தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுள்ளாயா?

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுள்ளாயா? (திருத்தூதுவர் பணிகள் 2 : 1 – 10) 

எல்லா மதங்களிலும் ஆவியர் பற்றிய சிந்தனைகள் காணப்படுகின்றன. கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் ஆவியரின் பங்களிப்பு முக்கியமாக இருந்ததை திருமறையிலும் திருச்சபை வரலாற்றிலும் நாம் காணலாம். பழைய ஏற்பாட்டில் றுவாக் என்ற எபிரேய மொழியிலும் புதிய ஏற்பாட்டில் நியூமா கிரேக்க மொழியிலும் ஆவியர் அறிமுகப்படுத்தப்படுகின்றார். காற்று , மூச்சு , சுவாசம் போன்ற பதங்கள் மேற்கூறப்பட்ட சொற்களுக்கு கொடுக்கப்பட்ட அர்த்தங்கள் ஆகும். பழைய ஏற்பாட்டில் ஆள்த்தன்மை அற்ற முறையில் காட்டப்படும் ஆவியர் புதிய ஏற்பாட்டில் ஆள்த்தன்மை உடையவராக வெளிப்படுத்தப்படுகின்றார். பெந்தேகோஸ்தே பெருவிழாவின் போது திருச்சபை மீது பொழியப்பட்ட ஆவியர் பல்வேறு பணிகளை ஆற்றுமாறு எம்மைப் பணிக்கின்றார். இக்கட்டுரையில் ஆவியர் ஆற்றுமாறு எம்மை அழைக்கும் பணிகளைக் குறித்து ஆராய்வோம்.

பெந்தேகோஸ்தே பெருவிழாவின் போது ஆவியர் திருச்சபை மீது பொழியப்பட்ட வேளையில் மக்கள் அயல் மொழிகளில் பேசியதைத் திருமறை ஞாபகப்படுத்துகின்றது. பிளவுபட்டிருந்த மொழிகள் கலாசாரங்கள், இனங்கள், ஆவியரின் வருகையுடன் ஒன்றணைகின்றன.

எனவே பிரிவினைகளின் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துமாறு தூய ஆவியர் எம்மை அழைக்கின்றார். திருத்தூதுவர் பணிகள் 6ம் அதிகாரம் 1 முதல் 6 வரையுள்ள பகுதியில் சரிவர பந்தி விசாரிப்பு மேற்கொள்ளப்படாமல் இருந்த கிரேக்க விதவைப் பெண்களுக்கு பணிவிடை செய்யுமாறு தூய ஆவியினால் நிரப்பப்பட்ட முடியப்பர் தெரிவு செய்யப்படுகிறார். இதன் அடித்தளத்தில் சமூகத்தில் மக்கள் சார்பில் பணியாற்றுமாறு தூய ஆவியர் எம்மை அழைக்கிறார் (தி. பணிகள் 13 : 2) இல் சவுலையும், பர்னபாவையும் பணிக்காக பிரித்தெடுத்து வைக்குமாறு தூய ஆவியார் கட்டளையிடுகிறார். மேலும் லூக்கா 4 : 16 – 21 வரையுள்ள பகுதியில் கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் உள்ளார். மக்களுக்குப் பணியாற்றுமாறு என்னை அனுப்பியுள்ளார் என இயேசு முழங்குகிறார். எனவே தூய ஆவியாரின் அருளின்றி எம்மால் எத்தகைய பணியும் ஆற்றிவிட முடியாது என எமக்குப் புலனாகுன்றது (2 தீமோத்தேயு 3 : 16 – 18) இல் தேவ வாக்கியங்கள் அனைத்தும் தூய ஆவியினால் அருளப்பட்டு எழுதப்பட்டுள்ளன என பவுல் கூறுகின்றார். இதன் ஒளியில் தூய ஆவியின் துணை இன்றி திருமறையை எம்மால் புரிந்து கொள்ள முடியாது. எத்தியோப்பியா அண்ணகன் திருமறையை வாசித்த போதும் அதனை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்பொழுது தூய ஆவியர் பிலிப்புவை நோக்கி அண்ணகன் வாசிப்பதை அவருக்குப் புரிய வைக்குமாறு பிலிப்புவை உற்சாகப்படுத்துகின்றார் (தி. பணிகள் 8 : 29). எனவே தூய ஆவியாரின் துணையின்றி திருமறையை வாசிக்கவோ அதனை விளங்கிக்கொள்ளவோ முடியாது.

ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட மனிதன் சமூகத்தில் உண்மைக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுப்பான் (தி. பணிகள் 2 : 23) இல் இயேசுவின் மரணம் யூதமதவாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்தப்பட்டதொன்று எனப் பேதுரு பகிரங்கமாக பெந்தேயோஸ்தே பெருவிழாவின்போது சான்று பகர்கின்றார், தூய ஆவியார் மனிதருக்கும், சமூகத்திற்கும் உண்மை எது நீதி எது என புரிய வைப்பார் என இயேசு போதிக்கின்றார் (யோவான் 16 :8). ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதனின் வாழ்வில் சிறந்த அறப்பண்புகள் வெளிப்படும் என திருமறை கூறுகின்றது (கலாத்தியர் 5 : 22, 23)இல் ஆவியின் கனி ஒவ்வொன்றும் ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதரிடத்தில் வெளிப்பட வேண்டுமென புனித சின்னப்பர் கூறுகின்றார். மேலும் ஆண்டவர் இயேசு தனது சீடரை விட்டு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர் அவர்கள் மேல் ஆவியை ஊதி அவர்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுக்கின்றார். அதன் முதல் ஆவியால் அருளப்படும் மனிதன் மன்னிக்கும் சுபாவம் உடையவனாக மாற வேண்டும் என நாம் பார்க்கின்றோம் (யோவான் 20 : 22 , 23). ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு மனிதனின் நற்செய்திக்காக எந்த சவாலையும் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாவான் திருத்தூதுவர் பணிகள் 7 ஆம் அதிகாரத்தில் புனித முடியப்பர் இறைவார்த்தையின் ஒளியில் தூய ஆவியால் நிரப்பப்பட்டு இறைவன் கைகளினால் கட்டப்பட்ட ஆலயத்தில் வாசம் செய்ய மாட்டார் எனவும் அவர் வரலாற்றிலே செயல்பட்டு வரும்கடவுள் எனவும் கூறிய போது யூத தலைமையகம் மிகவும் ஆத்திரமடைந்தது. எனினும் நற்செய்திக்காக எத்தகைய சவாலையும் ஏற்றுக் கொள்ள ஆயத்தமானார். மேலும் திருத்தூதுவர் பணிகள் 15 ஆம் அதிகாரத்தில் ஒரு மனிதனின் மீட்பு அடைவதற்கு யூத சட்ட முறைப்படி அவன் விருத்தசேதனம் செய்ய வேண்டுமா இல்லையேல் கிறிஸ்துவின் அருள் மட்டும் மீட்படையப் போதுமானதா என்ற வினா எழுந்தது. இதற்காக கி.பி 49 இல் எருசலேமில் ஒரு பொதுக் கூட்டம் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தில் புனித இறையப்பர், யாகப்பர் போன்றோர் மீட்படைய கிறிஸ்துவின் அருள் மாத்திரம் போதுமானது என்ற முடிவிற்கு வந்தனர். இம்முடிவு யூதத் தலைமை சங்கத்தைப் பாதித்தப் போதிலும் நற்செய்தியின் பொருட்டு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சமூகம் எந்த சவால்களையும் எதிர் நோக்க ஆயத்தமாகும். இன்றும் நாம் வாழும் போர் வறுமை பல்சமய சூழல் உரிமை மீறல் போன்ற பலவிதமான அனுபவங்களை உள்ளடக்கிய எமது நாட்டிலும் தூய ஆவியாரால் நிரப்பப்பட்டுள்ள நாம் நற்செய்தியின் ஒளியில் சவால்களுக்கு முகம் கொடுக்க அழைக்கப்படுகின்றோம்.

தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட ஓர் மனிதர் இனம், மதம், மொழி, வயது, பால், கலை, கலாசார வேறுபாடுகள் எல்லாவற்றையும் மறந்து தடைகளைத் தாண்டி மனித நேய மையத்தில் செயற்படுவதை நாம் காணலாம். திருத்தூதுவர் பணிகள் 10 ஆம் அதிகாரத்தில் புனித இராயப்பர் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட போது தமது வரையறைகளைக் கடந்து சென்று மனித நேயத்தை கொர்நேலியுவில் காண முற்பட்டதை நாம் காணலாம். யோவான் 14 : 24 இல் கடவுள் ஆவியாய் உள்ளார். எனவே அவரை வழிபடும் மக்கள் அனைவரும் ஆவி எவ்வாறு அனைத்து வரையறைகளையும் ஊடறுத்துச் செல்வதைப் போல ஆவியால் ஆட்கொள்ளப்படுவோரும் ஊடறுத்துச் செல்ல அழைக்கப்படுகின்றனர். மேலும் ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர் ஆவியரின் வல்லமையை தனது சொந்தப் பெயர் புகழுக்காகப் பாவிக்கமாட்டார். சீமோன் எனப்பட்டவர் பேதுருவிடத்தில் காணப்பட்ட ஆவியரின் வல்லமை போன்ற வல்லமை தனக்கும் கிடைக்கும் பட்சத்தில் தானும் அவ்வல்லமையை சொந்தப் பெயர் புகழுக்காக பாவிக்கலாம் என எண்ணியிருந்தார். ஆனால் ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட இராயப்பர் இதனை வன்மையாக எதிர்த்தார்.

பெந்தேகோஸ்தே பெருவிழாவைக் கொண்டாட முற்படுகின்ற இந்நாட்களில் ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட சமூகமாக மாற அழைக்கப்படுகின்றோம். ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட சமூக விடுதலைக்காக செயல்ப்பட திருமறை உண்மைகளைப் பிறருக்கு அறிவிக்க உண்மைக்காக, நீதிக்காகக் குரல் கொடுக்க நற்செய்தியின் ஒளியில் சவால்களை எதிர்நோக்க தடைகளைத் தாண்டிச் செல்ல சிறந்த அறப்பண்புகளை வெளிப்படுத்த அழைக்கப்படுகின்றனர். மேலும் புனித சின்னப்பர் கொரிந்தில் பணியின் காரணமாக சோர்வடைந்து காணப்பட்ட போது ஆவியர் அவரை உற்சாகப்படுத்தி அஞ்சாதே போதித்துக் கொண்டே இரு என உற்சாகமூட்டினார். எனவே சோர்வுற்றிருக்கும் எமது சமூதாயத்திற்கு உற்சாகத்தையும், வாழ்வையும், நம்பிக்கையையும் அளிப்பது ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட ஒவ்வொரு மனிதனின் கடமை ஆகும்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக