிய புதுமையாகும். இதுவே சமுதாயத்திற்கு அன்று
தேவைப்பட்ட ஒன்றாகும்.
குணமாக்கும்
நிகழ்விற்குப் பின்னர் ஆண்டவர் இயேசு
அவரை நோக்கி நீ சென்று
உன்னை ஆசாரியருக்குக் காண்பிக்குமாறு கூறுகின்றார். இந்நிகழ்வு ஆண்டவர் இயேசு சமுதாயத்தில்
காணப்படும் ஒடுக்குமுறை சார்ந்த சட்டங்களை மாத்திரம்
கடைப்பிடிக்கவில்லை. மாறாக மனிதனுக்குப் பலனளிக்கும்
சமூக விழுமியங்களை அவர் மதித்து நடந்தார்
என்பது தெளிவாகின்றது. எனவே தான் சட்டங்களை
அழிக்க வந்தேன் என எண்ணிவிடாதிருங்கள்
மாறாக அவைகளை நிறைவேற்றவே வந்தேன்
(மத் 5:7). எனவே சமூகக் கட்டுப்பாட்டிற்கும்
ஒருமைப்பாட்டிற்கும் சட்டங்களின் முக்கியத்துவத்தை இயேசு காண்கின்றார்.
குணமாக்கப்பட்டவரை
நோக்கி இதனை யாருக்கும் சொல்ல
வேண்டாம் என இயேசு கட்டளை
பிறப்பிக்கின்றார். பொதுவாக இதனை மாற்குவின்
மேசியா இரகசியம் எனக் குறிப்பிடுவர். ஆண்டவர்
இயேசு தன்னை மேசியா என்பதை
தனது பணிக்காலத்தில் பிறருக்கு எடுத்துக் கூற விரும்பவில்லை.
இரண்டு முறை மாத்திரமே இயேசு
தன்னை நற்செய்திகளில் மேசியா என பிறர்
அறிக்கையிட அனுமதித்தார். (லூக்கா 9: 18 – 21).
பொதுவாக
இயேசு மானிடமகன் என்ற பெயரையே அதிகம்
பயன்படுத்த விரும்பினார். இது அவரின் பணிமாதிரியையும்
புகழ் அடைய விரும்பாத திருப்பணி
மாதிரியையும் எமக்குக் காண்பிக்கின்றது. மேலும்
திருப்பணியில் எப்பொழுதும் கூறிக்கொண்டோ அல்லது போதித்துக் கொண்டோ
இருப்பதைவிட அமைதியான முறையில் பணி செய்வதும் அவசியமானதாகும்.
அதாவது புனித பிரான்சிஸ் கூறுவதுபோல
போதித்துக் கொண்டே இருங்கள். தேவை
ஏற்படின் மாத்திரம் வார்த்தையைப் பயன்படுத்துங்கள் என்ற வாக்கை இங்கு
ஞாபகப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக