உமக்கு என்ன வேண்டும்

உமக்கு என்ன வேண்டும் (மாற்கு 10 : 46 – 52)

மாற்கு நற்செய்தியில் பர்திமேயு என்ற பெயருடன் வாழ்ந்த பார்வையற்ற மனிதனைக் குறித்துப் படிக்கின்றோம். ஆசிரியர் பெயரைக் குறிப்பிடுவதன் மூலம் இப்பகுதிக்கு வரலாற்று வாய்மையைக் கொடுக்கின்றார். இம்மனிதர் பல்வேறுபட்ட தடைகளைத் தாண்டி இயேசுவிடம் பார்வை பெற்று இயேசுவைப் பின் தொடரும் நிலையை நாம் காணலாம். இதன் மூலம் ஏசாயா இறைவாக்கினர் கூறும் இயேசுவின் மேசியாத்தன்மை நிரூபிக்கப்படுகின்றது (ஏசாயா 29 : 18, 42 : 1, 7). மேலும் இயேசுவின் மேசியாத்தன்மையை பர்வையற்ற மக்கள் அனுபவிக்கும்போது பார்வையுள்ள மக்களோ தங்கள் கண்களைக் குருடாக்கியவர்களாக காணப்படுகின்றனர் (யோவான் 8 : 12 , 9 : 40, 41). இயேசுவோடு இருந்த சீடர்கள் அவரை மேசியா என்று உணரவில்லை. ஆனால் இம்மனிதனோ இயேசுவிற்கு தொலைவில் வாழ்ந்தபோதிலும் இயேசுவின் விடுவிக்கும் ஆற்றலை அறிந்திருந்தார்.

பர்திமேயு இயேசு வருகிறார் எனக் கேள்வியுற்ற போது தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும் எனக் கதறத் தொடங்கினார் (10 : 47). 2 சாமுவேல் 5ம் அதிகாரத்தில் எபூசிசியர்களனி; காலத்தில் தாவீது எருசலேமைக் கைப்பற்ற முற்பட்டபோது எபூசியர்கள் தாவீதை நோக்கி எங்கள் தேசத்திலுள்ள மாற்றியல்புள்ள மக்கள் உன்னை வெற்றி கொள்ளக்கூடும். நீ அந்தளவிற்கு பலமற்றவன் என எள்ளி நகையாடினர். அந்நாள்முதல் மாற்றியல்புள்ள மக்கள் ஆலயத்திலிருந்து புறம்பாக்கப்பட்டனர். எனவே இம்மக்கள் தாவீதினால் ஏற்படுத்தப்பட்ட தடை தாவீதின் பரம்பரையில் இருந்து வரும் மேசியாவால் நீக்கப்படும் என நம்பினர். அதாவது இயேசு இழந்துபோன உரிமையை மறுபடியும் தருவார் என எண்ணினார். இதன் ஒளியிலேயே இயேசுவை தாவீதின் குமாரனே என பர்திமேயு கூப்பிடுகின்றார். இங்கு பர்திமேயுவிற்கு பார்வை மாத்திரம் கிடைக்கவில்லை. மாறாக, அவனின் தனித்துவமும் அடையாளமும் இப்புதுமைக்கு ஊடாக வெளிப்படுத்தப்பட்டது. எனவே ஆண்டவர் இயேசு அடையாளமற்ற மக்களுக்கு அடையாளத்தை வழங்கும் நிகழ்வை இங்கு காணலாம்.

ஆண்டவர் எரிகோவை நோக்கி பயணிக்கும் வேளையில் சிலுவைப்பாடுகள், மரணங்கள் போன்றவற்றைக் குறித்து சிந்தித்துக் கொண்டே சென்றார். இதன் மத்தியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். எனினும் தேவையுள்ள ஒரு மனிதனின் குரலுக்கு ஆண்டவர் மதிப்பளித்து அவனின் தேவையை பூர்த்தி செய்வதைக் காணலாம். இதன் ஒளியில் பெரும்பான்மை சமூகத்தை நோக்கிய சிந்தனையில் ஆண்டவரின் பணி காணப்படாமல் சிறும்பான்மையினரை மையப்படுத்தியே அவரின் பணி காணப்பட்டது. எனவே இன்றைய பணி இவ்விரண்டு இலக்குகளுக்கும் இடையே போராடுவதைக் காணலாம். குரலற்ற மக்களின் குரலாகிய பர்திமேயுவின் குரலை ஆண்டவர் செவிமடுத்தார். இன்றும் எம்மைச் சுற்றி பல்வேறுவிதமான சத்தங்களுக்கு மத்தியில் தேவையுள்ள குரல்களுக்கு செவிகொடுப்பது வேண்டப்படும் ஒன்றாகும். இயேசுவின் எரிகோ பிரயாணத்தில் இன்னுமோர் பணி இடையில் குறுக்கிடுகின்றது. அதாவது குழப்பத்தை ஏற்படுத்துகின்றது. இச்சூழலில் ஆண்டவர் இயேசு இம் மனிதனினால் ஏற்படும் குழப்பம் அவசியமானது என அடையாளம் காணுகின்றார். எமது வாழ்வில் நாம் கடவுளினாலும் மனிதரினாலும் குழப்பமடையும்போது அதன் அவசியத் தன்மையை உணர்ந்து கொள்ளுதல் அவசியமாகும்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக