சுயநலக் கோரிக்கை

சுயநலக் கோரிக்கை (மாற்கு 10 : 35 – 45)

மத்தேயு 20 : 20 – 23 ல் இயேசுவின் சீடராகிய யாக்கோயு, யோவான் அவர்களின் தாயார் இயேசுவினிடத்தில் வருகை தந்து தனது பிள்ளைகள் இயேசுவின் அரசில் ஆளுகை செய்ய வேண்டும் என கேள்வி எழுப்புகிறார். ஆனால் மாற்கு நற்செய்தியாளரோ இத்தகைய கேள்வி யாக்கோபு, யோவான் போன்றவர்களாலேயே கேட்கப்பட்டது எனக் கூறுகின்றார். எது எவ்வாறாக இருப்பினும் ஆண்டவர் இயேசு கற்பித்துத் தந்த குடும்ப செபத்தில் மற்றவர்களின் நலனுக்காக மன்றாடுமாறு ஆண்டவர் எம்மை அழைக்கும்போது இம்மன்றாடலோ சுயநலம் சார்ந்தது ஒன்றாகக் காணப்படுகின்றது.

தமது சீடர்கள் தங்களையும் அறியாது இவ்வினாவை கேட்கின்ற போது ஆண்டவர் பொறுமையுடன் உத்தரவு அளிக்கின்றார். அதாவது அவர்களுக்கு உள்ளே காணப்படும் சிறிய நற்பண்புகள் ஏனும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் ஆண்டவர் கரிசணை உள்ளவராக இருந்தார். இதைப் போன்று ஆண்டவர் இயேசு எமது மன்றாடல்களிலும் பொறுமையாக இருக்கின்றார்.

தனது அருகில் அமர்ந்திருக்க விரும்புகின்றவர் அநேக துன்பத்தின் ஊடாகவும் பாடுகளின் ஊடாகவம் செல்ல வேண்டும் என்பதை ஆண்டவர் விலியுறுத்தினார். இங்கு பாத்திரம் என்பது கசப்பான, விரும்பப்படாத, துன்பகரமான அனுபவத்தைக் குறிக்கின்றது. (ஏசாயா 51 : 17, யோவான் 18 : 11). மேலும், தண்ணீர், வெள்ளம் போன்றவைகள் ஆபத்தைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. (ஏசாயா 43 : 2). இத்தகைய சூழலிலேயே இவர்கள் இருவரும் கிறிஸ்துவின் துன்பத்துடன் இணைய ஆயத்தமாகின்றனர். இதன்படி யாக்கோபு கிறிஸ்துவிற்குப் பின் 44ல் ஏரோதுவினால் சிறைச்சேதம் செய்யப்பட்டு, யோவான் துன்புறுத்தப்பட்டு தன் முதிர்வயதிலே மரித்தான். இவ் அனுபவம் துன்பத்தின் ஊடாக வரும் மாட்சியை எமக்கு நினைவுபடுத்தினாலும் துன்பம் எப்பொழுதும் மாட்சியைக் கொண்டு வந்து விடும் என நாம் எண்ணக் கூடாது. இச்சம்பவம் இயேசுவோடு இருந்த சீடர்கள் அவரைக் குறித்தும் அவருடைய பணியைக் குறித்தும் தவறாகப் புரிந்து கொண்டதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அவரோடு இருந்தவர்கள் அவரைக் குறித்து சரியாகப் புரிந்து கொள்வில்லை. இதைப்போன்று நாமும் எமது பணிகளில் இயேசுவை புரிந்து கொள்ள, கண்டுகொள்ள அழைக்கப்படுகின்றோம்.

ஆண்டவர் இயேசு தனது பணிகளில் எப்பொழுதும் தந்தைக்குரிய இடத்தைக் கொடுத்து வந்தார். புதுமைகள் செய்யும்போது தந்தையின் திருப்பெயராலேயே புதுமைகள் நடைபெறுகின்றன என ஒப்புக்கொண்டார் (மாற்கு 5 : 19). இச்சூழலிலும் மாட்சிமையில் சீடருக்கு வழங்கப்படும் இடத்தை கடவுளே தீர்மானிக்கின்றார் என இயேசு கூறுகின்றார். இதன் மூலம் மனித செயல்பாட்டில், திருப்பணிகளில் கடவுளின் நிலையை நாம் தெளிவுபடுத்த அழைக்கப்படுகின்றோம். சில சந்தர்ப்பங்களில் எமது திருப்பணிகளில் கடவுள் மறைக்கப்பட்டு நாங்களும் எமது தாலந்துகளும் அடையாளங்களும் திருச்சபை அடையாளங்களுமே வெளிப்படுத்தப்படுவதை நாம் காணலாம். மேலும் எவ்வாறு பணி செய்ய வேண்டும், யாருக்குப் பணி செய்ய வேண்டும் என நாம் சிந்திப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாறாக பணியினால் ஏற்படும் விளைவு என்ன என்பதைக் குறித்து அதிகம் சிந்திப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எமது பணிக்கான கூலியை ஆண்டவரே தருகின்றார் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுமாறு இச்சம்பவம் எம்மை அழைக்கின்றது.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக