விண்ணேற்றத் திருநாள்

விண்ணேற்றத் திருநாள் (தி.பணிகள் 1 : 1 – 11 , மாற்கு 16 : 15 – 20 , மத்தேயு 28 : 16 – 20 , லூக்கா 24 : 36 – 49 , யோவான் 20 : 19 – 23)

ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றமடைந்த நிகழ்வைக் குறித்து எல்லா நற்செய்திகளாரும் குறிப்பிடுகின்றனர். இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்குப் பின்னர் இச்செயற்பாடு கலிலேயாப் பகுதியில் நடைபெறுவதாக ஆசிரியர் காண்பிக்கின்றார். ஒடுக்கப்படுகின்ற மக்கள் வாழ்கின்ற பிரதேசமாக கலிலேயா காணப்படுகின்றது. இப்பகுதியே இயேசுவின் பணியில் முக்கிய இடம் வகிக்கின்றது. இயேசு இப்பூவுலகை விட்டுச் செல்வது இம்மக்களைப் பொறுத்தவரை துயர் நிறைந்த செய்தியாகும். எனவே இப்பேர்ப்பட்ட மக்களை ஆறுதல் படுத்தும் நிகழ்வாக இதனை நாம் கொள்ளலாம். இதன் ஊடாக ஒதுக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, துயர் நிறைந்த மக்களை ஆறுதல்படுத்தும் பணியை இயேசுவின் விண்ணேற்பு நிகழ்வு எமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைய முன்னர் திருச்சபைக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியையும், குணமாக்கும் பணியையும் பெய்யுமாறு வலியுறுத்திச் சென்றார். அதாவது ஒரு முழு மானிட விடுதலைக்காக செயற்பட சீடர்களை அழைத்தார். இச்செயற்பாடு யாத்திரையில் எப்பொழுதும் நான் உங்களுடன் இருப்பேன் என வாக்களித்துள்ளார். மேலும் இப்பணியை திருச்சபை புரிவதற்கு கடவுளில் தங்கி இருந்து காத்திருக்க வேண்டிய அனுபவத்தை வலியுறுத்துகின்றார் (சங்கீதம் 130 : 5, எபிரேயர் 11 : 1). மேலும் இப்பணியை திறம்பட செய்வதற்கு தூய ஆவியரின் வல்லமையும் அவசியமாகின்றது (தி. பணிகள் 1 : 9).

விண்ணேற்ற நிகழ்வு புதிய ஏற்பாட்டுக்கு மாத்திரம் உரித்துடையது ஒன்றல்ல. மாறாக இறைவாக்கினர் எலியாவின் விண்ணேற்பு, ஏனோக்குவின் விண்ணேற்பு போன்றவற்றையும் நாம் இங்கு குறிப்பிடலாம். தி. பணிகள் 11 : 6 இன்படி ஆண்டவர் இயேசு விண்ணேற்ற நிகழ்வின் போது வானத்தை அண்ணார்ந்து பார்த்துக் கொண்டிருந்த மக்களை நோக்கி இந்நிகழ்வைக் குறித்து தேவையற்ற ஆய்வில் ஈடுபடுவதைவிட செயற்படுவது வேண்டப்படும் ஒன்றாகும். இதனையே பரி. பவுல் தெசலோனிக்கேய திருச்சபை மக்களுக்கும் எடுத்துக் காண்பிக்கின்றார். ஏனெனில் தெசலோனிக்கேய மக்கள் ஆண்டவர் இயேசு வெகுவிரைவில் வருகை தந்திடுவார் என எண்ணி தமது நாளாந்த பணிகளை இடைநிறுத்தி சோம்பேறிகளாக வாழ்ந்தனர் (1 தெசலோனிக்கேயர் 4 : 1 – 10). இதைப்போன்றே விண்ணேற்றமடைந்த ஆண்டவர் இயேசுவின் வருகையைக் குறித்தும் காலங்களைக் குறித்தும் ஆய்வு செய்யாமல் அதற்காக எம்மைத் தயார்படுத்துவதே மேலான செயல் என்கிறார்.

விண்ணேற்றமடைந்த ஆண்டவர் தந்தையின் வலது பக்கத்தில் அமர்ந்துள்ளார். அங்கிருந்து கொண்டு துன்புறுத்துகின்ற ஒவ்வொருவரையும் கடிந்துகொண்டு எச்சரிக்கின்றார். குறிப்பாக சவுல் திருச்சபையை துன்புறுத்தும் வேளையில் 'சவுலே சவுலே நீ ஏன் என்னை துன்புறுத்துகிறாய்' என நடுத்தீர்க்கின்றார்) தி. பணிகள் 9 : 1 – 6). மேலும் துன்பப்படுகின்ற மக்களை ஆறுதல்படுத்தி அவர்களுக்கு கடவுளின் பிள்ளைகள் என்ற பட்டத்தையும் வழங்குகின்றார் (தி. பணிகள் 7 : 56 – 58). எனவே விண்ணேற்றமடைந்த ஆண்டவர் தொடர்ந்தும் துன்பப்படும் மக்கள் சார்பில் பணியாற்றுகின்றார் என்பது எமக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு செய்தி ஆகும்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக