வாழ்வளிக்கும் ஆண்டவர்

வாழ்வளிக்கும் ஆண்டவர் (மாற்கு 5: 21 – 43)

ஆண்டவர் இயேசு இப்பூவுலகிற்கு வாழ்வளிப்பதற்காகவும் அந்த வாழ்வு முழுமையடைவதற்காகவும் வந்ததாக (யோவான் 10: 10) இல் வாசிக்கின்றோம். இன்று பல்வேறு காரண காரியங்களால் மனித வாழ்வு அச்சுறுத்தப்படுவதை நாம் அவதானிக்கலாம். இப்பேர்ப்பட்ட அச்சுறுத்தலில் வாழ்ந்த தொழுகைக் கூட தலைவராகிய யவீருவின் குடும்பத்திற்கு ஆண்டவர் வாழ்வளிப்பதை இத்திருமறைப் பகுதி காண்பிக்கின்றது.

ஆண்டவர் இயேசுவைக் குறித்து நற்செய்திகளில் 3 வழிகளில் மக்கள் கேள்விப்படுகின்றனர். உதாரணமாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மனிதருக்கு இயேசுவைக் குறித்து அவரின் நண்பர்கள் கூறுகின்றனர். (மாற்கு 2: 1- 12). பார்வை இழந்திருந்த பர்த்திமேயு தன்னிலே தான் பலம் கொண்டு இயேசுவைக் கூப்பிடுகின்றார். (மாற்கு 10 : 46 – 52). ஆனால் யவீருவோ நேரடியாக உதவிக்காகச் செல்லுகின்றார். ஓர் தொழுகைக் கூடத் தலைவனாக இருந்தபோதிலும் அவனிடத்தில் இயேசுவைக் குறித்த எந்த தப்பான மனநிலைகளோ, இயேசுவினிடத்தில் உதவிப் பெற செல்வதனால் தனது மனித மாண்பிற்கு அபகீர்த்தி ஏற்பட்டுவிடும் என்ற எண்ணமோ பெருமையின் சிந்தனைகளோ, உதவிக்காக இன்னுமொருவரை இயேசுவிடத்தில் அனுப்புவோம் என்ற நிலைமைகளோ ஏற்படவில்லை. வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை உடைய ஒவ்வொருவருக்கும் இப்பண்புகள் அவசியமானதாகும்.

யவீரு வாழ்வளிக்கும் ஆண்டவர் இடத்தில் செல்வதற்கும் அவர் மீது பற்றுறுதி வைப்பதற்கும் காரணம் இருந்திருக்க வேண்டும். அவனின் பற்றுறுதி கண்மூடித்தனமான பற்றுறுதி அல்ல மாறாக அறிவு சார்ந்ததாகவும் அனுபவம் சார்ந்ததாகவும் காரண காரியத் தொடர்புள்ளதாகவும் காணப்படுகின்றது. எனவே தான் இப்பற்றுறுதி வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் அசைக்கப்படாத ஒன்றாக அமைந்திருந்ததை அவதானிக்கலாம்.

யவீரு தன்னிடத்தில் காணப்பட்ட பற்றுறுதியை செயல்வடிவத்திற்கு மாற்றுகின்றார். இயேசுவின் மீது கொண்ட பற்றுறுதி இயேசுவிடத்தில் அவனை அழைத்துச் சென்று தன்னுடைய மகளின் நிலையைக் குறித்துப் பேச வைக்கின்றது. இங்கே பற்றுறுதிக்கும் செயலுக்கும் இடையே தொடர்பு இருப்பதை இப்பகுதி காண்பிக்கின்றது. செயலற்ற விசுவாசம் செத்தது என யாக்கோபு தனது நிரூபத்தில் கூறுகிறார். திருச்சபையின் சீர்திருத்த காலத்தில் சீர்திருத்தவாதிகள் பற்றுறுதிக்கு மாத்திரம் முக்கியம் கொடுத்திருந்த போதிலும் செயல்களின் முக்கியத்துவத்தை அவர்கள் மறுதலிக்கவில்லை.

யவீருவின் பார்வையிலிருந்து இப்பகுதியை மறுபடியும் உற்றுநோக்கும் போது அவனின் காரண காரியம் சார்ந்த பற்றுறுதி, செயல் வடிவம் சார்ந்த பற்றுறுதி, பூரண விளைவிற்குள் அவனைக் கொண்டு செல்லுகின்றது. அங்கே இயேசுவின் வல்லமையை மரணத்திற்கு உட்பட்டதாக யவீருவும் அவன் சமூகமுமு; அறிந்திருந்த போதிலும் மரணத்திற்கும் அப்பால் கடவுளின் செயற்பாடு நடைபெற முடியும் என்ற விளைவை அவனது மகளை மரணத்தில் இருந்து எழுப்பியதன் ஊடாக ஆண்டவர் இயேசு அவனுக்கு உணர்த்துகின்றார். வெற்றிடத்தின் மத்தியிலும் இறைவனின் வல்லமை ஊடறுத்துச் செல்லும் தன்மையுள்ளது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். எனவே வாழ்வளிக்கும் ஆண்டவர் காரண காரியம் சார்ந்த பற்றுறுதியையும் செயல் வடிவம் சார்ந்த பற்றுறுதியையும், விளைவு சார்ந்த செயல்பாட்டையும் எம்மிடத்தில் இருந்து எதிர்பார்க்கின்றார்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக