ஆவியர்பற்றிய சிந்தனை பொதுவாக எல்லா மதங்களிலும் காணப்படுகின்றது. கிறிஸ்தவ மதத்தில் திருத்துவத்தில் மூன்றாவது நிலையை உடைய ஆள்தத்துவம் மிக்கவராக தூய ஆவியானவர் காட்டப்படுகின்றார். பழைய ஏற்பாட்டில் ஓர் குறிக்கப்பட்ட நோக்கத்திற்காக வழங்கப்பட்டு அப்பணி நிறைவேறியவுடன் ஆவியானவர் அந்நபரில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகின்றார். ஆனால் புதிய ஏற்பாட்டில் உடனிருக்கும் ஆவியின் பிரசன்னத்தை நாம் உணர்ந்து கொள்ளுகின்றோம். திருமறையில் தூய ஆவியானவர் மக்களை வழிநடத்திச் செல்லும் ஒருவராகக் காட்டப்படுகின்றார்.
தூய ஆவியானவர் மற்றவர்களின் நல்வாழ்விற்காக சவால்களை ஏற்றுக்கொள்ளுமாறு எங்களை வழிநடத்திச் செல்லுவதை திருமறை காண்பிக்கின்றது (லூக்கா 1 : 26 – 38) வரையுள்ள பகுதியில் மற்றவர்களின் நல்வாழ்விற்காக சவால்களை ஏற்றுக்கொள்ளுமாறு தூய ஆவியானவர் மரியாளை வழிநடத்திச் செல்லுகின்றார். காபிரியேல் தேவதூதனிடம் இருந்து அழைப்பைப் பெற்ற மரியாள் ஆரம்பத்தில் இவ் அழைப்பை நிராகரித்த போதிலும் தூய ஆவியானவர் மரியாளை சவாலிட்டு மற்றவர்களின் விடுதலைக்காக நீ பாடுபட வேண்டும் என வழிநடத்திச் செல்வதைக் காணுகின்றோம். எமது நாளாந்த வாழ்விலும் நாம் சவால்களுக்கு முகம் கொடுக்க தூய ஆவியானவர் எம்மை அழைக்கின்றார். சவால்களுக்கு முகம் கொடுத்தல் தூய ஆவியானவரின் வழிநடத்துதலைப் புரிந்து கொள்ளும் ஓர் மார்க்கமாகும்.
லூக்கா 1 : 29 – 32 வரையுள்ள பகுதியில் சிமியோனின் பாடலை லூக்கா நற்செய்தியாளர் மாத்திரம் கவிதை வடிவில் தருகின்றார். இது அவருக்குரிய ஓர் தனித்துவமாகும். தூய ஆவியால் வழிநடாத்தப்பட்ட சிமியோன் இயேசுவைக் கரங்களில் ஏந்திய வண்ணம் இயேசுவின் பெற்றோரை நோக்கியவராகப் பின்வருமாறு கூறுகின்றார். புறஜாதியருக்கு ஒளியாகவும் இஸ்ராயேலருக்கு மகிமையாகவும் தேவரீர் சகல ஜனங்களுக்கு முன்பாக ஏற்படுத்திய ரட்சணியத்தை என் கண்கள் கண்டன என இறைவாக்கு உரைக்கின்றார். யூத மைய சிந்தனையுள்ள மக்களுக்கு எல்லோரையும் உள்வாங்கும் தன்மையுள்ள புதிய சிந்தனையை சிமியோன் படைக்கின்றார். இவ் இறைவாக்கில் ஒப்புரவாகல் பணியும் மறைமுகமாக மறைந்துள்ளது. அதாவது ஆலயத்திற்கு உள் இருக்கும் மக்களையும் ஆலயத்திற்கு வெளியே இருக்கும் மக்களையும் ஆண்டவர் இயேசு ஒப்புரவாக்கவுள்ளார் என சுட்டிக்காட்டுகின்றார். இவ் ஒப்புரவாக்கல்பணி கிறிஸ்து மையத்திலேயே நடைபெறுகின்றது. மேலும் சிமியோன் மரியாளை நோக்கி உன் இதயத்தையும் பட்டயம் ஒன்று ஊடுருவிப் போகும் என இறைவாக்கு உரைக்கின்றார். அதாவது எல்லோரையும் உள்வாங்கும் தன்மையுள்ள பணியைப் புரியும் போது ஆண்டவர் இயேசு அனுபவிக்க வேண்டிய கிரயத்தைப் பற்றியே இவ் இறைவாக்கு சுட்டிக்காட்டுகின்றது. எனவே தூய ஆவியானவர் சிமியோனை சமூகத்தில் மாற்றுச் சிந்தனையை அல்லது மாற்றுக் கலாசாரத்தை முன் வைக்கும் இறைவாக்குரைக்கும் பணியில் வழிநடத்திச் செல்லுகின்றார். எனவே தூய ஆவியால் வழிநடத்தப்படும் ஒருவர் சமூகத்தில் மாற்றுச் சிந்தனையை முன்வைக்கும் இறைவாக்குரைக்கும் பணியையும் பணியில் நாம் அனுபவிக்க வேண்டிய அல்லது செலுத்த வேண்டிய கிரயங்கள் பற்றிய சிந்தனையையும் முன் வைக்க அழைக்கப்படுகின்றனர்.
ஆண்டவர் இயேசு திருமுழுக்குப் பெற்ற பின் சோதிக்கப்படுவதற்காக தூய ஆவியால் வனாந்தரமான ஓர் பகுதிக்கு வழிநடத்தக்கட்டு செல்லப்பட்டதாக லூக்கா 4 : 1 – 11 வசனம் வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். இங்கு தூய ஆவியானவர் இயேசுவை பல்வேறுபட்ட அனுபவங்களுக்கு ஊடாக அனுப்புகின்றார். இவ் அனுபவங்கள் கடவுளுடன் உள்ள உறவையும் மனிதர் மீதுள்ள உறவையும் கட்டியெழுப்புவதற்கு அடித்தளங்களாக விளங்கியுள்ளன. ஆண்டவர் இயேசுவின் பணியில் நிச்சயமற்ற தன்மையில் இருந்து எழும் சந்தோஷத்தை காணுமாறு தூய ஆவியானவர் வழிநடத்திச் செல்லுகின்றார். இயேசுவின் பணியில் நிலவப்போகின்ற உறுதியற்ற நிச்சயமற்ற ஏற்றுக் கொள்ளமுடியாத அனுபவங்களின் மத்தியில் இருந்து அனுபவிக்கப்போகும் சந்தோஷத்தை கண்டறியுமாறு தூய ஆவியானவர் அழைக்கின்றார். எனவே எமது நாளாந்த வாழ்விலும் நிச்சயமற்ற அனுபவங்களில் இருந்து எழும் சந்தோஷத்தை அனுபவிக்க தூய ஆவியானவர் எம்மை வழிநடத்திச் செல்லுகின்றார்.
சில சந்தர்ப்பங்களில் நாம் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டு செல்கின்ற வேளையில் ஒரு சிலரால் நாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. தூய ஆவியின் செயலை சரிவர புரிந்து கொள்ள முடியாதவர்கள் தூய ஆவியால் வழிநடத்தப்படுகின்றவர்களையும் புரிந்து கொள்வதில் கடினத்தன்மையை எதிர்கொள்ளுகின்றனர். குறிப்பாக பெந்தேகோஸ்தே தினத்தன்று தூய ஆவியால் நிரப்பப்பட்ட மக்கள் அயல் மொழியில் பேச ஆரம்பித்த போது அங்கு கூடி நின்ற மக்கள் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களை குடிகாரர்கள் என நினைத்ததை திருமறையில் காணலாம் (தி. பணிகள் 2 : 15). மேலும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு புதுமைகள் பல புரிந்த பேதுருவை சீமோன் தவறாகப் புரிந்து கொண்டு ஆவியின் கொடையை பணத்திற்கு வாங்க முற்பட்ட சம்பவத்தை நினைவிற் கொள்ள வேண்டும் (தி. பணிகள் 8 : 18 – 19). இதன் ஒளியில் இன்றும் கூட ஆவியால் ஆட்கொள்ளப்படுகின்ற மக்களின் செயற்பாட்டை ஒரு சிலர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். எனவே பிறர் தவறாக எம்மைப் புரிந்து கொள்ளுமாறு தூய ஆவியானவர் எம்மை வழிநடத்திச் செல்வதை நாம் காணலாம்.
தூய ஆவியின் துணைகொண்டு எழுதப்பட்ட திருமறையின் உண்மைகளை பிறருக்கு விளங்கப்படுத்தும் பணியில் தூய ஆவியானவர் மக்களை வழிநடத்துகின்றார். திருமறையை சூழலுக்கு ஏற்ற வகையிலும் பிறர் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையிலும் புரிய வைப்பதில் தூய ஆவியரின் பங்கு மிகப் பெரிதாகக் காணப்படுகின்றது. குறிப்பாக எத்தியோப்பிய அண்ணகன் ஏசாயாவின் சுருளை வாசித்த போதிலும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாதவனாகத் திகைத்தான். அப்பொழுது தூய ஆவியானவர் பிலிப்புவை நோக்கி அண்ணகனிடம் சென்று விளங்காத பகுதியை விளங்க வைக்குமாறு கூறுகின்றார் (தி. பணிகள் 8 : 29 – 31). எனவே புரிய முடியாத உண்மைகள் பிறருக்குப் புரிய வைக்குமாறு தூய ஆவியானவர் மக்களை வழிநடத்துகின்றார்.
நற்செய்தியின் பொருட்டு துன்ப துயர அனுபவங்களை அனுபவிக்குமாறு தூய ஆவியானவர் எம்மை வழிநடத்துகின்றார். தமஸ்கு வழியிலே பிரயாணப்பட்டுக் கொண்டிருந்த பவுல் திடீரென ஒளி இழந்தான். இவனின் மனமாற்றத்திற்கு உதவுமாறு தூய ஆவியானவர் அனனியாவிடத்தில் கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் அனனியா இப்பணியைச் செய்ய மறுப்புத் தெரிவித்தான். எனினும் தூய ஆவியானவர் நற்செய்தியின் பொருட்டு துன்பங்களை அனுபவிக்க அவனை உற்சாகப்படுத்தியதை திருமறையில் நாம் காணலாம் (தி. பணிகள் 9 : 12 , 13). மேலும் பவுல் எபேசுவில் 3 வருடம் பணி புரிந்த பின் எருசலேமை நோக்கி புறப்படுவதற்கு முன்னர் மக்களை நோக்கி எருசலேமில் எனக்குக் கட்டுக்களும் உபத்திரவங்களும் உண்டு. எனினும் இவற்றை நான் அனுபவிப்பதற்கு வேண்டிய ஆற்றலை தூய ஆவியர் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவரே இந்தப் பாதையின் வழியாக என்னை நடத்துகின்றார் (தி. பணிகள் 20 : 22, 24). மேற்காட்டிய உதாரணங்களின் அடித்தளத்தில் சில சந்தர்ப்பங்களில் நற்செய்தியின் பொருட்டு துன்பங்களை அனுபவிப்பதற்காக தூய ஆவியானவர் எம்மை வழிடத்திச் செல்லுகின்றார்.
சில சந்தர்ப்பங்களில் எமக்கு விருப்பமில்லாத, ஏற்றுக் கொள்ள முடியாத புரிந்து கொள்ளக் கடினமான காரியங்களை ஆற்றுமாறு தூய ஆவியானவர் எம்மை வழிநடத்திச் செல்லுகின்றார். உதாரணமாக பேதுருவைப் பொறுத்தவரையில் கடவுளின் செயல்பாட்டை யூத மத எல்லைகளுக்குள் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ள மட்டும் விரும்பினார். எனினும் யோப்பா பட்டணத்தில் அவர் கண்ட காட்சி புற இன மக்கள் மத்தியிலும் கடவுளின் செயல்பாடு உண்டு என கண்டுகொள்ளுமாறு கடவுள் அவரை அழைத்தார். பேதுருவைப் பொருத்தவரையில் இவ்வுண்மையை ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும் தூய ஆவியானவர் அவ்வுண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அவருக்குக் கொடுக்கின்றார். மேலும் தி. பணிகள் 15 ஆம் அதிகாரத்தில் ஒரு மனிதன் மீட்படைய விருத்தசேதனம் அவசியமில்லை மாறாக கிறிஸ்துவின் அருளே மேலானது என்கின்ற உண்மையை பேதுரு வலியுறுத்தினார். இவ்வாறாக எல்லாரையும் உள்வாங்கும் மனிதராக பேதுருவை மாற்றுவதில் தூய ஆவியரின் வழிநடத்துதல் மிக முக்கியமாகக் காணப்படுகின்றது. எனவே எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத நாம் புரிந்து கொள்ள விரும்பாத உண்மைகளை எமக்குப் புரிய வைப்பதில் தூய ஆவியரின் செல்வாக்கு மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
தூய ஆவியால் வழிநடத்தப்படும் ஒருவர் நற்செய்திக்காகவும் மற்றவர்களின் நன்மைக்காகவும் தீர்க்கதரிசனப்பணியை ஆற்ற முன்வருவதை அவதானிக்கலாம். குறிப்பாக அரசியல், மத, எல்லைகளில் நடைபெறும் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பதை நாம் அவதானிக்கலாம். குறிப்பாக யூத செனகரிம் சங்கம் இயேசுவைப் பற்றி பிறருக்கு எடுத்துக் கூறக் கூடாது எனக் கட்டளை பிறப்பித்த போது பேதுரு மதவாதிகளை நோக்கி உங்களுக்கு கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிவது மேலானது எனக் கூறுகின்றார் (தி. பணிகள் 4 : 19). மேலும் ஸ்தேவான் ஆதித்திருச்சபையில் காணப்பட்ட இனவாதத்தையும் (திஇ பணிகள் 6 : 5), கடவுள் கைகளினால் கட்டப்பட்ட ஆலயத்தில் மாத்திரம் வாசம் செய்வார் என்ற பிழையான இறையியலையும் (தி. பணிகள் 6 : 48) சவாலிடுகின்றார். எனவே தூய ஆவியால் வழிநடத்தப்படும் ஒரு மனிதனோ அல்லது சமூகமோ சவால்களை உருவாக்குவதற்கோ அல்லது நடைமுறைப்படுத்துவதற்கோ அச்சமடையமாட்டார்கள்.
எனவே தூய ஆவியானவர் மற்றவர்களின் நன்மைக்காக அவமானங்களை ஏற்றுக் கொள்ளவும் நற்செய்தியின் ஒளியில் இறைவாக்குரைக்கவும் நிச்சயமற்ற சூழலில் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளவும் இறைவாக்குகளை பிறருக்குப் புரிய வைப்பதற்காகவும் புரிந்து கொள்ளமுடியாத ஏற்றுக்கொள்ள முடியாத அனுபவங்களுக்கூடாக எம்மை வழிநடத்தவும் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கவும் நற்செய்தியின் பொருட்டு துயரங்களை அனுபவிப்பதற்காகவும் எம்மை அழைத்து வழிநடத்துகின்றார். எனவே தூய ஆவியினால் வழிநடத்தப்படுகின்ற நாங்கள் ஆவியின் செயற்பாடுகளை புரிந்து கொண்டு செயல்பட இறைவன் எம்மை அழைக்கின்றார்.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக