யார் இன்று அறிவற்றவர்கள்

யார் இன்று அறிவற்றவர்கள்? (லூக்கா 12 : 13 – 21)

இறையரசில் செல்வந்தவர்களின் நிலைபற்றி லூக்கா பல உவமைகள் வாயிலாகப் பேசுகின்றார். குறிப்பாக செல்வரும் இலாசருவும் (லூக்கா 16: 19 – 31) அறிவற்ற செல்வர் உவமை (லூக்கா 12 : 13 – 21) ஆகிய உவமைகள் வாயிலாக உண்மைகளை உணர்த்துகின்றார். இங்கு ஆசிரியர் ஏன் அறிவற்றவர் என செல்வந்தரை குறிப்பிடுகின்றார் என ஆராய்வோம்.

உலகமும் அதில் உள்ள நிறைவும் இறைவனுடையது என திருமறை கூறுகின்றது (திருப்பாடல்கள் 24 : 1). அவரே மனித வாழ்விற்கு ஊற்று (தொடக்க நூல் 2 : 7). இவ் உண்மைகளை மறந்து மதிகெட்டவன் போல் இறைவனின் இருப்புநிலையை நிராகரித்து தன் ஆன்மாவை நோக்கி உனக்காக அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளேன். நீ உண்டு உறங்கி திருப்தியாக வாழ்வாயாக என திருப்தி கொள்ளும் நிலையே அறிவற்ற செயலாகும் (லூக்கா 12 : 18 – 19). இந்நிலையிலேயே இறைவன் தன் இருப்புநிலையையும் மனித வாழ்வில் தனது செல்வாக்கையும் மீளவும் உறுதிப்படுகின்றார் (லூக்கா 12 : 20). மனித வாழ்வில் இறைவனின் இருப்புநிலையை மறந்து மனம்போன போக்கில் வாழ்பவர்கள் அறிவற்றவர்களே. விடுதலைப்பயணத்தில் பார்வோன் மோசேயை நோக்கி கடவுள் யார்? அவருக்கு நான் ஏன் பணிந்து செயற்பட வேண்டும் என வினா எழுப்பும் பார்வோனும் அறிவற்றவனின் பட்டியலில் அங்கத்துவம் பெறுகின்றார் (விடுதலைப்பயணம் 5 : 2). அறிவற்றவர் இங்கு தனக்கு தன்னுடையவைகள் தன் ஆன்மா போன்றவைகளைக் குறித்தே சிந்திக்கின்றனர் (லூக்கா 12 : 18, 19, 20). தன்னுடையவைகளால் மற்றவர்கள் வாழவைக்கப்பட வேண்டும் என்றோ பிறருடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்றோ இவன் சிந்திக்கவில்லை. எனவே தான் இவனை அறிவற்றவன் எனக் கூறுகின்றார். இறைவன் எம்மை ஆசிர்வதித்திருப்பதன் நோக்கம் நாம் மற்றவர்களுக்கு ஆசிர்வாதமாக மாற வேண்டும் எனபதேயாகும் (தொடக்கநூல் 12 : 1 – 3).

யோண் வெஸ்லி அவர்கள் எவ்வாறு மற்றவர்களுடன் தனது வாழ்வை பகிர்ந்து கொண்டார் என்பதை பின்வரும் சம்பவங்கள் மூலம் மெய்ப்பிக்கின்றார். அவர் திருப்பணியாளராகக் கடமையாற்றிய போது அவருக்கு 30 பவுண் ஊதியமாகக் கிடைத்தன. அதில் 22 பவுண்களை தனது தேவைக்காக பாவிப்பார். மிகுதி 8 பவுண்களை ஏனையவர்களின் நல்வாழ்விற்காக உபயோகித்தார். மகாத்மா காந்தி அவர்கள் புகையிரதத்தில் பிரயாணம் செய்யும்போது தவறுதலாக தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட்டது. அப்பொழுது மகாத்மா காந்தி அவர்கள் தன்னிடமிருந்த மிகுதியான ஒரு செருப்பையும் எடுத்து வெளியே வீசிவிட்டார். அப்பொழுது அவருடைய நண்பர் மிகுதியாக இருந்த செருப்பை வெளியே வீசினீர் என்று வினவிய போது யாராவது ஒருவர் எனது செருப்பால் பயன் பெற வேண்டுமாயின் என்னிடமுள்ள மிகுதியான செருப்பையும் வீசிவிட வேண்டும் எனப் பதிலளித்தார். மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்ற சிந்தனையை மேற்கூறிய உதாரணங்களும் எமக்குக் காண்பிக்கின்றன.

மனித வாழ்வில் நிகழ்கால வாழ்வைக் குறித்து இவன் கவலைப்படுகின்றானேயொழிய எதிர்கால வாழ்வைக் குறித்து எதுவும் சிந்திக்கவில்லைப் போலும். தற்கால வாழ்விற்காக பொக்கிசங்களை சேர்த்து வைக்க முயற்சிக்கின்ற அதே வேளை நிரந்தர வாழ்விற்காக இவன் செயல்பட விரும்பாததன் காரணம் என்ன? நிகழ்கால வாழ்வில் எமது செயற்பாடுகளே எதிர்கால வாழ்விற்கு அடித்தளங்களாக அமைகின்றன. முடிவில்லா வாழ்வின் அனுபவம் செயல்களினாலேயே திர்மானிக்கப்படும் என்ற உண்மையை உணர்ந்தும் செயற்படாமல் இருப்பது கவலை தரும் ஓர் செயற்பாடாகும். இதனாலேயே இவனை அறிவற்ற செல்வந்தன் என அழைக்கின்றார் ( மத்தேயு 25 : 31 – 40).

உலக வாழ்வில் நல்ல பங்கை தெரிந்தெடுக்க அவன் மறந்துவிட்டான் (லூக்கா 10 : 38 – 42). மனிதன் அப்பத்தினால் மாத்திரமன்றி கடவுளுடைய வாயில் இருந்து புறப்படும் வார்த்தையினால் உயிர் பிழைப்பான் என்ற உண்மையை உணர்ந்தும் அதற்கு அவன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை (லூக்கா 4 : 4). மேலும் நாளாந்த உணர்வுக்காக இறைவனில் தங்கியிருக்குமாறு ஆண்டவர் இயேசு போதித்த செபத்தை தனது வாழ்வில் நடைமுறைப்படுத்த இவன் தவறிவிட்டான் (லூக்கா 11 : 3). மேலும் என்னத்தை உண்போம் என்று வாழ்விற்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உடலுக்காகவும் கவலை கொள்ளாதிருங்கள். வானகப் பறவைகளையும் காட்டு மிருகங்களையும் போஷிக்கும் கடவுள் மனிதர் மீது கரிசனையுள்ளவராய் உள்ளார் அவர்களுக்கு வேண்டியவைகளை அவர் அளிக்கின்றார் என்ற போதனையில் வரும் மனித மாண்பைப்பற்றியும் மனித பெறுமதியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கடவுளின் பார்வையில் மனிதனின் நிலை பற்றியும் மறந்து செயல்ப்பட்டதே இறைவனின் அறிவற்ற தன்மைக்கு அடித்தளங்களாகும் (மத்தேயு 6 : 25 – 29, திருப்பாடல்கள் 8).

ஆண்டவர் இயேசுவின் சீடனாக மாற வேண்டுமாயின் தனக்குண்டான எல்லவாற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடுக்குமாறு ஆண்டவர் இயேசு தன்னைப் பின்பற்ற விரும்பிய செல்வந்த வாலிபரக்கு அழைப்பு விடுக்கின்றார் (மாற்கு 10 : 17 – 22). இயேசுவின் சீடராக விரும்பும் ஒருவர் தனக்கு உண்டான அனைத்தையும் இழக்கும் அனுபவத்திற்கு ஊடாக செல்ல அழைக்கப்படுகின்றார். ஆனால் இந்த மனிதன் இயேசுவின் சீடனாக விரும்ப மறுத்து ஆஸ்திகளுக்கே முக்கியத்துவம் கொடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. அழிகின்றதில் அதிகம் நம்பிக்கை வைத்திருப்பவா அழியாதவைகளில் நம்பிக்கை வைத்திருக்க முற்படுவது கவலை தரும் காரியமாகும். மனிதன் உலகம் முழுவதையும் தன்னுடையதாக அவான் மாற்றிக் கொண்டாலும் தன் ஆன்மாவிற்கு கேடு உண்டாக்கினால் அவனுக்கு ஐயோ எனத் திருமறை கூறுகின்றது. எனவே ஆன்மாவிற்கு துரோகம் செய்த இம்மனிதன் அறிவற்றவன் என அழைக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை (மாற்கு 8 : 36). இயேசு கூறிய இவ் உவமையில் கடவுளை மறந்து பகிர்வு வாழ்வின் முக்கியத்துவத்தை மறுதலித்து எதிர்கால வாழ்வின் சிறப்பையும் நிரந்தரத்தன்மையையும் மறந்து அழிகின்றவைகளில் அதிகம் நம்பிக்கை வைத்து செயற்பட்ட இம்மனிதனை நோக்கி கடவுள் தனது இருப்புநிலையை அவனுக்கு உணர்த்தி எல்லாவற்றின் மேலும் தனக்கு இருக்கும் அதிகாரத்தை உறுதிப்படுத்துகின்றார். இன்று இரவு உன் ஆன்மா உன்னை விட்டு எடுபடுமானால் நீ சேகரித்து வைத்தவைகள் அனைத்தும் யாருடையவைகளாக மாறும் என கடவுள் எழுப்பிய வினாவிற்கு பதிலற்று பரிதபிக்கின்றான் இம்மனிதன். இவனைப் போல வாழும் அனைத்து மனிதர்களையும் சமுகத்தையும் திருச்சபைகளையும் தேசத்தையும் பார்த்து இறைவன் இவ்வினாவையே எழுப்பி நிற்கின்றார்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக