வேறுபாடுகளின் மத்தியில் ஒற்றுமை

வேறுபாடுகளின் மத்தியில் ஒற்றுமை  (மாற்கு 4:30, 31)

பலஸ்தீனாப் பகுதியில் மிகவும் சிறிய விதையாக கடுகுவிதை காணப்படுகின்றது. எனினும் சுமார் 6 அடி உயரத்திற்கு வளர்ந்து பெரிய செடியாக மாறும் தன்மையுள்ளதாக இது காணப்படுகின்றது. சிறிய விதை பெரிதான செடியாக மாறவேண்டுமேயாகில் அது தன்னை இழக்க வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. அதே போல நாமும் எங்களை இழப்பதன் ஊடாகவே பெரியவைகளை செய்ய முடியும். இவ் இழக்கும் செயற்பாடு மற்றவர்களின் நன்மை கருதி நடைபெறவேண்டிய தேவை உள்ளது. மேலும் சிறிய விதையாகிய கடுகுவிதையை நாம் அற்பமாய் எண்ணி விடக் கூடாது. ஏனெனில் அவ்விதை வளர்ந்து அநேக ஆகாயத்துப்பறவைகளுக்குத் தஞ்சம் அளிக்கின்றது. ஆண்டவர் இயேசு 12 சீடர்களோடு ஆரம்பித்த கடுகு விதை போன்ற பணி பல்லாயிரக்கணக்கான மக்களை இன்று சென்றடைந்துள்ளதை நாம் மறந்து விடக் கூடாது.

ஓர் விதை நிலத்தில் புதைக்கப்பட்டவுடன் எவ்வாறு முளைக்கின்றது என்பதை நாம் அறியோம். அதுபோல கடவுளின் அரசு கடவுளுடைய அதிகாரத்தாலேயே வளருகின்றது. எனவேஈ கடவுளுடைய பணிக்கு தனிமனிதனோ, திருச்சபையோ உரிமை கோரிவிட முடியாது. அப்பணிக்கு சொந்தக்காரர் கடவுளே ஆவார். இப்பணி எல்லைகள் உலகில் உள்ள சாதி, சமய, மத, எல்லைகளை ஊடறுத்துச் செல்லும் தன்மைவாய்ந்தது. (மத்தேயு 8:11). இங்கு ஆகாயத்துப் பறவைகள் என்பது உரோம மக்களை குறிப்பிடுகின்றது. எனவே இயேசுவின் பணியால் உரோம மக்களும் கவரப்பட்டனர் என்பதைக் காணலாம். (திரு. தூ. 1:8). இதன் ஊடாக இயேசுவின் பணி எல்லாரையும் உள்வாங்கும் பண்பை தன்னகத்தே கொண்டுள்ளது.

கடுகுவிதை வளர வேண்டுமாயின் அது நிலத்திலே வேரூண்டப்படவேண்டும். அதன் ஊடாகவே விதைக்கு வேண்டிய நீர், கனிப்பொருட்கள் போன்றவைகள் கிடைக்கும். இதைப் போன்றே ஓர் திருச்சபை தனது சொந்த மண்ணுக்குரிய கலாசாரப் பண்புகளை தன்னகத்தே தாங்கிக் கொள்ளவும் வேண்டும். அதன் ஊடாகவே நற்செய்திக்கும் கலாசாரத்திற்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தலாம். அப்பொழுதுதான் இலங்கைத் திருச்சபை இலங்கைக்கு உரிய திருச்சபையாக மாற முடியும்.


கடுகுச் செடியில் வேறுபட்ட வகை வகையான பறவைகள் வந்து தங்குவதைப் போல ஓர் திருச்சபையில் வேறுபட்ட தன்மையுள்ள மக்கள், வேறுபட்ட கருத்தியல்களைக் கொண்டு வாழும் மக்கள் காணப்படுகின்றனர். எனவே எங்களால் அறியப்படாதவைகள் அல்லது எங்களுக்கு தெரியாதவைகள் தவறு என எண்ணிக் கொள்ளாமல் திருச்சபைக்குள் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வது வேண்டப்படும் ஒன்றாகும். அப்பொழுதே திருச்சபைக்குள் வேறுபாடுகளின் மத்தியில் ஒற்றுமையை வளர்க்க முடியும்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக