கார்த்திகை மாதம் 2ம் திகதி இளைப்பாறுதலுக்குள்ளும் நீங்கா வெளிச்சத்திற்குள்ளும் பிரவேசித்த அனைத்து ஆன்மாக்களையும் திருச்சபை நன்றியுடன் நினைந்து வருகின்றது. மேலும் கார்த்திகை மாதம் 1 ம் திகதி அனைத்துப் புனிதர்களையும் திருச்சபை நினைந்து அவர்களின் தோழமையைக் குறித்து இறைவனுக்குப் புகழ்பாடுகின்றது. இத்தகைய சூழலில் கடவுளுக்குள்ளே நித்திரையடைந்த அடியவர்கள் இவ்வுலகத்தில் வாழும் எங்களைப் பார்த்து எத்தகைய செய்திகளைக் கூறுகின்றார்கள் என்பதைக் குறித்து இங்கு கவனிப்போம்.
லூக்க} நற்செய்தி 16ம் அதிகாரம் 19 முதல் 31 ம் வசனம் வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசு செல்வந்தனும் லாசருவும் என்ற உவமையைக் கூறுகின்றார். இவ் உவமையில் ஆடம்பரமாக வாழ்ந்த செல்வந்தன் நரகத்திலும் கடவுளில் தங்கி வாழ்ந்த இலாசரு ஆபிரகாமின் மடியிலும் அமர்ந்திருந்ததை நற்செய்தியாளர் கூறுகின்றார். இதன் ஒளியில் செல்வந்தர் நரகத்திலிருந்து இறைவனுடன் தனது சகோதரர்களுக்காகப் பரிந்து பேசுகின்றார். அதாவது பகிர்ந்து வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்த ஓர் சந்தர்ப்பத்தைத் தருமாறு வேண்டுகிறார். இச் சம்பவத்தில் இருந்து கடவுளில் தங்கி வாழ்ந்து தங்கள் உடமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழும் மக்கள் பரலோக அரசிற்குள் பிரவேசிக்கின்றனர். அவர்கள் எங்களை நோக்கி இவ் உலக வாழ்வின் போது நீங்களும் உங்கள் உடமைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழுங்கள் அப்பொழுது பரலோக வாழ்விற்குள் பிரவேசிப்பீர்கள் என புத்தி கூறுகின்றனர் ( மத்தேயு 25 : 31 – 46 ).
இயேசுவின் சிலுவை மரணத்தின் போது அவருடன் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் தனது குற்றநிலையை ஒப்புக் கொண்டதோடு ஆண்டவர் இயேசுவின் அப்பாவித்தன்மையை அறிக்கையிட்டான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி இன்றைக்கு நீ என்னுடனே கூட பரலோக வாழ்விற்குள் பிரவேசிப்பாயாக என அழைப்பு விடுகின்றார் ( லூக்கா 23 : 33 – 38 ). இந்நிகழ்வின் அடித்தளத்தில் யார் யார் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டு நீதிக்காகப் பாடுபடுகிறார்களோ அவர்கள் பரலோக வாழ்விற்குள் பிரவேசிக்கின்றனர் என்பதைக் காணலாம். எனவே அவ்வாறு பிரவேசித்த ஆன்மாக்கள் பூவுலகத்தில் வாழும் எங்களைப் பார்த்து நீதிக்காக செயல்படுங்கள் என அறைகூவல் விடுக்கின்றனர்.
மேலும் திருவெளிப்பாடு நூல் 7ம் அதிகாரம் 10 ம் வசனத்தில் கடவுளுக்குள் மரித்த புனிதர்கள் மீட்பு கடவுளால் ஏற்படும் ஒன்று என தெளிவாக வலியுறுத்துகின்றனர். அதாவது இப்பூவுலகில் நாம் வாழும் போது மீட்பைப் பெறுவதற்காகப் பலவிதமான செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் மீட்பு கடவுள் அருளும் கொடை என்பது மறந்து விடக் கூடாது என ஆத்துமாக்கள் ஆலோசனை கூறுகின்றனர். மேலும் திருவெளிப்பாடு 7 : 17 இல் கடவுளை வாழ்வளிக்கும் ஊற்றாக ஆன்மாக்கள் காணுகின்றனர். அநேக சந்தர்ப்பங்களில் கடவுளை வாழ்வளிக்கும் ஒருவராக ஏற்றுக் கொள்ள கடினப்படும் நெஞ்சங்களைப் பார்த்து ஆன்மாக்கள் விடும் சவால் கவனிக்கத் தக்கதொன்றாகும். மேலும் திருவெளிப்பாடு 7 : 12 இல் கடவுளுக்கே 'புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் உரியன' என ஆன்மாக்கள் பாடுவதை நாம் காணலாம். எனவே பூலோகத்தில் வாழும் எங்களைப் பார்த்து ஆன்மாக்கள் கடவுளுக்கே உங்கள் மகிமையைச் செலுத்துங்கள் என வேண்டி நிற்கின்றனர். எனவே தான் திருப்பாடல்கள் 103 : 1 இல் தாவீது 'என் ஆன்மாவே நீ இறைவனைப் போற்றிட மறந்து விடாதே' என கூறுவதைக் காணலாம்.
எனவே கடவுளுடன் வாழும் புனிதர்கள், ஆன்மாக்கள் இத்திருநாட்களில் எங்களை நோக்கி நீங்கள் உங்கள் உடமைகளை பிறருடன் பகிர்ந்து வாழுங்கள் என்றும், நீதிக்காக உங்களை அர்ப்பணியுங்கள் என்றும் இறைவனில் தங்கி வாழ்ந்து அவருக்கே துதியையும் மகிமையையும் செலுத்துங்கள் என்றும் ஆலோசனை கூறுகின்றனர். எனவே அவர்கள் ஆலோசனையைக் கேட்டு நடக்கும் பட்சத்தில் நாங்களும் அவர்களுடன் இணைந்து பேரின்ப வாழ்விற்குள் செல்லக்கூடிய வாய்ப்பு எமக்கு ஏற்படும். எனவே அவர்கள் ஆலோசனைப்படி நடக்க இறையருளை வேண்டிநிற்போமாக!
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக