நாம் வாழுகின்ற பரபரப்பான உலகில் எவ்வாறு பரபரப்பற்ற முறையில் பணி செய்வது என்பதற்கு இயேசுவின் சீடனாகிய அந்திரேயாவின் வாழ்வு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். யோவான் நற்செய்தியின் அடித்தளத்தில் அந்திரேயா இயேசுவால் அழைக்கப்பட்டு அவரை நன்கு அனுபவிக்கின்றார். இவ் அனுபவம் அறிவின் அடித்தளத்தில் உருவாகாமல் மாறாக இயேசுவுடன் இரண்டறக் கலக்கும் செயற்பாட்டின் ஊடாக வெளிப்படுவதை நாம் காணலாம். எனவே தன் அனுபவத்தை ஏனையவர்களுக்கு முன்பாக வெளிப்படுவதை நாம் காணலாம். (யோவான் 1:41) ஊழியத்தில் இயேசுவை அனுபவித்த மிகவும் முக்கியமானதோர் காரியம் ஆகும்.
![]() |
பரபரப்பற்ற ஊழியம் |
இயேசுவை அனுபவித்த அந்திரேயா அவரை பிறருக்கு அறிவிப்பவராக பணியாற்றுகின்றார். மேலும் இயேசுவுக்கும் மக்களுக்கும் இடையே தொடர்பாளராகவும் கடமையாற்றுகின்றார். குறிப்பாக 5000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு உணவளித்த சம்பவத்தில் அந்திரேயாவின் பங்கு முக்கியமானதாகும். ஏனெனில் 5 அப்பங்களையும் 2 மீன்களையும் வைத்திருந்த பையனை இயேசுவிற்கு அறிவிக்கும் பணியில் அந்திரேயா காணப்பட்டார். இதன் ஊடாக அநேகர் ஆசீர் பெற்றனர். ( யோவான் 6:9) இயேசுவை பிறருக்கு அறிவிக்கும் அறிவிப்பாளராகவும் இணைப்பாளராகவும் செயற்படுவதை இங்கு காணலாம். இவரின் அறிவித்தல் வார்த்தையால் மாத்திரமின்றி செயலாலும் இருந்ததைக் காணலாம். எனவே தான் புனித பிரான்சிஸ் நற்செய்தி அறிவிப்பது பற்றி பின்வருமாறு கூறுகின்றார். 'நற்செய்தியை அறிவித்துக் கொண்டே இருங்கள் தேவை ஏற்படும் போது மாத்திரம் வார்த்தையைப் பாவியுங்கள்'. டான் சூட்டர் என்பவர் தனது பாடலில் ஓர் நற்செய்தியை அறிவிப்பவர் மக்களுடைய துன்பங்களை தன் துன்பங்களாக மாற்றிக் கொள்ள அழைக்கப்படுகின்றார் எனக் கூறுகின்றார். இதன் ஒளியில் அந்திரேயா உணவு அற்றிருந்த மக்களின் துன்பத்தை தன் துன்பமாக மாற்றி உணவுள்ள சிறுபையனை கண்டு பிடித்து இயேசுவுடன் அவரை தொடர்புப்படுத்துவதன் ஊடாக தான் அனுபவித்த இயேசுவை பிறருக்கு முன்பாக அறிக்கை இடுகின்றார். D. T. நைல்ஸ் என்னும் தேவ ஊழியர் ஓர் கடவுளுடைய பணியாளன் எப்பொழுதும் மக்களை கிறிஸ்துவுடன் தொடர்புப்படுத்தும் பணியில் தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும் என்கிறார். இப்பணியை அந்திரேயா சிறப்பாக ஆற்றுவதைக் காணலாம்.
இயேசுவை அனுபவித்த அறிக்கை இட்ட அந்திரேயா தன்னை முற்றிலுமாக அவருக்கு அர்ப்பணிப்பதை நாம் காணலாம். வழிப்பாட்டிற்காக திருவிழாவிற்கு வந்த கிரேக்கர்கள் முன்னிலையில் ஆண்டவர் இயேசு தம்முடைய சீடர்கள் கோதுமை மணி நிலத்தில் வீழ்ந்த மரித்து எவ்வாறு அநேகருக்கு பலனளிக்கின்றதோ அவ்வாறே தன்னை பின்பற்றும் ஒவ்வொருவரும் நற்செய்திக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என சவால் இடுகின்றார். (யோவான் 12:24) இச்செயலை ஏற்றுக்கொண்ட அந்திரேயா நற்செய்தியை பல பகுதிகளில் அறிவித்து கி.பி.83ம் ஆண்டில் தொமிசியனின் காலத்தில் X வடிவ சிலுவையில் அறையப்பட்டு இரத்த சாட்சியாக மரித்ததை வரலாறு கூறுகின்றது. அந்திரேயாவின் அர்ப்பணிப்பு அவரை மரணம் வரை இயேசுவிற்காக வழிநடத்தி சென்றதை நாம் காணலாம். இதே காலத்தில் வாழ்ந்த பொலிகாப் என்னும் கடவுளுடைய மனிதல் திராஜன் என்னும் உரோம அரசனுக்க முன்பதாக பின்வருமாறு சாட்சி பகருகின்றார். அரசனே 86 வருடங்களாக எனது வாழ்வில் ஆண்டவர் இயேசு எத்தகைய தீமைகளையும் எனக்குச் செய்யவில்லை. இப்பேர்ப்பட்ட எனது ஆண்டவருக்காக நான் மரிப்பதே ஒழிய அவரை மறுதலிக்கமாட்டேன் என சான்று பகர்ந்தார்.
அந்திரேயா அனுபவித்த ஆண்டவரை அறிக்கை இட்டது மாத்திரமின்றி அவருக்காக தன்னை அர்ப்பணித்தார். எனவே நாங்கள் அனுபவிக்கின்ற இயேசுவை பிறருக்கு அறிவிக்கவும் ஆயத்தப்படுவோமாக. எனவே இப்பேர்ப்பட்ட பரபரப்பற்ற ஊழியத்தை செய்ய முயற்சிப்போமாக!
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக