ஊழியத்தின் மாதிரி

ஊழியத்தின் மாதிரி (யோவான் 13 : 1 – 10)

ஆண்டவர் இயேசு தமது சீடர்களின் பாதங்களைக் கழுவிய நிகழ்வை யோவான் 13 : 1 – 10 வசனம் வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். இந்த சம்பவம் யோவானுக்கே தனித்துவமான ஒரு நிகழ்வாகும். இயேசு தமது சீடர்களுக்குப் போதிப்பதற்கு உபயோகித்த முறைகளில் செயற்பாடு ரீதியான உவமையாக இது காணப்படுகின்றது. இச்சம்பவத்தில் இயேசு ஊழியத்தில் ஒருவர் மற்றவரின் பாதங்களை கழுவுவதே மேலான செயல் எனப் போதிக்காமல் தானே முன் வந்து சீடர்களின் கால்களைக் கழுவிய நிகழ்வு ஊழியத்pல் எப்போதும் செயற்பாட்டு மையத்தைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக் காட்டாக இந்நிகழ்வு காணப்படுகின்றது.

இச்சம்பவத்தில் ஆண்டவர் இயேசு தமது பணியில் குறிக்கப்பட்ட நிகழ்வை ஆற்றப் போவதாக யாருக்கும் விளம்பரப்படுத்தவில்லை. சீடரும் அறிந்திராத தெரிந்திராத வேளையில் இந்நிகழ்வு ஆற்றுப்பட்டதன் ஊடாக ஆண்டவர் இயேசு தமது பணியில் விளம்பரத்தையோ பிரபல்யத்தையோ எதிர்பார்க்கவில்லை என தெளிவாகின்றது. இன்றைய நாட்களில் பணியில் விளம்பரத்தை எதிர்பார்க்கும் எமது இயேசுவின் செயல்பாடு சவாலை தரும் ஒரு முன்மாதிரிகை ஆகும்.

ஒருவர் பிறரின் பாதங்களைக் கழுவுவதற்கு பெரும்பாலும் விருப்பம் கொள்ள மாட்டார். இத்தாழ்மையான, எளிமையான மாதிரியைப் பின்பற்றுவதற்கு யாரும் முன்வரமாட்டார். எனவே இத்தகைய பணியை நிறைவேற்றுவதற்கு பிறருக்கு இடையிலே நாம் போட்டிப் போடத் தேவையில்லை. போட்டிப் பொறாமை மிகுந்த இவ்வுலகில் எவ்வித போட்டியும் அற்ற இப்பணியை செய்ய நாம் அழைக்கப்படுகின்றோம். மேலும் இப்பணி அக்காலத்தில் அடிமைகளினால் ஆற்றப்பட்டு வந்த ஒன்றாகும். எனவே நடைமுறையில் காணப்பட்ட கலாசாரத்திற்கு எதிரான ஒரு மாற்றுக் கலாசாரத்தை ஆண்டவர் இயேசு இங்கு முன்வைக்கின்றார். எனவே எமது பணியிலும் நாம் நடைமுறையில் இருக்கும் பிறரை ஒடுக்குகின்ற வர்க்க வேறுபாட்டை, வகுப்பு வேறுபாட்டை ஏற்படுத்துகின்ற காரணிகளைக் காணலாம். கண்டு அதற்கு எதிரான மாற்று கலாசார விழுமியங்களைப் படைப்பது சாலவும் சிறந்ததாகும்.

ஆண்டவர் இயேசு தமது சீடர்களின் பாதங்களைக் கழுவி அவைகளைப் துடைப்பதற்காக தன் மேலாடைகளைக் கழற்றுகின்றார். இந்நிலை முற்றிலுமாக தன்னை வெறுமையாக்கும் நிலைக்குள் செல்ல ஆண்டவர்; அனுமதிக்கின்றார் பிலிப்பியர் 2 : 4 – 11) இதைப் போன்று ஊழியத்தில் எங்களை நாங்கள் எவறுமையாக்கும் போது மாத்திரமே நாங்கள் பிறருடைய பாரங்களை சுமக்கவும் பிறருக்காக எம்மை அர்ப்பணிக்கவும் முடியும். இல்லையேல் நாம் ஊழியம் செய்யும் மாதிரியைப் பின்பற்றாமல் பிறரிடம் இருந்து உழியம் செய்யும் மாதிரியை பின்பற்றக் கூடிய ஆபத்துக் காணப்படுகின்றது (மாற்கு 10 : 45).

நாம் பிறர் பாதங்களைக் கழுவ முற்படும் போது மாத்திரமே எங்களுடைய நிலை எத்தகையது நாங்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருக்கின்றோம் என எங்களை நாங்கள் சோதித்து, நிதானித்து அறிவதற்கான ஒரு அனுபவ செயலாகும். இதன் வாயிலாக நாங்கள் எங்களைக் குறித்து மேட்டுமையாக எண்ணாமல் எங்களிலும் பார்க்க மற்றவர்கள் மேலானவர்கள் என்ற சிந்தனையை வளர்க்க உதவியாக அமையும் (பிலிப்பியர் 2 : 1 – 5). மேலும் எங்களுக்குரியவைகளை நாடாமல் பிறருக்குரியவைகளை நாட நாங்கள் அழைக்கப்படுகின்றோம் என எங்களுக்கு உணர்த்தும் ஒரு மாதிரி ஆகும்.

ஊழியத்தில் நாம் இயேசுவுடன் ஐக்கியப்பட வேண்டுமாயின் நாங்கள் அவருக்காக இழக்க வேண்டிய பகுதிகளை அல்லது சிந்தனைகளை அல்லது செயற்பாடுகளை நாங்கள் அடையாளம் காண அழைக்கப்படுகின்றோம். குறிப்பாக இயேசுவின் சீடனாகிய பேதுரு ஆண்டவர் இயேசு தனது கால்களைக் கழுவுவதற்கு இடம் கொடுக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு நான் இதை செய்வதற்கு இடம் கொடுக்காத பட்சத்தில் என்னிடத்தில் உனக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என இடிதத்துரைக்கின்றார். இதன் மூலம் பேதுரு இயேசுவுடன் பங்குதாரராக மாறுவதற்கு தன்னிடத்தில் இழக்க வேண்டியவைகளைக் கணக்கிடத் தொடங்கினான். எனவே இப்பாதங்களைக் கழுவும் சம்பவம் எமது ஊழியத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல யதார்த்தபூர்வமான மாதிரிகளை முன்வைக்கின்றன.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக