ஒன்று சேரா இரு வழிகள்

ஒன்று சேரா இரு வழிகள் (மாற்கு 3: 20 – 35, மத்தேயு 13: 36 – 43)

மனித வாழ்வில் ஒன்று சேராத காரியங்கள் பல காணப்படுகின்றன. அவைகளில் நன்மையும், தீமையும் பிரதான இடத்தை எடுக்கின்றன. நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போராட்டம் உலக தோற்றம் முதல் இன்று வரை தொடர்ந்து வரும் ஒரு போராட்டமாகும். இவை இரண்டும் சமாந்தர வழியாக நமது வாழ்வில் கை கோர்த்து பயணிக்கின்றன.

ஒன்று சேரா இரு வழிகள்

கோதுமையும், களையும் என்ற உவமையில் களைகள் எப்பொழுதும் பயிரிடப்படும் பயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பயிர்களுக்குக் கிடைக்கின்ற சூரிய ஒளி, நீர், காற்று போன்றவற்றை களைகளும் அனுபவிக்கின்றன. இதனால் கோதுமையின் வளர்ச்சியில் களைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குருவிச்சை மாமர வளர்ச்சியிலும், தெள்ளு நாயின் வளர்ச்சியிலும் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றதோ அதே வகையில் தீமைகள், நன்மைகள் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி நன்மையை மேற்கொள்கின்றது.

கோதுமையிலிருந்து களைகளை வேறுபடுத்துவது கடினமானதாகும். இரண்டும் ஒன்றாக சேர்ந்து வளர்கின்ற போது இவற்றை வேறுபடுத்துவது இயலாத காரியமாகும். காகத்தின் கூட்டில் குயில்கள் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் பொழுது அவற்றை பாகுபடுத்துவது இலகுவானதாக அமைய மாட்டாது. அதை போன்று நல்லவர்களுடன் தீயவர்கள் சேர்ந்து வாழும் போது அவர்களை வேறுபடுத்துவது மிகவும் கடினமாகும்.

தீமையின் உறைவிடமாகிய பெயல்செபூலைக் கொண்டு இன்னுமோர் அலகை துரத்தி நன்மையை செய்துவிட முடியாது. தீமை இன்னுமோர் தீமையையே உற்பத்தியாக்கும். தீமையை நம்பி நன்மையை அனுபவிக்க முடியாது. மேலும் நன்மைபோல் தோன்றும் தீமைகள் இவ்வுலகில் மலிந்து காணப்படுகின்றன. எனவே, நன்மைக்குள் இருக்கும் தீமையை கண்டறிவது வேண்டப்படும் ஒர் உண்மையாகும். மேலும் இன்றைய உலகில் நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான போராட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் தீமைக்கும் அதி தீமைக்கும் இடையிலான போராட்டம் உத்வேகம் அடைந்து வருகின்றது.


கோதுமையும், களையும் என்ற உவமையில் களைகளை அகற்றும் பணியை நிறுத்துமாறு தலைவர் பணியாளரை கேட்டுக் கொள்கின்றார். அவைகளின் பயன்பாட்டினால் அல்லது செயற்பாட்டினால் அவைகள் இறைவனின் நடுத்தீர்ப்புக்கு உள்ளாக்கப்படுவார்கள். அக்கடமை கடவுளுக்கு உரியதாகும். எனவே நாமும் நன்மை தீமைக்கான நியாயதிர்ப்பை இறைவனிடம் கையளிப்போம். இவ்வாறு கையளிப்பதன் ஊடாக நியாயதீர்ப்பு பணிகளில் இருந்து நாம் விலகி இருக்கலாம். எனவே நன்மை தீமைக்கான இவ்வுலகப் போராட்டத்தில் தீமையை இனங்கண்டு அதனை அகற்றி நன்மையை விழைக்க முயற்சிப்போமாக!

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக