நீ இறையரசிற்குத் தூரமானவனல்ல

நீ இறையரசிற்குத் தூரமானவனல்ல (மாற்கு 12 : 28 – 34)

யூத மக்களின் வரலாற்றில் சட்டங்களும் கற்பனைகளும் முக்கிய இடத்தை எடுக்கின்றன. சிறப்பாக இப்பகுதியில் ஆண்டவர் இயேசு கற்பனைகளைப் பற்றிப் பேசுகின்றார். உன் கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்பு கூறுவாயாக என்பதே ஆகும். இது யூத இணைச்சட்டத்தில், உபாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளது (உபா 6 : 4, 5). மேலும் சம்மா என்ற வார்த்தையின் ஊடாக இப்பதம் வலியுறுத்தப்படுகின்றது. மேலும் யூதர்களுடைய விசுவாச அறிக்கையில் இது காணப்படுவதோடு இப்பதத்தை தமது நெற்றிகளில் எழுத்துச் சுருளை ஒட்டி இருந்தனர். இந்தளவிற்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது. இக்கட்டளை கடவுளின் ஏகத்துவத்தை வலியுறுத்துவதாகவும் கடவுளின் ஒருமைத்தன்மையை மதிப்பதாகவும் காணப்படுகின்றது. மேலும் கடவுள் ஒருவராய் இருப்பதனால் கடவுளுடைய இடத்தில் பிற கடவுளரையோ, கொள்கைகளையோ, பதவிகளையோ வைத்திருத்தல் தவறாகும் என்ற சிந்தனையை எமக்கு எடுத்துக்காட்டுகின்றது. மேலும் கடவுளை முழுமனதோடும், பலத்தோடும், ஆன்மாவோடும் வழிபடுதல் என்பது கடவுளுக்காக நாம் இழக்க வேண்டியவைகளின் முக்கியத்துவத்தைக் காண்பிக்கின்றது (1 பேதுரு 3 : 15).

உன்னைப் போல் உன் பிறனையும் நேசி இப்பதம் யூதப்பிரமாணத்தில் காணப்படும் ஒன்றாகும் (லேவியராகமம் 19 : 18). எனினும் இக்கட்டளையை ஆண்டவர் இயேசு மேற்கூறிய கட்டளையுடன் இல்லையேல் கடவுளை வழிபடுவதுடன் இணைத்திருப்பதே மேன்மையானது ஒன்றாகும். இங்கு இஸ்ராயேல் மக்களைப் பொறுத்தவரை அயலவர்கள் என்பது தமது சொந்த இன மக்களையே குறிப்பதாக எண்ணினர். இதனால் தமக்குள்ளேயே அறச்செயல்களையும் புனிதச் செயல்களையும் ஆற்றி வந்தனர். ஆனால் இயேசுவோ இச்செயல்கள் இஸ்ராயேலர்களின் எல்லைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்பதை நல்ல சமாரியன் கதை வாயிலாக உணர்த்தி இருந்தார் (லூக்கா 10 : 25 – 37). பிறரை நேசிக்கும் பயணத்தில் சரிவரப் பயணிக்க வேண்டுமேயாகில் நாம் எம்மை நேசிக்க வேண்டும். (தொ. நூல் / ஆதி 1: 27). மேலும் எமது அன்பு செயல் சார்ந்த வடிவில் காணப்பட வேண்டும். ஏனெனில் இச்செயல்களே எம்மை நியாயந்தீர்க்கும் என்பதை மறந்து விடக்கூடாது (மத்தேயு 25 : 36 – 50).

கடவுளையும் மனிதரையும் நேசித்தல் என்பது அனைத்துப் பலிச்சடங்குகளிலும் பார்க்க மேலானதாகும். ஏனெனில் கடவுள் பலிகளை அல்ல மாறாக இரக்கத்தையே விரும்புகின்றார் (ஓசியா 6 : 6). உண்மையான கடவுள் வழிபாடு மனிதனோடு உள்ள உறவின் அடித்தளத்தினால் தீர்மானிக்கப்படும் (மத்தேயு 5 : 22, 23), (ஆமோஸ் 5 : 18 – 21). கடவுளோடு உள்ள உண்மையான உறவு மனிதரோடு உறவைப் பேண வேண்டிய முக்கியத்துவத்தை எமக்கு வலியுறுத்திக் காட்டும். எனவே தான் மாட்டின் லூதர் பின்வருமாறு கூறுகின்றார். ஒருவருடைய நற்செயல்கள் அவரை கடவுளண்டை வழிநடத்தவது இல்லை. மாறாக அவர் கடவுளோடு இருப்பதால் மாத்திரமே அவரால் நற்செயல்கள் செய்ய முடியும் என வாதிடுகின்றார். இவ் உறவே சிலுவையின் நிலைக்குத்து அச்சினாலும் கிடை அச்சினாலும் வலியுறுத்தப்படுகின்றது. நிலைக்குத்து அச்சு கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயுள்ள உறவையும் கிடையச்சு மனிதனுக்கும் சக மனிதனுக்கும் இடையேயுளள் உறவையும் வலியுறுத்துகின்றது. இவ் அறிஞர் இவைகளை அறிந்திருந்தபோதிலும், ஏற்றுக்கொண்ட போதிலும் இயேசுவைப் பின்பற்றுவதில் தாமதத்தை வெளிப்படுத்தியதனாலேயே அவன் இறையரசிற்குத் தூரமானவனல்ல என அழைக்கப்பட்டான். எங்கள் கிறிஸ்தவ வாழ்விலும் கண்டவைகளை, கேட்டவைகளை, அறிந்தவைகளை கடைப்பிடிப்பதில் தாமத்தை வெளிப்படுத்தும்போது நாம் இறையரசிற்கு அருகில் இருப்பவர்களாகவே கருதப்படுவோம்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக