பாவங்களை மன்னிக்கும் ஆண்டவர்

பாவங்களை மன்னிக்கும் ஆண்டவர் (மாற்கு 2: 1- 12)

இப்பகுதியை மாற்கு பேதுருவிடத்தில் இருந்து பெற்றிருக்கக்கூடும். ஆண்டவர் இயேசுவின் பாவங்களை மன்னிக்கும் தனித்துவத்தைப் பற்றி இப்பகுதி பேசுகின்றது. 4ம் வசனத்தில் முடக்குவாத மனிதனின் நண்பர்களின் விசுவாசத்தை இப்பகுதி காண்பிக்கின்றது. இன்னுமொருவரின் விசுவாசம் எமது வாழ்வில் நன்மைகளைக் கொண்டுவரும் என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். (மாற்கு 7: 24 – 30, 9: 14 – 29, லூக்கா 7: 1 – 10). புனித ஒகஸ்ரின் அவர்களின் வாழ்வில் அவர்களுடைய மனமாற்றத்திற்காக தாயார் ஒவ்வொரு நாளும் மன்றாடினார். இம்மன்றாடல் ஒகஸ்ரினின் வாழ்வில் மனமாற்றத்தை கொண்டுவந்தது.

பாவங்களை மன்னிக்கும் ஆண்டவர்
இந்நிகழ்வில் விசுவாசம் முக்கியமான இடத்தை எடுத்துள்ளது. குறிப்பாக நோயுற்றவன் மீது கரிசணைகொண்ட நண்பர்கள் தமது விசுவாசத்தை கிறிஸ்துவின் மீது வைத்தனர். மேலும் விசுவாசம் ஆபத்துக்கு முகம் கொடுக்க எம்மை அழைக்கின்றது. கூரையை பிரிக்கும்போது வீட்டு சொந்தகாரரின் மன நிலை ஆண்டவர் இயேசுவின் பிரதி விளைவு போன்றவைகளை குறித்து இம்மனிதனின் நண்பர்கள் எதனையும் சிந்திக்கவில்லை. மேலும் தமது விசுவாசத்தை செயல் வடிவத்தில் காண்பித்தனர். இம்முயற்சியின் பல படிநிலைகளுக்கூடாக செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே விசுவாசம் பல படிநிலை சார்ந்தது ஒன்றாகும். ஆண்டவர் இயேசு முடக்குவாதக்காரனை நோக்கி உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன எனக் கூறுகின்றார். யூதர்களுடைய நம்பிக்கையின் படி மனிதனுடைய நோய்க்கும் அவனுடைய பாவங்களுக்குமிடையே தொடர்பு இருப்பதாக எண்ணினர். (யோவான் 9: 3, லூக்கா 13:1 -5). மேலும் ஆண்டவர் இயேசு அவனது அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதன் ஊடாக அவனை விடுவிக்கின்றார். அநேக சந்தர்ப்பங்களில் எமது பணிகளில் மனிதர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே முக்கியத்தவப்படுத்த வேண்டும்.

உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று கூறுவதா? படுக்கையை எடுத்துக் கொண்டு நட என்று கூறுவதா? என்ற கேள்வி மிகவும் மிகவும் பலமானதாகும். ஏனெனில் பாவங்களை மன்னிப்பதற்கு ஆண்டவர் இயேசு பலியாக மரிக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. அதற்கு ஊடாக பாவ மன்னிப்பை வழங்குவது கடினமானதாகும். மாறாக புதுமைகளை மேற்கொள்வது இலகுவானதாகும். எனவே தான் ஆண்டவர் பாவமன்னிப்பை வழங்கும் கடின பணியை தமது வாழ்க்கையில் தெரிந்து கொண்டார். எமது பணிகளிலும் கடினப்பணியின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மனுமகனுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டு என்ற சம்பவம் இயேசுவின் தனித்துவத்தையும், தெய்வீகத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. ஆண்டவர் இயேசு தம்மை மெசியா என பிறர் அழைப்பதை விட மனுமகன் என மக்கள் அழைப்பதை அதிகம் விரும்பினார். ஏனெனில் மனுமகன் உலகத்தை நடுதீர்ப்பவராகவும் (தானியேல் 7: 13). மக்களின் நன்மைக்காக துன்பப்படுபவராகவும் (மத்தேயு 8 : 30, 31). மக்களுக்கு பணியாற்றுபவராகவும் (மாற்கு 10: 45). சட்டத்தை விட மனித மாண்பை மதிப்பவராகவும் (மாற்கு 3: 1-6). பலமற்றவராகவும் (லூக்கா 9: 51, 52). காட்டப்படுகின்றார். மேலும் மனுமகன் ஒடுக்கப்பட்ட முடக்குவாதக்காரனின் பக்கத்தில் நின்று ஒடுக்கிய அதிகார வர்க்கத்தை மன்னிக்கும் செயல்பாட்டையும் நாம் இங்கே காணலாம்.


மேலும் ஆண்டவர் இயேசுவின் செயற்பாடு அங்கிருந்த மதவாதிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது. எனவே அவர்கள் இயேசுவை பகைக்க ஆரம்பித்தனர். இதே போன்று எமது பணிகளிலும் நாம் நற்செய்திக்காக இயேசுவுக்காக பிறரால் வெறுக்கப்படக் கூடிய சூழல்கள் ஏற்படக்கூடும். (மத்தேயு 10: 24-25). ஆகவே ஆண்டவர் இயேசு தமக்கிருந்த அதிகாரத்தின் ஊடாக நன்மையை புரிந்தது மாத்திரமல்ல பல உண்மைகளையும் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக