இயேசுவை கொல்லாதிருங்கள்

மீண்டும் ஓர் வருடத்தின் நிறைவில் இயேசுவின் பிறப்பை நினைந்துகொள்ள கடவுள் எங்களுக்கு ஓர் வாய்ப்பை தந்துள்ளார். இயேசுவின் பிறப்பின் கதையை நாம் படிக்கும்போது மத்தேயு 2:1-17 வசனங்களில் இயேசுவை ஏரோது அரசன் கொலை செய்யத் தேடுவதை நாம் பார்கின்றோம். இம்முயற்சி ஏரோதுவும் பிலாத்துவும் இணைந்து செயற்படுவதன் ஊடாக அவரை சிலுவைக்கு ஒப்புகொடுக்கின்றனர். அத்துடன் இயேசுவை கொலையும் செய்கின்றனர்.

இயேசுவை கொலை செய்தல் என்பது அவரது ஆளுமையை, பணியை கொல்லுவதற்கு சமமாகின்றது. ஏசாயா 11:6-9 ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசு நீதியை இவ்வுலகில் ஏற்படுத்துவதற்காக வருகை தந்தார் என நாம் படிக்கின்றோம். அவரது பணியை நாம் உற்று நோக்கும் போது இவ்வுண்மை புலாணாகின்றது. எனவே சமூகத்தில் நீதியை ஏற்படுத்துவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இக்கடமையை நாம் கொல்லுவது கிறிஸ்துவை கொல்லுவதற்கு சமமாக காணப்படுகின்றது.

இயேசுவின் பிறப்பில் ஒற்றுமை முக்கியமாக காணப்படுகின்றது. அவரது பிறப்பு ஏழையையும் பணக்காரனையும், படித்தவனையும் பாமரனையும், ஞானிகளையும் மேய்ப்பர்களையும், ஒன்றாக இணைத்திருந்தது. இவ் இணைப்புப் பணியையே கடவுள் இயேசுகிறிஸ்துவிடம் கொடுத்துள்ளதாக பரிசுத்த பவுல் 2 கொரிந்தியர் 5:17-20 ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் கூறுகின்றார். இந்த ஒப்புரவாக்குதலின் பணி இன்றைய இலங்கை சூழலில் மிகவும் முக்கியமானதாக காணப்படுகின்றது. இப்பணியை செய்ய வந்த இயேசுவையே ஏரோது கொல்ல தேடினான். இன்றும் இப்பணியை செய்வோர் பல அச்சுறுதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். இவர்களை கொல்லுதல் இயேசுவை கொலை செய்வதற்கு சமமாக காணப்படுகின்றது.

ஏசாயா 6 ஆம் அதிகாரம் 9 ஆம் வசனத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இயேசு இவ்வுலகிற்கு வருகை தந்ததாக நாம் படிக்கின்றோம். இப்பணியை ஆண்டவர் எங்களிடத்தில் தந்துள்ளார். அதாவது அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் அவர்கள் கடவுளின் பிள்ளைகள் எனப்படுவர். யோவான் 20: 19 ஆம் வசனம் முதல் 23 ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது சீடர்களுக்கு அமைதியை அருளுகின்றார். தற்காலிக அமைதியை ஏற்படுத்துவதற்காக பிலாத்து இயேசுவை கொலை செய்தான். இன்றும் சமூகத்தில் தற்காலிக அமைதியை ஏற்படுத்துவதற்காக பலர் கொல்லப்படுகின்றனர். அமைதிக்காக பாடுபடுவோரை கொலை செய்தல் இயேசுவை கொலை செய்வதற்கு சமமாகின்றது.

இயேசுவின் பிறப்பை பற்றி பரிசுத்த பவுல் கூறும்போது கடவுளுக்கு சமமாக இருந்த இயேசு எல்லாவற்றையும் விட்டு அடிமையின் தாழ்மையின் உருவெடுத்ததாக பிலிப்பியர் 2 ஆம் அதிகாரம் 5 ஆம் வசனம் முதல் 11 ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் குறிப்பிடுகின்றார். இயேசுவின் பிறப்பு எம்மை நாமே மற்றவர்களுக்காக இழக்க அழைக்கின்றது. இவ்வழைப்பிற்கு எதிராக நாம் செயற்படும் போது இயேசுவை கொலை செய்ய முற்படுகின்றோம். ஏரோது மற்றவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக துக்கத்தை உண்டாக்கினான். மற்றவர்களின் வாழ்வில் துக்கத்தை ஏற்படுத்துவோர் இயேசுவை கொலை செய்ய தேடும் மக்களின் பட்டியலுக்குள் உள்ளடக்கப்பபடவேண்டும்.

இவ்வுலகில் ஆண்டவர் இயேசு நீதியை, ஒப்புரவாகுதலை, அமைதியை மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்காக வருகை தந்தார். எனினும் இவைகளை ஏற்று கொள்ளாத ஏரோது இயேசுவை கொலைசெய்ய தேடினான். இன்றும் நாம் அமைதிக்காக, நீதிக்காக, ஒற்றுமைக்காக பணி செய்ய மறுக்கும்போதோ அல்லது பணி செய்பவர்களை துன்பப்படுத்தும்போதோ இயேசுவை கொலைசெய்கின்றோம். எனவே இந்த கிறிஸ்து பிறப்பின் போதாவது இயேசுவை கொலைசெய்யாதிருக்க பார்த்துக்கொள்வோமாக.

சமூகப்பணி பற்றிய திருமறை ஆய்வு

நாம் வாழும் உலகம் பல உறவுகளின் இணைப்பினால் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு தனிமனிதனும் ஒன்றிணைந்து குடும்பங்களை உருவாக்குகின்றனர். ஒவ்வொரு குடும்பங்களும் இணைந்து சமூகங்களை உருவாக்குகின்றன. பல சமூகங்களால் உருவாக்கப்படுபவைகளாக தேசங்கள் காணப்படுகின்றன. இத்தேசங்களில் வாழும் மனிதர்கள் சமூகப் பிராணிகளாகவும் சமயப்பிராணிகளாகவும் காணப்படுகின்றனர் என திஸ்ஸபால சூரிய கூறுகின்றார். ஏனெனில் ஆசிய தேசத்தில் உருவாகிய மதத் தலைவர்கள் திருமறை கூறும் அனைவரும் சமூகத் தலைவர்களாகவே காணப்பட்டனர். அதாவது சமூக மக்களின் விடுதலைக்காக அவர்கள் பல்வேறு சமூகப்பணிகளை ஆற்றி வந்ததன் விளைவாகவே அவர்கள் சமயத் தலைவர்களாக வரலாற்றில் மாற்றப் பெற்றனர். இதனொளியில் சமூகப் பணியே மக்களை சமயத் தலைவர்களாக உருமாற்றியுள்ளது. இதனை மையமாகக் கொண்டே திருமறையில் பழைய புதிய ஏற்பாடுகள் சமூகப்பணி பற்றி எவற்றை எடுத்துக்கூறுகின்றதென இவ் ஆய்வுக் கட்டுரையில் ஆராய விரும்புகின்றேன். குறிப்பாக சமூகப்பணி, திருமறை கூறும் சமூகப்பணி, நாம் சமூகப் பணியை ஏன் ஆற்ற வேண்டும், சமூகப்பணி ஆற்றும் போது கவனிக்கப்படவேண்டியவைகள் போன்ற இலக்குகள் போன்றவைகளில் எனது ஆய்வினை மேற்கொள்ள விரும்புகின்றேன்.

சமூகப்பணியின் முக்கியத்துவம்

திருமறையிலும் இலக்கியங்களிலும் பிறசமயங்களிலும் சமூகப்பணியின் மேன்மையைக் குறித்து நாம் படித்தறிகின்றோம். குறிப்பாக மக்கள் சேவை மகேசன் சேவை எனக் கூறுவதனூடாக சமூகப்பணி இறைவனுக்கு ஆற்றும் ஓர் தொண்டு என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. அதாவது ஓர் தனிமனித வாழ்வில் அல்லது குடும்ப வாழ்வில் அல்லது சமூக வாழ்வில் நாம் செய்யும் பணி அல்லது சேவை பிறருடைய வாழ்க்கையில் சிந்தனையில் செயற்பாட்டில் நேரடியாகவோ இல்லையேல் மறைமுகமானதாகவோ நேர்த்தாக்கத்தை ஏற்ப்படுத்துவதே சமூகப்பணியாகுமென சுகிர்தராஜா கூறுகின்றார்; இதன்படி சமூகப்பணி மனித வாழ்வை மேம்படுத்தும் ஓர்பணி என கூறப்படுகின்றது. மேலும் வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவர் என்ற வள்ளுவரின் இலக்கிய திருக்குறள் கூற்று நாம் சமூகத்தில் இம்மையில் ஆற்றும் சமூகப்பணி மறுமையில் எமக்களிக்கும் மேன்மையை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. மகாபாரதத்தில் கர்ணன் தனது மரணத்தருவாயிலும் கூட தனது அறக்கொடை வாழ்வை அனுபவித்து மகிழ்ந்தார் என்பதை உற்று நோக்கும்போது நாம் பிறருக்கு ஆற்றும் பணி உயிரிலும் மேலானது என்பதை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. இஸ்லாம் மதத்தில் குவ்யா என்ற பாரம்பரிய ஏடு நாம் சமூகத்திற்கு ஆற்றும்பணி எம்மை சமூக மீட்புத் திட்டத்தில் இணைக்கின்றது எனக் கூறுகின்றது. பௌத்த மதத்தில் ஓர் மனிதன் பூரண நிர்வாண நிலையை அல்லது மீட்பு நிலையை அடைவது அட்டாங்க சீலங்கள் அல்லது சமூகப்பணியின் முக்கியத்துவத்தைப்பற்றி நாம் பார்க்கலாம். இதற்கமைய சமூகப்பணி எல்லா மதங்களாலும் இலக்கியங்களாலும் மதம்சாரா அமைப்புக்களாலும் போற்றப்பட்டும் ஆற்றப்பட்டும் வருகின்றது.

 சமூகப்பணி பற்றி திருமறை கூறும் சிந்தனைகள்

திருமறை சமூகப்பணி பற்றிய பல்வேறு மாதிரிகளையும் அணுகுமுறைகளையும் வகைகளையும் பற்றி பேசுகின்றது.

1. இறைவன் ஒரு சமூகப்பணியாளர்

முதலாம் இரண்டாம் ஏற்பாடுகளில் திருமறை ஆசிரியர்கள் இறைவனை ஓர் சமூகப்பணியாளனாகக் காண்பிக்கின்றார்கள். குறிப்பாக அப்போது ஆண்டவர் கூறியது எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன். அடிமை வேலை வாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன். ஆம் அவர்களின் துயரங்களை நான் அறிவேன். விடுதலைப்பயணம் 3:7 இல் எகிப்தில் இஸ்ராயேல் மக்கள் அடிமைகளாக இருந்தபோது இறைவன் அவர்கள் அடிமைத்தனக் குரலைக் கேட்டு அவர்கள் கண்ணீரைக்கண்டு அவர்களை விடுவிக்கும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். குறிப்பாக விடுதலைப்பயணம் 3:1-14 வரை உள்ள பகுதியில் இறைவன் மோசேக்கு அளித்த காட்சியில் வெளிப்படும் எரியும் முட்செடி என்பது எரிந்து கொண்டிருக்கும் மக்களின் துன்ப சூழலின் மத்தியில் கடவுள் தோன்றி அவர்களுடன் இணைந்து துன்பப்படும் காட்சியை திருமறை காண்பிக்கின்றது. இதன்மூலம் விடுதலைப்பணியில் அல்லது மீட்புப்பணியில் முதற்படிநிலையை இறைவன் எடுத்தபடியினால் அவரை அடனோய் என அழைத்தனர். இப்பெயர் பின்னர் யாவேயாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இவ்விடுதலைப்பணி அனைவருக்குமுரியதாகவும் அனைவரையும் உள்வாங்குவதாகவும் காணப்படுகின்றது. (ஆமோஸ் 9:7) மேலும் இப்பணியில் இறைவன் எல்லேரையும் அதாவது இன, மத, மொழி வேறுபாடுகளின்றி எவரையும் பயன்படுத்த முடியும். குறிப்பாக சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார். பிற இனத்தவரை அவரமுன் அடிபணிய செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்: கோட்டை வாயில்களை அவர் முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார். அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப்பிடித்துள்ளார். அவரிடம் அண்டவர் கூறுவது இதுவே ஏசா45:1 இல் பாபிலோனிய அடிமைத்தனத்தில் வாழ்ந்த இஸ்ராயேல் மக்களை விடுவிக்கும் பணியில் இறைவன் யூதரல்லாத பாரசீக ஓர் மன்னனைப் பயன்படுத்துவது ஓர் அதிர்சிக்குரிய செய்தியாகும். மேலும் கடவுள் தனது விடுதலைப் பணியில் விலைமாதுவாக கருதப்பட்ட இராகாப் என்ற பெண்மணியை பயன்படுத்தியதை நாம் யோசுவா இரண்டாம் அதிகாரத்தில் காணலாம். இதனொளியில் இறைவனால் முன்னெடுக்கப்படும் விடுதலை சார்ந்த சமூகப்பணி எல்லோருக்கும் ஆற்றப்பட வேண்டிய ஓர் பணியாகும். இப்பணியை தொடர்ந்தாற்றுவதற்காகவே இறைவன் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார். இதன் தொடர் நிலையாக ஆண்டவர் இயேசு திருச்சபையை உலகிற்கு அனுப்பியுள்ளார். இதனை யோவான் 20:21 இல் நாம் காணலாம். எனவே வில்லியம் டெம்பர் என்பவரின் கூற்றுக்கமைய திருச்சபை என்னும் அமைப்பு இறைவனின் இப்பணியை தொடர்ந்தாற்றி தன்னை மக்களின் பிரதிநிதியாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்கின்றார். மேலும் ஜேர்மனிய இறையியலாளரான பொன்ஹொபர் தனது நூலில் திருச்சபை என்ற ஓர் அமைப்பு மாத்திரமே மக்களுக்காக பணி செய்யும் அமைப்பாக மாறி வருகின்றதென்கின்றார். எனவே இவ்வமைப்பு சமூகப்பணியில் துன்பக்கிண்ணத்தை ருசி பார்க்க அழைக்கப்படுகின்றது என்கின்றார். இதனடித்தளத்தில் சமூகப்பணி இறைவனின் பணி என்ற முடிவிற்கு நாம் வரலாம்.

2. சமூகப்பணியும் அருட்கொடையும் (Sacrament)

இறைவனுடைய அருளை நாம் மறைமுகமாக பெற்றுக்கொள்ளுவதன் அடையாளமாக பல அருட்கொடைகளில் நாம் கலந்து கொள்கின்றோம். குறிப்பாக பாவ அறிக்கை, திருமுழுக்கு, திடப்படுத்தல், திருவிருந்து, எண்ணெய்பூசி மன்றாடுதல், திருநிலைப்படுத்தல், திருமணம் ஆகியவற்றை உதாரணங்களாகக் கூறலாம். இவைகளினூடாக இறைவன் தன்னை உலகிற்கு வெளிப்படுத்துகின்றார். இதனொளியில் இறைவனால் படைக்கப்பட்ட இயற்கையையும் ஓர் அருட்கொடையாக நான் காண்கின்றேன். ஏனெனில் இவ் இயற்கை இறைவனுக்கே சொந்தமானதாகும் (திருப்பாடல் 24:1). மேலும் இயற்கையினூடாக இறைவன் தன்னை வெளிப்படுத்துகின்றார் (திருப்பாடல் 19:1). மேலும் இயற்கையை பாதுகாக்கும் பணியை இறைவன் எமக்கு முதல் கட்டளையாக கொடுத்துள்ளார் (தொட 2:15). இப்பாதுகாப்புப்பணி ஓர் சமூகப்பணியாகும். ஏனெனில் நாம் இப்பூமியை பாதுகாக்காத பட்சத்தில் மாசடைவுகள் ஏற்பட்டு இயற்கை அழிவுகளையும் பூலோக வெப்பமுறுதலையும் நாம் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. மேலும் அரசாங்க நிலச்சுவீகரிப்புச் சட்டம், காணி சுவீகரிப்புச் சட்டம் போன்றவற்றால் மக்கள் நிலமற்றவர்களாக மாறுவதை நாம் காணலாம். லேவியர் 25 ஆம் அதிகாரத்தில் நில சமத்துவ சட்டத்தைப் பற்றி திருமறை பேசுகின்றது. மேலும் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை ஆகாப் மன்னன் அபகரிக்க முற்பட்ட போது, இதற்கு எதிராக எலியா இறைவாக்கினரின் இறைவாக்குப் பணியை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். மேலும் உரோமர் 8:22 இல் முழுப் படைப்புக்களும் விடுதலைக்காக ஏங்குகின்றதென்பதை பவுல் கூறுகின்றார். இதனொளியில் இயற்கைக்கு ஆற்றவேண்டிய பணியை ஓர் சமூகப்பணியாகவும் அருட்கொடையாகவும் நாம் கருத வேண்டும்.

3. சமூகப்பணியும் நடுத்தீர்ப்பும்

தொடக்கநூல் 1:25-26 இல் இறை சாயலில் சமத்துவமாக படைக்கப்பட்ட மனுக்குலம் தனது சமத்துவ மனித மாண்பை சமூக, பொருளாதார, அரசியல், கலைகலாசார, மத காரணங்களால் இழந்துவிட்டன. இவ் இழந்துவிட்ட சமத்துவ பண்புகளை மறுபடியும் வெளிக்கொணரும் வகையில் இப்பணி மிகவும் அவசியமாகின்றது. குறிப்பாக பொருளாதார ரீதியில் சமத்துவத் தன்மையை ஏற்படுத்தும் பொருட்டு திருமறை எம்மை அழைக்கின்றது. குறிப்பாக விடுதலைப்பயணம் 21, 22, 23 ஆம் அதிகாரங்கள், ஏசாயா 55 ஆம் அதிகாரம் மற்றும் யுபிலி வருட சிந்தனைகள் போன்றவைகள் மேற்கூறிய கருத்தினை வலியுறுத்துகின்றது. மேலும் ஏன் மக்கள் ஏழைகளாக உள்ளார்கள் அவர்களின் சொத்துக்களை சுரண்டி வைத்திருப்பவர்கள் யார் என்ற வினாவை எழுப்புதலும் இங்கு அவசியமாகின்றது. லூக்கா 4:16-21 மேலும் சமூக அந்தஸ்தை சமூகத்தில் இழந்தவர்களும் மனிதப்பெறுமதி அற்றவர்களாவார். இவர்கள் மட்டில் செயற்பட்டு மனிதப்பெறுமதியை இவர்களுக்கு வழங்குவதும் ஓர் சமூகப்பணியாகும். இதனை திருமறை எமக்கு வலியுறுத்துகின்றது. குறிப்பாக பெண்கள் (லூக்கா 8:1-3, யோவான் 20:1-16), சிறுவர்கள் (லூக்கா18:1-5), பிற ஆற்றலுள்ளவர்கள் (மாற்கு 10:46-52) போன்ற பகுதிகளை உதாரணமாகக் கூறலாம். இத்தகைய சமூகப்பணிகளில் நாம் ஈடுபடுவதனூடாக இறைவனின் நடுத்தீர்ப்பில் இருந்து நாம் தப்பித்துக் கொள்கின்றோம். அதாவது இறுதி நடுத்தீர்ப்பு செயல்களின் அடித்தளத்திலேயே தங்கியிருப்பதை திருமறை கூறுகின்றது. குறிப்பாக நான் பசியாயிருந்தேன் எனக்கு ஆகாரம் தந்தீர்கள்; நான் தாகமாயிருந்தேன் எனக்கு தண்ணீர் தந்தீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன் எனக்கு ஆடை தந்தீர்கள்; நான் சிறையிலிருந்தேன் என்னை வந்து பார்த்தீர்கள் போன்ற வார்த்தைகள் சமூகப்பணியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காண்பிக்கின்றது. மத் 25:31-46 இவைகள் அனைத்தும் இரட்சிப்பு அல்லது மீட்பு சமூகப்பணியினூடாகவும் ஏற்படலாம் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

4. சமூகப்பணியும் கடவுளின் அடையாளமும் 

அரசியல் என்னும் சொல் பொலிற்றேஸ் என்னும் கிரேக்க சொல்லிலிருந்தே எழுகின்றது. இதன்படி சமூகத்தில் இடம்பெறும் செயற்பாடுகளில் கிறிஸ்தவர் தன்னை விலக்கிக் கொள்ளாமல் அவைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல் மிகவும் வேண்டப்படும் ஒன்றாகும். ஏனெனில் இறைவன் உலகை அன்பு செலுத்துகின்றார் (யோவான் 3:16). இதனொளியில் உலகில் அமைதியை ஏற்ப்படுத்துவோர், இல்லையேல் அமைதிக்காக உழைப்போர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் கடவுளின் பிள்ளைகள் எனப்படுகின்றார்கள். தனிமனித வாழ்வில் குடும்பவாழ்வில் தேசிய வாழ்வில் இயற்கை வாழ்வில் ஏற்ப்பட்டுள்ள முரண்பாட்டு சூழல்களின் மத்தியில் அமைதியை ஏற்ப்படுத்துதல் என்பது அவசியமானதொன்றாகும். இத்தகைய பணியில் இன, மத வேறுபாடுகளின்றி எம்மால் ஈடுபடமுடியும். இப்பணியை மையமாகக்கொண்டே ஆண்டவர் இயேசுவின் பிறப்பு (ஏசா 9:6, லூக் 2:15), பணி (ஏசா 11:6-9, லூக் 10: 1-12), மரணம் (லூக் 23: 38-47), உயிர்த்தெழுதல் (யோவான் 20:19-23) ஆகிய பகுதிகளை படிக்க வேண்டும். தத்தமது தனித்துவங்களை பேணியவர்களாக நீதியுள்ள அமைதியை அடையும் பாதையில் நாம் அதிகம் கடினப்பட வேண்டும் (திருப்பாடல் 85:10). இன்றைய இலங்கை சூழலில் வாழ்வளிக்கும் நீதி பகிர்ந்தளிக்கும் நீதி போன்றவற்றை அதிகம் வலியுறுத்த வேண்டும். மேலும் இவ் அமைதிபயணத்தில் உண்மைக்கு சான்றுபகரும் முக்கியத்துவம் வலியுறுத்தப் பட வேண்டும். திருதூதர் பணி 2:32-38. அமைதி உண்மையினூடாக வெளிப்படுத்தப்படல் வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். இந்நீதி வழிபாட்டுடனும் வாழ்க்கையுடனும் தொடர்புபட்டிருப்பதை நாம் பார்க்கின்றோம். வார்த்தையிலில்லாத நீதி, வழிபாட்டிலில்லாத நீதி ஆகியவைகளில் எத்தகைய பிரயோசனமுமில்லை என்பதை ஆமோஸ் (ஆமோஸ் 5:18-21) வலியுறுத்துகின்றார்.
போருக்குப்பின்னான இன்றைய இலங்கை சூழலில் இலங்கை திருச்சபைகள் ஒப்புரவாக்கும் பணியை முன்னெடுத்தல் மிக அவசியமாகின்றது. ஏனெனில் இத்தகைய சமூகப்பணியின்றி எம்மால் இறைவனை பூரணமாக வழிபடமுடியாது (மத் 5:22-23). இயேசுவை ஒப்புரவாக்கும் பணியை உலகிலே மேற்கொள்ளுமாறு இறைவன் அவரை அனுப்பினார். அப்பணியை நிறைவேற்றுமாறு எம்மிடம் கேட்கின்றார் (2 கொரி 5:17-20). நாம் அனேக வேளைகளில் நற்செய்திப்பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற வேளை (மத் 28:19-20), இவ் ஒப்புரவாக்கல் பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனினும் இப்பணி இறைவனின் அங்கீகாரம் பெற்ற ஓர் பணி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாசரேத்தூர் இயேசுவின் அறிக்கையின்படி, சிறைப்பட்டோருக்கு விடுதலை என்பது மன்னிப்பின் ஊடாகவும் ஒப்புரவின் ஊடாகவும் சிறைக் கதவுகள் மூடப்படுவதன் ஊடாகவும் ஏற்ப்படும் ஒன்றாகும் என திருமறை கூறுகின்றது.

திருமறை கூறும் சமூகப்பணி மாதிரிகள் 

சமூகப்பணியின் தன்மைகளையும் வகைகளையும் பற்றி திருமறை கூறுகின்ற அதே வேளை இதற்கான மாதிரிகளையும் முன்வைத்துள்ளது.

1. திருவிருந்து சார்ந்த மாதிரி

சமுகப்பணியின் உன்னத மாதிரியாக திருவிருந்து காணப்படுகின்றது. 1 கொரி 11:25 ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் திருவிருந்து பற்றிய ஆரம்பக் குறிப்புக்களை பவுல் குறிப்பிடுகின்றார். ஆண்டவர் இயேசுவினால் ஏற்ப்படுத்தப்பட்ட ஒரு அருட்கொடையாக இது காணப்பட்ட போதிலும் நற்செய்தி நூல்களைப் பார்க்கிலும் பவுலின் நிருபத்திலேயே இது பற்றிய கருத்துக்கள் முதலில் எழுதப்பட்டுள்ளன. இதன்படி பவுல் குறிப்பிடும் கொய்னோனியா என்ற கிரேக்க பதத்தை நாம் உற்று நோக்கும் போது, ஓர் முதலாளி தன்னிடமுள்ள பணத்தை ஓர் தொழிலாளியிடம் கொடுத்து இப்பணத்தை உபயோகித்து நீ வியாபாரத்தை செய்து என்னைப் போன்று மேல் எழுந்து வா என்ற அர்த்தத்தைக் குறிப்பிடும் ஓர் விளக்கமாக இத்திருவிருந்து காணப்படுகின்றது. இதனொளியில் எம்மிடம் இருப்பவைகளை பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை இம்மாதிரி உணர்த்துகின்றது. மேலும் நாம் பந்தியண்டை வரும் போது கர்த்தருடைய சரீரம் இன்னதென்று சோதித்துப் பார்த்தல் அவசியமென பவுல் கூறுகின்றார். இதன்படி கர்த்தருடைய சரீரம் என்பது திருச்சபையை குறிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஓர் பதமாகும். அதாவது நாம் திருவிருந்தைப் பெற வருகின்றபோது எம்முடன் பந்தியில் இருப்பவரை நான் எனது நிலைக்கு உயர்த்துவேன் என்பதை இறைவனுடன் பொருத்தனை பண்ணும் இடமாக நாம் பார்க்கலாம். அதாவது பொருளாதார, சமூக, கலாசார, அரசியல் ரீதியில் எம்மிலும் பார்க்க குறைந்த நிலையில் உள்ளவர்களை எமது நிலைக்கு நாம் உயர்த்துகின்ற உன்னத உடன்படிக்கை நிகழ்வாக இத்திருச்சடங்கு காணப்படுகிறது. எனவே திருவிருந்து எனும் அருட்சாதனத்தை நாம் பெறும்போது அதனுள் பொதிந்துள்ள சமூகப் பொறுப்பை நாம் மறந்து விடக்கூடாது. எனவே சமூகப்பணியின் உன்னத மாதிரியாக திருவிருந்து திகழ்கின்றது.

2. திருத்துவ மாதிரி

திருத்துவம் என்ற எண்ணக்கரு பொதுவாக கி.பி 4 ஆம் நூற்றாண்டில் தோன்றியதொன்று என பொதுவாக ஏற்றுக் கொண்டாலும் இதனுடைய தன்மைகளை முதலாம் இரண்டாம் ஏற்பாடுகளில் நாம் காண்கின்றோம். குறிப்பாக தொடக்கநூல் 1:1-3, தொட 1:25-26, ஏசாயா 6:1-8, மத் 28:19-20, 2 கொரிந்தியர் 13:13 ஆகிய பகுதிகள் திருத்துவத்தைக்குறித்த தன்மைகளை எமக்கு வெளிப்படுத்துகிறது. இங்கு படைப்பாளராகிய தந்தையாம் கடவுள், மீட்பாளராகிய குமாரனாம் கடவுள், தூயஆவியாகிய தூய்மைப் படுத்தும் கடவுள் ஆகியோரின் பணிகளைப் பற்றி திருமறை பேசுகின்றது. திருத்துவக் கடவுள் இன்றும் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டே இருக்கின்றார். அதே கடவுள் எங்களை சமூகத்தில் புதிய பணிகளை ஆற்றுமாறு பணிக்கின்றார். மேலும் திருத்துவக்கடவுளிடையே எத்தகைய வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் காணப்படுவதில்லை. இதேவளையில் நாமும் எமது பணிகளை ஆற்றும் போது எத்தகைய வேறுபாடுகளையும் கவனத்தில் கொள்ளுதல் கூடாது. மேலும் திருத்துவக் கடவுள் ஓர் சமூகத்தின் கடவுளாக காணப்படுவதனால் எமது பணிகள் எப்பொழுதும் சமூகத்தை மையப்படுத்தியதாக காணப்படுதல் அவசியமாகின்றது. மேலும் திருத்துவக்கடவுள் சமூகத்தில் தொடர்ந்து செயற்படும் பங்குதாரர் மாதிரியையே முன்வைக்கின்றார். இவைகளின் ஒளியில் சமுகப்பணியின் இன்னுமோர் மாதிரியாக திருத்துவம் காணப்படுகின்றது.

3. வெறுமையாக்கல் மாதிரி  

பரிசுத்த பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நிருபத்தில் 2 ஆம் அதிகாரம் 5 ஆம் வசனம் முதல் 11 ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசுவின் வெறுமையாக்கல் அனுபவத்தைப்பற்றி பவுல் பேசுகின்றார். அதாவது கடவுளுக்கு சமமாக கடவுளோடு இருந்தவர் அனைத்தையும் கைவிட்டு, மேலிருந்து கீழே இறங்கி வந்து அடிமையின் தாழ்மையின் ரூபமெடுத்து மனிதர் சாயலாகி ஒடுக்கப்படுபவருடன் தன்னை அடையாளப்படுத்தினார் என பவுல் பேசினார். இதன் மூலம் ஆண்டவர் இயேசு தன்னை முழுமையாக வெறுமையாக்கினார். இவ்வெறுமையாக்கல் அனுபவமே அவருக்கு பணி செய்யும்; அனுபவத்தை வழங்கியிருக்கக் கூடும். அதாவது தன்னிடம் இருந்த தெய்வீகத் தன்மையை முற்றிலும் துறந்ததன் விளைவாகவே மனிதத் தன்மை அவருக்குள் குடிகொண்டிருக்கக் கூடும். இத்தன்மையே அவரை பிறருக்காக அர்ப்பணிக்கத் தூண்டியிருக்கக் கூடும். இதனாலேயே பவுல் ஆண்டவர் இயேசுவை இரண்டாம் ஆதாம் எனவும் நற்செய்தியாளர்கள் மானிடமகன் எனவும் குறிப்பிடுகின்றனர் (மாற்கு 10:45). எனவே வெறுமையாக்கல் அனுபவ மாதிரி நாம் பிறருக்காக எம்மை அர்ப்பணிக்கவேண்டும், பணிசெய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை எமக்கு அருளுகின்றது.

4. பாதம் கழுவும் மாதிரி

ஆண்டவர் இயேசு தமது சீடர்களின் பாதங்களை கழுவிய சம்பவம் யோவான் 13:1-10 வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். இதனொளியில் ஆண்டவர் தன்னை ஓர் பணியாளனாக அடிமையாக உலகிற்கு காண்பித்து ஓர் பணியின் முன் மாதிரியை வைத்துள்ளார். இதன்படி பாலஸ்தீன தேசத்தில் ஓர் அடிமை செய்ய வேண்டிய பணியை இயேசு ஆற்றியதனூடாக தன்னை அடிமை நிலைக்கு உட்படுத்தினார். யாராலும் விரும்பப்படாத ஓர் மாற்றுக் கலசாரத்தை முன்வைத்து ஓர் போட்டியற்ற பணிமாதிரிமுறையை உலகிற்கு சமர்ப்பித்து உள்ளார். இதன்படி ஓர் சமூகப்பணியில் ஓர் பணியாளன் மாற்றுக் கலாசார தன்மையையும் போட்டியற்ற தன்மையையும் தன் உள்ளத்திலே இருத்திக் கொள்ள வேண்டும்.

5. யுபிலி மாதிரி

பழைய ஏற்ப்பாட்டில் யுபிலி வருடம் அல்லது விடுதலையின் வருடம் பொதுவாக கடைப்பிடிக்கப்படும் இந்நாட்களில் கடன் பெற்றோர் கடனை திருப்பிக்கொடுக்க முடியாத சூழல் ஏற்ப்படுகின்றபோது நிலம் குத்தகைக்கு விடப்பட்டு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனைகள் முன்வைக்கப்பட்டு மக்கள் வாழ்க்கையில் விடுதலை சிந்தனை யுபிலி நிகழ்வினூடாக விதைக்கப்படுகிறது. மேலும் இவ்வாறு பணிகள் நடைபெறுகின்ற போது ஓய்வு நாட்கொள்கை விடுதலை சார்ந்த ரீதியில் விளக்கப்படுவதை இணைச்சட்டம் 5 ஆம் அதிகாரத்தில் நாம் படிக்கின்றோம். அதாவது தொழிலாளர்கள் மிருகங்கள் போன்றவற்றிற்கு அளிக்கப்படவேண்டிய ஓய்வு நிலையைப் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டும். எனவே இவ் யுபிலி அல்லது அனுக்கிரக வருடம் எப்போது வருமென ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். எனவேதான் ஒடுக்கப்பட்டவர்கள் வாழ்வில் ஒவ்வொரு வருடமும் யுபிலி வருடமாக அமைய வேண்டுமென ஆண்டவர் இயேசு குறிப்பிடுகின்றார். இதன் மூலம் சமூகப்பணி ஓர் குறிக்கப்பட்ட ஓர் காலத்திற்கு செய்யும் ஓர் பணியாக அமைந்துவிடாது ஒவ்வொரு நிமிடமும் தொடரப்பட வேண்டியதொன்றாக காணப்படுகின்றது.

6. பத்துக்கட்டளை மாதிரி 

இஸ்ராயேல் மக்களின் அடிமைத்தன விடுதலை இறை பராமரிப்பு செங்கடல் கடத்தல் சீனாய் மலை உடன்படிக்கை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக பத்துக் கட்டளை காணப்படுகின்றது. இதில் முதல் நான்கு கற்பனைகளும் கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே உள்ள தொடர்பையும், மிகுதி ஆறு கற்பனைகளும் மனிதனுக்கும் சக மனிதனுக்கும் இடையே நிலவ வேண்டிய சமூகபொறுப்பின் தன்மையையும் சமூக உத்தரவாதத்தின் தன்மையையும் எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது. ஆண்டவர் இயேசு இக்கற்பனைகளின் சுருக்கத்தை மாற்கு 12:28-30 வரை உள்ள பகுதியில் எடுத்துக் காண்பிக்கின்றார். மேலும் மத் 5, 6, 7 ஆம் அதிகாரங்களில் காணப்படும் மலைப் பொழிவு பிரசங்கம் பத்து கட்டளைகளின் இன்னுமோர் விளக்கத் தொகுப்பாக காணப்படுகின்றது. இவைகளனைத்தும் பிறர்மட்டில் நாம் ஆற்ற வேண்டிய அரசியல், பொருளாதார, சமூக, அற, கலைகலாசார செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது.

6. சிலுவை மாதிரி

கிறிஸ்தவ வாழ்வின் மையமாக விளங்குவது சிலுவையாகும். இச்சிலுவை எங்களை நாங்கள் வெறுக்க வேண்டியதன் அவசியத்தையும் பொதுநலத்தை குறித்து சிந்திக்கவேண்டியதன் தேவையையும் எமக்கு வலியுறுத்திக் காண்பிக்கின்றது. கலாத்தியர் 6:14 இல் பரிசுத்த பவுல் நாமல்ல, எமது பணிகளல்ல மாறாக சிலுவையே மக்களுக்குத் தெரிய வேண்டுமென கூறுகின்றார். இதனொளியில் எமது பணி மாதிரிகளில் நாங்களல்ல மாறாக எமது பணிகளே மக்களுக்குத் தெரியவேண்டும். எனவே ஆண்டவர் இயேசு யூத மதத்திலும் உரோம அரசியலிலும் காணப்பட்ட சீர் கேடுகளை சுட்டிக்காட்டியதன் விளைவாக அவரது சிலுவை மரணம் ஏற்பட்டது. அதாவது மதத்தினதும் அரசியலினதும் தூய்மைக்காகவே இயேசுவின் மரணம் ஏற்பட்டதெனலாம். எனவே சிலுவை ஓர் சமூக பணியின் உன்னத மாதிரியாகும்.

நாம் சமூகப்பணி ஆற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்

இறைவன் எம்மை அழைத்து சமூகத்தில் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றுமாறு பணித்துள்ளார். எனவே இத்தகைய பணிகளை நாம் ஆற்றும்போது எவைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டுமென்பதை திருமறை ஆதாரங்களின் உதவியுடன் அவதானிப்போம்.

1. பணிகொள்வதல்ல பணிசெய்வதே அவசியம்


எமது பணிகளில் நாம் அனேக சந்தர்ப்பங்களில் பணிகொள்வதைக் குறித்து சிந்திக்கின்றோம். அதாவது பிறரிடமிருந்த பணிகளை நாம் எப்படிப் பெற்றுக்கொள்கிறோம் என்பதல்ல மாறாக அந்தப் பணிகளுக்கு மாறாக நாம் எதைச் செய்கின்றோம் என்பதே முக்கியமாகும். அதாவது சமூகப்பணி எத்தகைய முறையில் ஆற்றப்படுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவேதான் ஆண்டவர் இயேசு மாற்கு 10:45 இல் மானிடமகன் ஊழியம் கொள்ளும்படி வராமல் ஊழியம் செய்யவும், அதற்காக அனேகரை மீட்கும் பொருட்டு தன் உயிரையும் கொடுக்க வந்தேன் என கூறிய வாக்கியத்தை எமது சமூகப்பணிகளில் நாம் எமது இதயத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

2. பிரதிவிளைவு எதிர்பாராத்தன்மை 

பொதுவாக மானிட வாழ்வில் நாம் பணிகளை ஆற்றும் போது சில சந்தர்ப்பங்களில் அதனால் எமக்கு கிடைக்க உள்ள நன்மைகள் எவைகள் இல்லையேல் அப்பணிகளை மையமாக வைத்து நாம் அடையப்போகும் இலக்குகள் எவை போன்றவற்றைக் குறித்து நாம் சிந்திக்கின்றோம். ஆனால் உண்மையான பணி எத்தகைய மறைமுக இலக்குகளையும் கொண்டிருத்தல் கூடாது. குறிப்பாக மாற்கு 7:27-30 ஆம் வசனம் வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசு கானானியப் பெண்மணியின் மகளை குணமாக்கும் சம்பவத்தை நாம் படிக்கின்றோம். இப்பெண்மணி யூதப் பெண்மணியாக இல்லாத போதிலும் ஆண்டவர் இயேசு இவளுக்கு சுகத்தை வழங்குகின்றார். எனினும் சுகம்பெற்றபின்னர் இவளை யூத மதத்தை பின்பற்றுமாறு ஆண்டவர் இயேசு திணிக்கவில்லை. பணியை வழங்கினாரே தவிர மதமாற்றமென்கிற பிரதிவிளைவை குறித்து அவர் சிந்திக்கவில்லை. அனேக சந்தர்ப்பங்களில் நாம் சமூகப்பணியை ஆற்றும் போது அப்பணியின் மூலம் எத்தனை பேரை மதமாற்றம் செய்யலாமென்பதையே இலக்காகக்கொண்டே செயற்படுகிறோம். இது ஓர் தவறான அணுகுமுறையாகும்.

3. பணியில் இறைவனின் இடம் 

எமது சமூகப்பணிகளில் நாம் பொதுவாக தனிமனிதரையோ நிறுவனத்தையோ அல்லது ஓர் குறிப்பிட்ட திருச்சபையையோ மையமாக வைத்து பணியாற்றி வருகின்றோம். எமது பணிகளில் மேற்குறிக்கப்பட்டவைகளையே பிறருக்கு காண்பிக்க முற்படுகின்றோம். மாறாக இறைவன் இப்பணிகளில் இருக்கிறார் என்பதை நாம் பிறருக்கு காண்பிப்பதில்லை. ஆனால் மத் 11:2-6 வரையுள்ள பகுதியில் ஆண்டவர் இயேசுவிடத்தில் திருமுழுக்கு யோவான் தனது சீடர்களை அனுப்பிய வேளையில் இயேசு சீடர்களை நோக்கி இதோ பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், முடவர் நடக்கின்றனர் போன்ற வார்த்தைகளைப் பேசுகின்றார். அதாவது பணியை நான் செய்கிறேன் என இயேசு கூறாமல் மாறாக யாரோ ஒருவர் அதாவது கடவுள் இவைகளை செய்கின்றார் என இயேசு கூறுவது பணிகளில் கடவுளை பிறருக்கு காண்பிப்பதை எமக்கு எடுத்துக் காண்பிக்கின்றது.

4. பணிகள் விளம்பரங்களல்ல

சமூகப்பணிகளில் பெருமளவு பணிகள் விளம்பரங்களாக மாறிவிடுகின்றன. எம்மைப் பிரபல்யப்படுத்தும் முறைமைகளாகவும் நாம் இவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு இத்தகைய விளம்பர அணுகுமுறைகளை அடியோடே அழிக்கின்றார். குறிப்பாக லூக்கா 18:9-14 வரையுள்ள பகுதியிலும் மத்தேயு 6:1-6 வரையுள்ள பகுதியிலும் நாம் பணிகளை ஆற்றும் போது அவைகளில் பேணப்பட வேண்டிய இரகசியத்தன்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

5. சமூகப்பணியும் நற்செய்திப் பணியும்

திருத்தூதர்பணிகள் 6:1-6 வரையுள்ள பகுதியில் ஆதித் திருச்சபை முகம் கொடுத்த ஓர் பிரச்சனையைப் பார்க்கின்றோம். அதாவது எபிரேய மொழி பேசிய யூதர்கள் கிரேக்க மொழி பேசிய விதவைகளை சரிவர விசாரிக்கவில்லை. இத்தகைய பிரச்சனையை திருச்சபை திருத்தூதுவரிடம் கூறியபோது திருத்தூதுவர்கள் நற்செய்தியை அறிவிப்பது எமது பணியாகும் எனவே சமூகப் பணியாற்றுவதற்கென ஒரு குழுவினரை ஏற்ப்படுத்துவோம் எனக் கூறினர். இதனொளியில் ஏழுபேரை உள்ளடக்கிய திருத்தொண்டர்களை ஏற்ப்படுத்தினர். எனவே நாம் சமூகப்பணி ஆற்றும்போது அதற்க்காக பிரத்தியேகமான குழுக்களை உருவாகக்குதல் மிகவும் தேவையானதொன்றாகும்.

6. சமூகப்பணியும் இறுதியியலும்

பொதுவாக சமூகப்பணியை நாம் ஆற்றும் போது, அது நிகழ்கால விடுதலையை மையப்படுத்தியதாக காணப்படுதல் வேண்டும். ஏனெனில் சில சந்தர்ப்பங்களில் எமது பணிகள் எதிர்கால விடுதலையை கருத்திற் கொண்டு ஆற்றப்படலாம். எனவே தான் நிகழ்கால விடுதலையை மையப்படுத்தி நாம் ஆற்றும் போது பணியின் உறுதிநிலையை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதாவது பிரச்சனைகளால் ஏற்ப்படும் விளைவுகளுக்கு நாம் தீர்வு காணாமல் பிரச்சனைகளுக்குரிய ஆணிவேரை அடையாளம் கண்டு அதற்கு ஏற்ப தீர்வுகாண்பதே மிகவும் வேண்டப்படும் ஒன்றாகும். லூக் 10:25-37 வரையுள்ள பகுதியில் சமாரியனின் சமூகப்பணி அதிகளவில் பாராட்டப்பட்ட போதிலும் அநீதிக்குக் காரணராகிய கள்வரைப் பிடிப்பது இப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வாகும். எனவே சமூகப் பணியில் நிரந்தரத் தீர்வைநோக்கி நகர்வதே மேலானதென திருமறை கூறுகின்றது.

7. தேவையான பணியை ஆற்றல்

சமூகப்பணியை ஆற்றும்போது உரியபணியை உரியவருக்கு ஆற்றுதல் வேண்டப்படும் ஒன்றாகும். இல்லையேல் நாம் ஆற்றும் பணி சரியானவரை சென்றடைய மாட்டாது. எனவே சரியான திட்டமிடல் சமூகப்பணியில் மிகவும் அவசியமாகின்றது. 

சமூகப்பணியைப் பெறுபவர் கவனத்தில் கொள்ள வேண்டியவை 

அ. தியாகமும் இலாபமும்
சமூகப்பணியைப் பெறுபவர் இலாபத்தை மையமாகக் கொண்டு செயற்பட்டாலும் அத்தகைய இலாபம் இன்னனுமொருவரின் தியாகத்தை மறைத்துவிடக் கூடாது. மாற்கு 5:1-19 வரையுள்ள பகுதியில் இலேகியோன் என்ற பேய் பிடித்த மனிதனை இயேசு குணமாக்கியதை நாம் பார்க்கின்றோம். இப்பிசாசுகள் மேடுகளிலிருந்த 2000 பன்றிகளுக்குள் சென்றன. இதன்காரணமாக பன்றிகள் தரையில் விழுந்து மரித்துப் போயின. இதனை பார்த்த ஊர் மக்கள் இயேசுவை நோக்கி ஆண்டவரே நீர் இங்கிருந்து சென்றுவிடும், நீர் இருந்தால் எம் பொருளாதாரத்திற்கு கேடு உண்டாகி விடும் எனக் கூறினர். இதனொளியில் பிசாசின் பிடியிலிருந்து விடுதலையான இலேகியோனைக் குறித்து அந்த மக்கள் சிந்திக்கவில்லை. மாறாக தங்கள் பொருளாதாரத்தைக் குறித்தே சிந்தித்தனர். எனவே சமூகப் பணியைப் பெறுபவர் தங்கள் தியாகங்களை இலாபங்களால் மூடக்கூடாது.

ஆ. பெறுதலும் கொடுத்தலும்
சமூகப் பணியைப் பெறுபவர் எப்பொழுதும் பெற்றுக் கொள்பவராக இருக்கக்கூடாது. மாறாக கொடுப்பதற்கும் முன்வர வேண்டும். உதாரணமாக பரிசுத்த பவுல் அப்போஸ்தலன் எருசலேம் திருச்சபையில் பஞ்சம் ஏற்ப்பட்டபோது அத்திருச்சபைக்கு உதவி செய்யுமாறு எருசலேம் திருச்சபையிலிருந்த உதவி பெறும் அந்தியோகிய திருச்சபையைக் கேட்டுக் கொண்டான். இதன்படி அந்தியோகியத் திருச்சபை உதவி பெறும் திருச்சபையாக மாத்திரமன்றி உதவி வழங்கும் திருச்சபையாகவும் மாறியது.

இ. சமூகப்பணியும் நல்லொழுக்கமும் 
சமூகப்பணிக்கும் நல்லொழுக்கத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அதாவது சமூகப்பணியைப் பெறுபவர் அப்பணியினால் தமது வாழ்வில் மாற்றங்களை, முன்னேற்றங்களை அவதானித்தல் வேண்டும். இதன்படி உரோமர் 12 ஆம் அதிகாரத்தில் கூறப்படும் நல்லொழுக்கம் சமூகப்பணியினால் ஏற்ப்பட வேண்டும். அப்பொழுதே சமூகப்பணி பொது வாழ்வையும் மறுரூபமாகுதலையும் நமக்குள்ளே ஏற்படுத்தும்.

ஈ. பயனாளிகளின் பங்களிப்பு 
சமூகப்பணியில் பயன்பெறும் பயனாளிகள் எப்பொழுதும் உதவி பெறுபவர்களில் தங்கியிராமல் தமது பங்களிப்பினை வழங்குதல் மிகவும் அவசியமாகின்றது. உதாரணமாக சமாரியப் பெண் உயிருள்ள தண்ணீரை பெற வேண்டுமேயாகில் அவள் சாதாரண தண்ணீரை இயேசுவுக்கு கொடுக்க வேண்டிய தேவை ஏற்ப்பட்டது. மேலும் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசு ஐயாயிரம் பேருக்கு போசிக்க வேண்டுமேயாகில் ஓர் சிறு பிள்ளையின் பங்களிப்பு அவசியமாகத் தேவைப்பட்டது. இதனொளியில் பயனாளிகளின் பங்களிப்பு சமூகப்பணியில் மிக அவசியமாகக் காணப்படுகின்றது.

சமூகப் பணியாளன் எதிர்நோக்கும் சவால்கள்

அ. பணியும் பலமும்
கடவுளுடைய திருப்பணியை முன்னெடுக்கும் ஒவ்வொருவரும் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுக்கின்றனர். குறிப்பாக ஆண்டவர் இயேசு தமது சீடர்களை நோக்கி நரிகளுக்கு குழிகளும் ஆகாயத்துப்பறவைகளுக்குக் கூடுகளுமுண்டு ஆனால் மானிட மகனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்கிறார். இதன்படி நரிகள் என்பது ஏரோதியரையும் ஆகாயத்துப் பறவைகள் என்பது உரோமர்களையும் குறித்து நிற்கின்றது. எனவே அரசியல் வாதிகளுக்கு உலகிலே பலங்கள் அதிகமாக உள்ளன. ஆனால் பணியாளனுக்கோ பலமற்ற ஒரு சூழலை ஆண்டவர் இயேசு காண்பிக்கின்றார். இதன்படி ஒவ்வொருபணியாளனும். பலமற்ற ஒரு நிலையை அனுபவிக்கின்றான்.

ஆ. பணியும் பரமனும்
 பணியாளன் தன் பணியில் கடவுளில் பூரண நம்பிக்கை வைக்க அழைக்கப்படுகின்றான். லூக்கா 10:1-10 இல் ஆண்டவர் இயேசு தமது சீடர்களை நோக்கி உங்கள் பணிகளில் நீங்கள் பொருளாதாரங்களில் மேலல்ல மாறாக கடவுள் மீது உங்கள் நம்பிக்கையை வையுங்கள் என இயேசு குறிப்பிடுகின்றார். எனவே பணிகளில் அல்ல நம்பிக்கை இறைவன் மீது காணப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

இ. பணியும் கணக்கு ஒப்புவித்தலும்
மத்தேயு 25:13-33, லூக்கா 10:1-10 ஆகிய இரு பகுதிகளும் பணிக்கும் கணக்கு ஒப்புவித்தலுக்கும் இடையே உள்ள தொடர்பை எடுத்துக் காண்பிக்கின்றது. இதன்படி இயேசுவின் சீடர்கள் பணியின் நிறைவில் தமது அறிக்கையை இயேசுவிடம் சமர்ப்பித்து மகிழ்ந்த போது ஆண்டவர் இயேசு அவர்களை நோக்கி உங்கள் பெயர் பரலோகத்தில் பதித்து இருப்பதை குறித்து மாத்திரமே சந்தோசப்படுங்கள் என கூறுகின்றார். எனினும் பணிகளில் கணக்கு ஒப்புவித்தலின் முக்கியத்துவத்தை மாத்திரமே வலியுறுத்த வேண்டுமென்கிறார்.

ஈ. பணியும் அவமானமும்
பணிகளில் கிடைக்கும் பரிசு பல சந்தர்ப்பங்களில் அவமானமாகும். அதாவது அதிக பணிகளுக்கு  கிடைக்கும் பரிசு இன்னும் பணிகளே ஆகும். பழைய ஏற்பாட்டுத்தலைவர்களும் புதியஏற்பாட்டுத் தலைவர்களும் தமது பணியில் அவமானத்தையே பரிசாகப் பெற்றனர். ஆமோஸ் 5:16, தானியேல் 3:15-25, மாற்கு 6:1-6, 2 கொரிந்தியர் 12 போன்ற பகுதிகளை குறிப்பிடலாம்.

முடிவுரை

பணிகளுக்கு சொந்தக்காரனாகிய கடவுள் பல பணிகளை ஆற்றுமாறு எம்மை உலகிற்கு அனுப்பியுள்ளார். இப்பணிகளை ஆற்றும்போது பல சவால்களுக்கு நாம் முகம் கொடுக்கின்றோம். எனினும் பணிகளை உலகியல் சார்ந்தபணி, ஆன்மீகப்பணி என்றோ சமூகம் சார்ந்தபணி அல்லது சமயம் சார்ந்தபணி என்றோ நாம் பிரித்து விட முடியாது. ஏனெனில் எல்லாப் பணிகளும் சமுதாயத்திலிருந்து எழுந்து சமுதாயத்தை நோக்கி செல்கின்றது. எனவே இறையரசின் அடையாளமாக, மாதிரியாக, உபகரணமாக விளங்கும் திருச்சபை தனது பிரதிநிதிகளை இறையரசை நோக்கி உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இறையரசில் மக்கள் வடக்கேயும் கிழக்கேயும் தெற்கேயும் மேற்கேயும் இருந்து வருவார்கள். அங்கே எத்தகைய வேறுபாடுகளும் காணப்படமாட்டாது. இதனோளியில் பிரிந்து நிற்கும் மக்களை இணைக்கும் பாலமாக சமூகப்பணி காணப்படுகின்றது. எனவே நேதன் சோல்ட்புறம் கூறுவதைப்போல் கோட்பாடுகளும் உறுதிக்கோட்பாடுகளும் எம்மைப் பிரித்து நிற்கின்றது. ஆனால் பணிகள் எம்மை இணைத்து நிற்கின்றன. இதனொளியில் இன்றைய இலங்கைச்சூழலில் எமக்கிடையே ஒற்றுமையை ஏற்ப்படுத்த வேண்டுமேயாகில் அவ் ஒற்றுமை பணிகளுக்கு ஊடாகவே ஏற்படும். எனவே கிறிஸ்தவராகிய நாம் சமூகப்பணியின் மேன்மையை உணர்ந்து தனிப்பட்ட நிலையிலும் குடும்ப நிலையிலும் சமூக நிலையிலும் தேசிய நிலையிலும் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளோம்.

வாழ்வளிக்கும் உணவு

வாழ்வளிக்கும் உணவு (மாற்கு 6 : 30 – 44)

இயேசு 5000 பேருக்கு மேற்பட்டவர்களுக்கு உணவளித்த சம்பவம் 4 நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது. மாற்கு நற்செய்தியின் அடிதத்ளத்தில் உணவளித்த சம்பவத்துடன் சீடர்களின் பணியின் மீள்வருகையும் மக்கள் மீதான கரிசனையும் வெளிப்படுத்தப்படுகின்றது. ஆண்டவர் இயேசு கலிலேயாவில் வாழ் மக்களைப் பார்க்கும்போது மேய்ப்பர்கள் அற்ற மந்தையைப் போல காட்சி அளித்தனர். ஏனெனில் இவர்கள் ரோம அடிமைத்தனத்தில் வாழ்ந்தபடியால் செல்லாக்காசுகளைப் போல கருதப்பட்டனர். இவர்கள் தொலைக்கப்பட்டவர்களாகவும் உணவுக்காக அலைந்து திரிபவர்களாகவும் பாதுகாப்பைத் தேடி அலைபவர்களாகவும் காணப்பட்டனர். இத்தகைய மக்கள் மீதே ஆண்டவர் இயேசு கருணை காட்டினார்.

இயேசு மக்களுக்கு உணவளித்த நிகழ்வை இயற்கைக்கு அப்பாற்பட்ட புதுமையாக பொதுவாக மக்கள் கருதுவர். இந்நிகழ்வை யோவான் நற்செய்தியாளன் இறுதி இராவிருந்துடன் தொடர்புபடுத்துவார். மாற்குவில் ஆண்டவர் அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி செலுத்தி உடைத்து சீடர்களுக்குக் கையளிக்கின்றார். இங்கு அநேகருக்கு பயன்படுவதற்காக அப்பம் உடைக்கப்படுகின்றது (தி. பணிகள் 2 : 42 – 60, 20: 7, 11, 27 : 35, 1 கொரிந்தியர் 10 : 16, 11 : 24). அடைக்கப்பட்ட அப்பம் மக்கள் பயன்பாட்டிற்காக சீடர்களிடம் கொடுக்கப்படுகின்றது. சீடர்கள் அதனை மக்கிளிடம் கையளிக்கின்றனர். இங்கு சீடர்கள் இயேசுவின் துணையின்றி செயற்பட முடியாது. அது போல இயேசுவும் சீடர்களின் உதவியின்றி செயற்பட விரும்பவில்லை. எனவே தான் கடவுளின் கரங்களாகவும் கால்களாகவும் மனுக்குலம் காணப்படவேண்டும் என்றும் கடவுளின் திட்டத்தில் பங்குதாரராக மாற வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அப்பத்தை உடைக்னும் முன்னர் ஆண்டவர் இயேசு தமது தந்தையை நோக்கி மன்றாடினார். இச் செயல் ஆண்டவர் இயேசு கடவுளில் தங்கி இருந்த வாழ்வை தனது வாழ்நாளில் கடைப்பிடித்தார் என்பதைக் காணலாம்.

மக்கள் மீது கொண்ட கரிசணையினால் இயேசு அவர்களை வெறும் வயிற்றுடன் அனுப்ப விரும்பவில்லை. எனவே அவர்களுக்கு உணவளிக்குமாறு தமது சீடர்களிடம் கேட்டுக் கொண்ட போது சீடர்கள் வனாந்தரமான இடம், அதிக பணம் தேவை போன்ற பதில்களை அளித்து பொறுப்பில் இருந்து விலகிச் செல்ல முற்பட்டபோது ஆண்டவர் இயேசுவோ அதற்கு இடங்கொடுக்கவில்லை. பல வேளைகளில் நழுவல் தன்மை போக்குக் கொண்டவர்களாக வாழுகின்ற எமக்கு இச்சம்பவம் சிறந்த உதாரணமாகும். மேலும் சிறுவனின் செயல் பலருக்கு சவாலாகக் காணப்பட்டது. ஆண்டவர் இயேசுவிடம் தன்னையும் தன்னுடையவைகளையும் ஒப்படைத்தபோது அதனை பிறருக்கு ஆசிர்வாதமாகப் பயன்படுத்தினர். இன்று கடவுள் பயன்படுத்தாதபடி நாம் எம்மை ஒப்படைக்காத நிலைகள் காணப்படுகின்றன (உரோமையர் 12 : 2 , 1 கொரிந்தியர் 9 : 27, எபேசியர் 4 : 23). இப்புதுமை இயேசுவின் மேசியத்துவத்தை நிரூபிக்கின்றது (ஏசாயா 25 : 4). மேலும் ஆண்டவர் இயேசு பிசாசினால் சோதிக்கப்படும் போது பிசாசு கற்களை அப்பமாக்கும் பணியில் கடவுளின் வல்லமையை சுயநல நோக்கத்திற்காக பயன்படுத்துமாறு வேண்டுகின்றான். அதாவது கற்களை அப்பமாக்கி இயேசுவின் பசியை போக்குமாறு கேட்கின்றார். ஆனால் இயேசுவோ கடவுளின் வல்லமையை சுயநல நோக்கத்திற்காகப் பயன்படுத்தாமல் அநேகருக்கு உணவு வழங்குவதற்கான முயற்சியில் அதனைப் பயன்படுத்துகின்றார். மேலும் மக்கள் மறுநாளும் உணவுதேடி வந்தபோது ஆண்டவர் இயேசு புதுமையைச் செய்ய மறுத்ததோடு பகிர்வின் வாழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வயிறாற உணவு உண்ட மக்கள் இயேசுவை தலைவராக்க முற்பட்டபோது ஆண்டவர் இயேசு புதுமைகள் வாயிலாக எழுகின்ற பிரபல்லியத்தை முற்றாக நிராகரித்தார். அதாவது புதுமைகள் ஒரு போதும் தனது திருப்பணியின் இலக்கை மாற்றிவிடாதபடி பார்த்துக் கொண்டார். இச் செயல் இன்றைய கிறிஸ்தவத் திருப்பணியருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகின்றது.

By Rev. Arulampalm Stephen

தோமாவின் முன்நிலையில் இயேசுவின் காட்சி

தோமாவின் முன்நிலையில் இயேசுவின் காட்சி (யோவான் 20 : 24 – 29)

ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியை இயேசுவின் சீடர்கள் தோமாவிற்குக் கூறியபோது அவன் நம்பவில்லை. ஏனெனில் உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களுக்குக் காட்சி அளிதத்போது அவன் சீடர்களுடனான ஐக்கியத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டிருந்தான். எனவே கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் பங்குபற்றிக் கொள்ள அவனால் முடியவில்லை. சங்கீதக்காரனாகிய தாவீது போராட வேண்டிய களத்தில் தன்னை இருத்திக் கொள்ளாமல் அரண்மனையில் உலாவியதே அவனுடைய வீழ்ச்சிக்கான காரணமாக மாறியது. மேலும் பேதுரு சீடர்களுடன் கூட்டிணையாமல் தன்னை தனிமைப்படுத்தி அரண்மனை முற்றத்தில் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டதே இயேசுவை மறுதலிப்பதற்கான வாய்ப்பை அளித்தது. இதன் ஒளியில் நாம் எங்களுடைய இருப்பிடங்கள் எங்கே உள்ளன என்பதை ஆராய அழைக்கப்படுகின்றோம்.

தோமாவைப் பொறுத்தவரை காணாதது ஒன்றையோ அறியாத உண்மையையோ இலகுவில் நம்ப விரும்பவில்லை. இது மிகவும் அவசியமானதாகும். எங்கள் கிறிஸ்தவ வாழ்வில் பிறருடைய விசுவாசத்தின் அடித்தளத்தில் எங்கள் விசுவாசத்தைக் கட்டி எழுப்புதல் தவறானதாகும். ஒவ்வொருவருக்குமான கடவுளுடனான தனிப்பட்ட அனுபவம் மிகவும் அவசியமானதாகும். இந்த அனுபவத்தையே தோமா வேண்டி நின்றார். ஏனெனில் தனிப்பட்ட அனுபவம் கடவுளை சரிவரப் புரிந்து கொள்ளுவதற்கு மிகவும் வேண்டப்படும் ஒன்றாக எண்ணினார். ஏனெனில் அவரின் காயங்களுக்கு தானும் காரணம் என்பதை மறைமுகமாக ஒத்துக் கொண்டார். எனவே தான் அக்காயங்களைப் பார்த்து தொட்டு மன்னிப்பின் நிச்சயத்தையும் அனுபவத்தையும் பெறுவதற்கு அவன் விரும்பினான்.

ஆண்டவர் இயேசு மறுபடியுமாக தோமையார் இருந்த வேளையில் காட்சி அளித்தார். இயேசுவை அனுபவித்த தோமா இப்பொழுது என் ஆண்டவரே என் தேவனே என அறிக்கை இடுகின்றார். இவ் அறிக்கை அவனுடைய அனுபவத்தில் இருந்து எழுகின்றது. இயேசுவின் தெய்வீகத் தன்மையை இவ்அறிக்கை வெளிப்படுத்துவதோடு இயேசுவிற்கு தான் அடிமை என்பதை வெளிப்படுத்துகின்றார். இவ் அறிக்கையின் ஒளியில் தோமாவை ஆண்டவர் இயேசு பணிக்காக அனுப்புகின்றார். இதனை ஏற்ற தோமா கி.பி 54 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்து பின்னர் இலங்கையிலும் நற்செய்தியைப் பரப்பி சென்னையிலுள்ள மைலாப்பூரில் மரித்தார். இயேசுவின் உயிர்ப்பிற்கு சான்று பகர்வோர் அவரை அனுபவிக்க அறிக்கை இட அனுப்பப்பட ஆயத்தமாய் இருக்க வேண்டும்.

By Rev. Arulampalm Stephen

ஊழியத்தின் மாதிரி

ஊழியத்தின் மாதிரி (யோவான் 13 : 1 – 10)

ஆண்டவர் இயேசு தமது சீடர்களின் பாதங்களைக் கழுவிய நிகழ்வை யோவான் 13 : 1 – 10 வசனம் வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். இந்த சம்பவம் யோவானுக்கே தனித்துவமான ஒரு நிகழ்வாகும். இயேசு தமது சீடர்களுக்குப் போதிப்பதற்கு உபயோகித்த முறைகளில் செயற்பாடு ரீதியான உவமையாக இது காணப்படுகின்றது. இச்சம்பவத்தில் இயேசு ஊழியத்தில் ஒருவர் மற்றவரின் பாதங்களை கழுவுவதே மேலான செயல் எனப் போதிக்காமல் தானே முன் வந்து சீடர்களின் கால்களைக் கழுவிய நிகழ்வு ஊழியத்pல் எப்போதும் செயற்பாட்டு மையத்தைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஓர் சிறந்த எடுத்துக் காட்டாக இந்நிகழ்வு காணப்படுகின்றது.

இச்சம்பவத்தில் ஆண்டவர் இயேசு தமது பணியில் குறிக்கப்பட்ட நிகழ்வை ஆற்றப் போவதாக யாருக்கும் விளம்பரப்படுத்தவில்லை. சீடரும் அறிந்திராத தெரிந்திராத வேளையில் இந்நிகழ்வு ஆற்றுப்பட்டதன் ஊடாக ஆண்டவர் இயேசு தமது பணியில் விளம்பரத்தையோ பிரபல்யத்தையோ எதிர்பார்க்கவில்லை என தெளிவாகின்றது. இன்றைய நாட்களில் பணியில் விளம்பரத்தை எதிர்பார்க்கும் எமது இயேசுவின் செயல்பாடு சவாலை தரும் ஒரு முன்மாதிரிகை ஆகும்.

ஒருவர் பிறரின் பாதங்களைக் கழுவுவதற்கு பெரும்பாலும் விருப்பம் கொள்ள மாட்டார். இத்தாழ்மையான, எளிமையான மாதிரியைப் பின்பற்றுவதற்கு யாரும் முன்வரமாட்டார். எனவே இத்தகைய பணியை நிறைவேற்றுவதற்கு பிறருக்கு இடையிலே நாம் போட்டிப் போடத் தேவையில்லை. போட்டிப் பொறாமை மிகுந்த இவ்வுலகில் எவ்வித போட்டியும் அற்ற இப்பணியை செய்ய நாம் அழைக்கப்படுகின்றோம். மேலும் இப்பணி அக்காலத்தில் அடிமைகளினால் ஆற்றப்பட்டு வந்த ஒன்றாகும். எனவே நடைமுறையில் காணப்பட்ட கலாசாரத்திற்கு எதிரான ஒரு மாற்றுக் கலாசாரத்தை ஆண்டவர் இயேசு இங்கு முன்வைக்கின்றார். எனவே எமது பணியிலும் நாம் நடைமுறையில் இருக்கும் பிறரை ஒடுக்குகின்ற வர்க்க வேறுபாட்டை, வகுப்பு வேறுபாட்டை ஏற்படுத்துகின்ற காரணிகளைக் காணலாம். கண்டு அதற்கு எதிரான மாற்று கலாசார விழுமியங்களைப் படைப்பது சாலவும் சிறந்ததாகும்.

ஆண்டவர் இயேசு தமது சீடர்களின் பாதங்களைக் கழுவி அவைகளைப் துடைப்பதற்காக தன் மேலாடைகளைக் கழற்றுகின்றார். இந்நிலை முற்றிலுமாக தன்னை வெறுமையாக்கும் நிலைக்குள் செல்ல ஆண்டவர்; அனுமதிக்கின்றார் பிலிப்பியர் 2 : 4 – 11) இதைப் போன்று ஊழியத்தில் எங்களை நாங்கள் எவறுமையாக்கும் போது மாத்திரமே நாங்கள் பிறருடைய பாரங்களை சுமக்கவும் பிறருக்காக எம்மை அர்ப்பணிக்கவும் முடியும். இல்லையேல் நாம் ஊழியம் செய்யும் மாதிரியைப் பின்பற்றாமல் பிறரிடம் இருந்து உழியம் செய்யும் மாதிரியை பின்பற்றக் கூடிய ஆபத்துக் காணப்படுகின்றது (மாற்கு 10 : 45).

நாம் பிறர் பாதங்களைக் கழுவ முற்படும் போது மாத்திரமே எங்களுடைய நிலை எத்தகையது நாங்கள் எப்பேர்ப்பட்டவர்களாக இருக்கின்றோம் என எங்களை நாங்கள் சோதித்து, நிதானித்து அறிவதற்கான ஒரு அனுபவ செயலாகும். இதன் வாயிலாக நாங்கள் எங்களைக் குறித்து மேட்டுமையாக எண்ணாமல் எங்களிலும் பார்க்க மற்றவர்கள் மேலானவர்கள் என்ற சிந்தனையை வளர்க்க உதவியாக அமையும் (பிலிப்பியர் 2 : 1 – 5). மேலும் எங்களுக்குரியவைகளை நாடாமல் பிறருக்குரியவைகளை நாட நாங்கள் அழைக்கப்படுகின்றோம் என எங்களுக்கு உணர்த்தும் ஒரு மாதிரி ஆகும்.

ஊழியத்தில் நாம் இயேசுவுடன் ஐக்கியப்பட வேண்டுமாயின் நாங்கள் அவருக்காக இழக்க வேண்டிய பகுதிகளை அல்லது சிந்தனைகளை அல்லது செயற்பாடுகளை நாங்கள் அடையாளம் காண அழைக்கப்படுகின்றோம். குறிப்பாக இயேசுவின் சீடனாகிய பேதுரு ஆண்டவர் இயேசு தனது கால்களைக் கழுவுவதற்கு இடம் கொடுக்கவில்லை. இத்தகைய சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு நான் இதை செய்வதற்கு இடம் கொடுக்காத பட்சத்தில் என்னிடத்தில் உனக்கு எந்தவிதமான பங்கும் இல்லை என இடிதத்துரைக்கின்றார். இதன் மூலம் பேதுரு இயேசுவுடன் பங்குதாரராக மாறுவதற்கு தன்னிடத்தில் இழக்க வேண்டியவைகளைக் கணக்கிடத் தொடங்கினான். எனவே இப்பாதங்களைக் கழுவும் சம்பவம் எமது ஊழியத்தில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல யதார்த்தபூர்வமான மாதிரிகளை முன்வைக்கின்றன.

By Rev. Arulampalm Stephen

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுள்ளாயா?

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுள்ளாயா? (திருத்தூதுவர் பணிகள் 2 : 1 – 10) 

எல்லா மதங்களிலும் ஆவியர் பற்றிய சிந்தனைகள் காணப்படுகின்றன. கிறிஸ்தவ திருச்சபை வரலாற்றில் ஆவியரின் பங்களிப்பு முக்கியமாக இருந்ததை திருமறையிலும் திருச்சபை வரலாற்றிலும் நாம் காணலாம். பழைய ஏற்பாட்டில் றுவாக் என்ற எபிரேய மொழியிலும் புதிய ஏற்பாட்டில் நியூமா கிரேக்க மொழியிலும் ஆவியர் அறிமுகப்படுத்தப்படுகின்றார். காற்று , மூச்சு , சுவாசம் போன்ற பதங்கள் மேற்கூறப்பட்ட சொற்களுக்கு கொடுக்கப்பட்ட அர்த்தங்கள் ஆகும். பழைய ஏற்பாட்டில் ஆள்த்தன்மை அற்ற முறையில் காட்டப்படும் ஆவியர் புதிய ஏற்பாட்டில் ஆள்த்தன்மை உடையவராக வெளிப்படுத்தப்படுகின்றார். பெந்தேகோஸ்தே பெருவிழாவின் போது திருச்சபை மீது பொழியப்பட்ட ஆவியர் பல்வேறு பணிகளை ஆற்றுமாறு எம்மைப் பணிக்கின்றார். இக்கட்டுரையில் ஆவியர் ஆற்றுமாறு எம்மை அழைக்கும் பணிகளைக் குறித்து ஆராய்வோம்.

பெந்தேகோஸ்தே பெருவிழாவின் போது ஆவியர் திருச்சபை மீது பொழியப்பட்ட வேளையில் மக்கள் அயல் மொழிகளில் பேசியதைத் திருமறை ஞாபகப்படுத்துகின்றது. பிளவுபட்டிருந்த மொழிகள் கலாசாரங்கள், இனங்கள், ஆவியரின் வருகையுடன் ஒன்றணைகின்றன.

எனவே பிரிவினைகளின் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்துமாறு தூய ஆவியர் எம்மை அழைக்கின்றார். திருத்தூதுவர் பணிகள் 6ம் அதிகாரம் 1 முதல் 6 வரையுள்ள பகுதியில் சரிவர பந்தி விசாரிப்பு மேற்கொள்ளப்படாமல் இருந்த கிரேக்க விதவைப் பெண்களுக்கு பணிவிடை செய்யுமாறு தூய ஆவியினால் நிரப்பப்பட்ட முடியப்பர் தெரிவு செய்யப்படுகிறார். இதன் அடித்தளத்தில் சமூகத்தில் மக்கள் சார்பில் பணியாற்றுமாறு தூய ஆவியர் எம்மை அழைக்கிறார் (தி. பணிகள் 13 : 2) இல் சவுலையும், பர்னபாவையும் பணிக்காக பிரித்தெடுத்து வைக்குமாறு தூய ஆவியார் கட்டளையிடுகிறார். மேலும் லூக்கா 4 : 16 – 21 வரையுள்ள பகுதியில் கர்த்தருடைய ஆவியானவர் என் மேல் உள்ளார். மக்களுக்குப் பணியாற்றுமாறு என்னை அனுப்பியுள்ளார் என இயேசு முழங்குகிறார். எனவே தூய ஆவியாரின் அருளின்றி எம்மால் எத்தகைய பணியும் ஆற்றிவிட முடியாது என எமக்குப் புலனாகுன்றது (2 தீமோத்தேயு 3 : 16 – 18) இல் தேவ வாக்கியங்கள் அனைத்தும் தூய ஆவியினால் அருளப்பட்டு எழுதப்பட்டுள்ளன என பவுல் கூறுகின்றார். இதன் ஒளியில் தூய ஆவியின் துணை இன்றி திருமறையை எம்மால் புரிந்து கொள்ள முடியாது. எத்தியோப்பியா அண்ணகன் திருமறையை வாசித்த போதும் அதனை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்பொழுது தூய ஆவியர் பிலிப்புவை நோக்கி அண்ணகன் வாசிப்பதை அவருக்குப் புரிய வைக்குமாறு பிலிப்புவை உற்சாகப்படுத்துகின்றார் (தி. பணிகள் 8 : 29). எனவே தூய ஆவியாரின் துணையின்றி திருமறையை வாசிக்கவோ அதனை விளங்கிக்கொள்ளவோ முடியாது.

ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட மனிதன் சமூகத்தில் உண்மைக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுப்பான் (தி. பணிகள் 2 : 23) இல் இயேசுவின் மரணம் யூதமதவாதிகளாலும், அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்தப்பட்டதொன்று எனப் பேதுரு பகிரங்கமாக பெந்தேயோஸ்தே பெருவிழாவின்போது சான்று பகர்கின்றார், தூய ஆவியார் மனிதருக்கும், சமூகத்திற்கும் உண்மை எது நீதி எது என புரிய வைப்பார் என இயேசு போதிக்கின்றார் (யோவான் 16 :8). ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதனின் வாழ்வில் சிறந்த அறப்பண்புகள் வெளிப்படும் என திருமறை கூறுகின்றது (கலாத்தியர் 5 : 22, 23)இல் ஆவியின் கனி ஒவ்வொன்றும் ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதரிடத்தில் வெளிப்பட வேண்டுமென புனித சின்னப்பர் கூறுகின்றார். மேலும் ஆண்டவர் இயேசு தனது சீடரை விட்டு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர் அவர்கள் மேல் ஆவியை ஊதி அவர்களுக்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தைக் கொடுக்கின்றார். அதன் முதல் ஆவியால் அருளப்படும் மனிதன் மன்னிக்கும் சுபாவம் உடையவனாக மாற வேண்டும் என நாம் பார்க்கின்றோம் (யோவான் 20 : 22 , 23). ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு மனிதனின் நற்செய்திக்காக எந்த சவாலையும் ஏற்றுக் கொள்ள ஆயத்தமாவான் திருத்தூதுவர் பணிகள் 7 ஆம் அதிகாரத்தில் புனித முடியப்பர் இறைவார்த்தையின் ஒளியில் தூய ஆவியால் நிரப்பப்பட்டு இறைவன் கைகளினால் கட்டப்பட்ட ஆலயத்தில் வாசம் செய்ய மாட்டார் எனவும் அவர் வரலாற்றிலே செயல்பட்டு வரும்கடவுள் எனவும் கூறிய போது யூத தலைமையகம் மிகவும் ஆத்திரமடைந்தது. எனினும் நற்செய்திக்காக எத்தகைய சவாலையும் ஏற்றுக் கொள்ள ஆயத்தமானார். மேலும் திருத்தூதுவர் பணிகள் 15 ஆம் அதிகாரத்தில் ஒரு மனிதனின் மீட்பு அடைவதற்கு யூத சட்ட முறைப்படி அவன் விருத்தசேதனம் செய்ய வேண்டுமா இல்லையேல் கிறிஸ்துவின் அருள் மட்டும் மீட்படையப் போதுமானதா என்ற வினா எழுந்தது. இதற்காக கி.பி 49 இல் எருசலேமில் ஒரு பொதுக் கூட்டம் கூட்டப்பட்டது. இக் கூட்டத்தில் புனித இறையப்பர், யாகப்பர் போன்றோர் மீட்படைய கிறிஸ்துவின் அருள் மாத்திரம் போதுமானது என்ற முடிவிற்கு வந்தனர். இம்முடிவு யூதத் தலைமை சங்கத்தைப் பாதித்தப் போதிலும் நற்செய்தியின் பொருட்டு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சமூகம் எந்த சவால்களையும் எதிர் நோக்க ஆயத்தமாகும். இன்றும் நாம் வாழும் போர் வறுமை பல்சமய சூழல் உரிமை மீறல் போன்ற பலவிதமான அனுபவங்களை உள்ளடக்கிய எமது நாட்டிலும் தூய ஆவியாரால் நிரப்பப்பட்டுள்ள நாம் நற்செய்தியின் ஒளியில் சவால்களுக்கு முகம் கொடுக்க அழைக்கப்படுகின்றோம்.

தூய ஆவியாரால் நிரப்பப்பட்ட ஓர் மனிதர் இனம், மதம், மொழி, வயது, பால், கலை, கலாசார வேறுபாடுகள் எல்லாவற்றையும் மறந்து தடைகளைத் தாண்டி மனித நேய மையத்தில் செயற்படுவதை நாம் காணலாம். திருத்தூதுவர் பணிகள் 10 ஆம் அதிகாரத்தில் புனித இராயப்பர் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட போது தமது வரையறைகளைக் கடந்து சென்று மனித நேயத்தை கொர்நேலியுவில் காண முற்பட்டதை நாம் காணலாம். யோவான் 14 : 24 இல் கடவுள் ஆவியாய் உள்ளார். எனவே அவரை வழிபடும் மக்கள் அனைவரும் ஆவி எவ்வாறு அனைத்து வரையறைகளையும் ஊடறுத்துச் செல்வதைப் போல ஆவியால் ஆட்கொள்ளப்படுவோரும் ஊடறுத்துச் செல்ல அழைக்கப்படுகின்றனர். மேலும் ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட மனிதர் ஆவியரின் வல்லமையை தனது சொந்தப் பெயர் புகழுக்காகப் பாவிக்கமாட்டார். சீமோன் எனப்பட்டவர் பேதுருவிடத்தில் காணப்பட்ட ஆவியரின் வல்லமை போன்ற வல்லமை தனக்கும் கிடைக்கும் பட்சத்தில் தானும் அவ்வல்லமையை சொந்தப் பெயர் புகழுக்காக பாவிக்கலாம் என எண்ணியிருந்தார். ஆனால் ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட இராயப்பர் இதனை வன்மையாக எதிர்த்தார்.

பெந்தேகோஸ்தே பெருவிழாவைக் கொண்டாட முற்படுகின்ற இந்நாட்களில் ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட சமூகமாக மாற அழைக்கப்படுகின்றோம். ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்ட ஒரு சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட சமூக விடுதலைக்காக செயல்ப்பட திருமறை உண்மைகளைப் பிறருக்கு அறிவிக்க உண்மைக்காக, நீதிக்காகக் குரல் கொடுக்க நற்செய்தியின் ஒளியில் சவால்களை எதிர்நோக்க தடைகளைத் தாண்டிச் செல்ல சிறந்த அறப்பண்புகளை வெளிப்படுத்த அழைக்கப்படுகின்றனர். மேலும் புனித சின்னப்பர் கொரிந்தில் பணியின் காரணமாக சோர்வடைந்து காணப்பட்ட போது ஆவியர் அவரை உற்சாகப்படுத்தி அஞ்சாதே போதித்துக் கொண்டே இரு என உற்சாகமூட்டினார். எனவே சோர்வுற்றிருக்கும் எமது சமூதாயத்திற்கு உற்சாகத்தையும், வாழ்வையும், நம்பிக்கையையும் அளிப்பது ஆவியினால் ஆட்கொள்ளப்பட்ட ஒவ்வொரு மனிதனின் கடமை ஆகும்.

By Rev. Arulampalm Stephen

ஆவியின் வழிநடத்தல்

ஆவியின் வழிநடத்தல் (திருத்தூதுவர் பணிகள் 2 : 1 – 10)

ஆவியர்பற்றிய சிந்தனை பொதுவாக எல்லா மதங்களிலும் காணப்படுகின்றது. கிறிஸ்தவ மதத்தில் திருத்துவத்தில் மூன்றாவது நிலையை உடைய ஆள்தத்துவம் மிக்கவராக தூய ஆவியானவர் காட்டப்படுகின்றார். பழைய ஏற்பாட்டில் ஓர் குறிக்கப்பட்ட நோக்கத்திற்காக வழங்கப்பட்டு அப்பணி நிறைவேறியவுடன் ஆவியானவர் அந்நபரில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகின்றார். ஆனால் புதிய ஏற்பாட்டில் உடனிருக்கும் ஆவியின் பிரசன்னத்தை நாம் உணர்ந்து கொள்ளுகின்றோம். திருமறையில் தூய ஆவியானவர் மக்களை வழிநடத்திச் செல்லும் ஒருவராகக் காட்டப்படுகின்றார்.

தூய ஆவியானவர் மற்றவர்களின் நல்வாழ்விற்காக சவால்களை ஏற்றுக்கொள்ளுமாறு எங்களை வழிநடத்திச் செல்லுவதை திருமறை காண்பிக்கின்றது (லூக்கா 1 : 26 – 38) வரையுள்ள பகுதியில் மற்றவர்களின் நல்வாழ்விற்காக சவால்களை ஏற்றுக்கொள்ளுமாறு தூய ஆவியானவர் மரியாளை வழிநடத்திச் செல்லுகின்றார். காபிரியேல் தேவதூதனிடம் இருந்து அழைப்பைப் பெற்ற மரியாள் ஆரம்பத்தில் இவ் அழைப்பை நிராகரித்த போதிலும் தூய ஆவியானவர் மரியாளை சவாலிட்டு மற்றவர்களின் விடுதலைக்காக நீ பாடுபட வேண்டும் என வழிநடத்திச் செல்வதைக் காணுகின்றோம். எமது நாளாந்த வாழ்விலும் நாம் சவால்களுக்கு முகம் கொடுக்க தூய ஆவியானவர் எம்மை அழைக்கின்றார். சவால்களுக்கு முகம் கொடுத்தல் தூய ஆவியானவரின் வழிநடத்துதலைப் புரிந்து கொள்ளும் ஓர் மார்க்கமாகும்.

லூக்கா 1 : 29 – 32 வரையுள்ள பகுதியில் சிமியோனின் பாடலை லூக்கா நற்செய்தியாளர் மாத்திரம் கவிதை வடிவில் தருகின்றார். இது அவருக்குரிய ஓர் தனித்துவமாகும். தூய ஆவியால் வழிநடாத்தப்பட்ட சிமியோன் இயேசுவைக் கரங்களில் ஏந்திய வண்ணம் இயேசுவின் பெற்றோரை நோக்கியவராகப் பின்வருமாறு கூறுகின்றார். புறஜாதியருக்கு ஒளியாகவும் இஸ்ராயேலருக்கு மகிமையாகவும் தேவரீர் சகல ஜனங்களுக்கு முன்பாக ஏற்படுத்திய ரட்சணியத்தை என் கண்கள் கண்டன என இறைவாக்கு உரைக்கின்றார். யூத மைய சிந்தனையுள்ள மக்களுக்கு எல்லோரையும் உள்வாங்கும் தன்மையுள்ள புதிய சிந்தனையை சிமியோன் படைக்கின்றார். இவ் இறைவாக்கில் ஒப்புரவாகல் பணியும் மறைமுகமாக மறைந்துள்ளது. அதாவது ஆலயத்திற்கு உள் இருக்கும் மக்களையும் ஆலயத்திற்கு வெளியே இருக்கும் மக்களையும் ஆண்டவர் இயேசு ஒப்புரவாக்கவுள்ளார் என சுட்டிக்காட்டுகின்றார். இவ் ஒப்புரவாக்கல்பணி கிறிஸ்து மையத்திலேயே நடைபெறுகின்றது. மேலும் சிமியோன் மரியாளை நோக்கி உன் இதயத்தையும் பட்டயம் ஒன்று ஊடுருவிப் போகும் என இறைவாக்கு உரைக்கின்றார். அதாவது எல்லோரையும் உள்வாங்கும் தன்மையுள்ள பணியைப் புரியும் போது ஆண்டவர் இயேசு அனுபவிக்க வேண்டிய கிரயத்தைப் பற்றியே இவ் இறைவாக்கு சுட்டிக்காட்டுகின்றது. எனவே தூய ஆவியானவர் சிமியோனை சமூகத்தில் மாற்றுச் சிந்தனையை அல்லது மாற்றுக் கலாசாரத்தை முன் வைக்கும் இறைவாக்குரைக்கும் பணியில் வழிநடத்திச் செல்லுகின்றார். எனவே தூய ஆவியால் வழிநடத்தப்படும் ஒருவர் சமூகத்தில் மாற்றுச் சிந்தனையை முன்வைக்கும் இறைவாக்குரைக்கும் பணியையும் பணியில் நாம் அனுபவிக்க வேண்டிய அல்லது செலுத்த வேண்டிய கிரயங்கள் பற்றிய சிந்தனையையும் முன் வைக்க அழைக்கப்படுகின்றனர்.

ஆண்டவர் இயேசு திருமுழுக்குப் பெற்ற பின் சோதிக்கப்படுவதற்காக தூய ஆவியால் வனாந்தரமான ஓர் பகுதிக்கு வழிநடத்தக்கட்டு செல்லப்பட்டதாக லூக்கா 4 : 1 – 11 வசனம் வரையுள்ள பகுதியில் நாம் காணலாம். இங்கு தூய ஆவியானவர் இயேசுவை பல்வேறுபட்ட அனுபவங்களுக்கு ஊடாக அனுப்புகின்றார். இவ் அனுபவங்கள் கடவுளுடன் உள்ள உறவையும் மனிதர் மீதுள்ள உறவையும் கட்டியெழுப்புவதற்கு அடித்தளங்களாக விளங்கியுள்ளன. ஆண்டவர் இயேசுவின் பணியில் நிச்சயமற்ற தன்மையில் இருந்து எழும் சந்தோஷத்தை காணுமாறு தூய ஆவியானவர் வழிநடத்திச் செல்லுகின்றார். இயேசுவின் பணியில் நிலவப்போகின்ற உறுதியற்ற நிச்சயமற்ற ஏற்றுக் கொள்ளமுடியாத அனுபவங்களின் மத்தியில் இருந்து அனுபவிக்கப்போகும் சந்தோஷத்தை கண்டறியுமாறு தூய ஆவியானவர் அழைக்கின்றார். எனவே எமது நாளாந்த வாழ்விலும் நிச்சயமற்ற அனுபவங்களில் இருந்து எழும் சந்தோஷத்தை அனுபவிக்க தூய ஆவியானவர் எம்மை வழிநடத்திச் செல்லுகின்றார்.

சில சந்தர்ப்பங்களில் நாம் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டு செல்கின்ற வேளையில் ஒரு சிலரால் நாம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. தூய ஆவியின் செயலை சரிவர புரிந்து கொள்ள முடியாதவர்கள் தூய ஆவியால் வழிநடத்தப்படுகின்றவர்களையும் புரிந்து கொள்வதில் கடினத்தன்மையை எதிர்கொள்ளுகின்றனர். குறிப்பாக பெந்தேகோஸ்தே தினத்தன்று தூய ஆவியால் நிரப்பப்பட்ட மக்கள் அயல் மொழியில் பேச ஆரம்பித்த போது அங்கு கூடி நின்ற மக்கள் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களை குடிகாரர்கள் என நினைத்ததை திருமறையில் காணலாம் (தி. பணிகள் 2 : 15). மேலும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு புதுமைகள் பல புரிந்த பேதுருவை சீமோன் தவறாகப் புரிந்து கொண்டு ஆவியின் கொடையை பணத்திற்கு வாங்க முற்பட்ட சம்பவத்தை நினைவிற் கொள்ள வேண்டும் (தி. பணிகள் 8 : 18 – 19). இதன் ஒளியில் இன்றும் கூட ஆவியால் ஆட்கொள்ளப்படுகின்ற மக்களின் செயற்பாட்டை ஒரு சிலர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். எனவே பிறர் தவறாக எம்மைப் புரிந்து கொள்ளுமாறு தூய ஆவியானவர் எம்மை வழிநடத்திச் செல்வதை நாம் காணலாம்.

தூய ஆவியின் துணைகொண்டு எழுதப்பட்ட திருமறையின் உண்மைகளை பிறருக்கு விளங்கப்படுத்தும் பணியில் தூய ஆவியானவர் மக்களை வழிநடத்துகின்றார். திருமறையை சூழலுக்கு ஏற்ற வகையிலும் பிறர் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய வகையிலும் புரிய வைப்பதில் தூய ஆவியரின் பங்கு மிகப் பெரிதாகக் காணப்படுகின்றது. குறிப்பாக எத்தியோப்பிய அண்ணகன் ஏசாயாவின் சுருளை வாசித்த போதிலும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாதவனாகத் திகைத்தான். அப்பொழுது தூய ஆவியானவர் பிலிப்புவை நோக்கி அண்ணகனிடம் சென்று விளங்காத பகுதியை விளங்க வைக்குமாறு கூறுகின்றார் (தி. பணிகள் 8 : 29 – 31). எனவே புரிய முடியாத உண்மைகள் பிறருக்குப் புரிய வைக்குமாறு தூய ஆவியானவர் மக்களை வழிநடத்துகின்றார்.

நற்செய்தியின் பொருட்டு துன்ப துயர அனுபவங்களை அனுபவிக்குமாறு தூய ஆவியானவர் எம்மை வழிநடத்துகின்றார். தமஸ்கு வழியிலே பிரயாணப்பட்டுக் கொண்டிருந்த பவுல் திடீரென ஒளி இழந்தான். இவனின் மனமாற்றத்திற்கு உதவுமாறு தூய ஆவியானவர் அனனியாவிடத்தில் கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் அனனியா இப்பணியைச் செய்ய மறுப்புத் தெரிவித்தான். எனினும் தூய ஆவியானவர் நற்செய்தியின் பொருட்டு துன்பங்களை அனுபவிக்க அவனை உற்சாகப்படுத்தியதை திருமறையில் நாம் காணலாம் (தி. பணிகள் 9 : 12 , 13). மேலும் பவுல் எபேசுவில் 3 வருடம் பணி புரிந்த பின் எருசலேமை நோக்கி புறப்படுவதற்கு முன்னர் மக்களை நோக்கி எருசலேமில் எனக்குக் கட்டுக்களும் உபத்திரவங்களும் உண்டு. எனினும் இவற்றை நான் அனுபவிப்பதற்கு வேண்டிய ஆற்றலை தூய ஆவியர் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவரே இந்தப் பாதையின் வழியாக என்னை நடத்துகின்றார் (தி. பணிகள் 20 : 22, 24). மேற்காட்டிய உதாரணங்களின் அடித்தளத்தில் சில சந்தர்ப்பங்களில் நற்செய்தியின் பொருட்டு துன்பங்களை அனுபவிப்பதற்காக தூய ஆவியானவர் எம்மை வழிடத்திச் செல்லுகின்றார்.

சில சந்தர்ப்பங்களில் எமக்கு விருப்பமில்லாத, ஏற்றுக் கொள்ள முடியாத புரிந்து கொள்ளக் கடினமான காரியங்களை ஆற்றுமாறு தூய ஆவியானவர் எம்மை வழிநடத்திச் செல்லுகின்றார். உதாரணமாக பேதுருவைப் பொறுத்தவரையில் கடவுளின் செயல்பாட்டை யூத மத எல்லைகளுக்குள் மட்டும் கட்டுப்படுத்திக் கொள்ள மட்டும் விரும்பினார். எனினும் யோப்பா பட்டணத்தில் அவர் கண்ட காட்சி புற இன மக்கள் மத்தியிலும் கடவுளின் செயல்பாடு உண்டு என கண்டுகொள்ளுமாறு கடவுள் அவரை அழைத்தார். பேதுருவைப் பொருத்தவரையில் இவ்வுண்மையை ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும் தூய ஆவியானவர் அவ்வுண்மையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை அவருக்குக் கொடுக்கின்றார். மேலும் தி. பணிகள் 15 ஆம் அதிகாரத்தில் ஒரு மனிதன் மீட்படைய விருத்தசேதனம் அவசியமில்லை மாறாக கிறிஸ்துவின் அருளே மேலானது என்கின்ற உண்மையை பேதுரு வலியுறுத்தினார். இவ்வாறாக எல்லாரையும் உள்வாங்கும் மனிதராக பேதுருவை மாற்றுவதில் தூய ஆவியரின் வழிநடத்துதல் மிக முக்கியமாகக் காணப்படுகின்றது. எனவே எம்மால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத நாம் புரிந்து கொள்ள விரும்பாத உண்மைகளை எமக்குப் புரிய வைப்பதில் தூய ஆவியரின் செல்வாக்கு மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

தூய ஆவியால் வழிநடத்தப்படும் ஒருவர் நற்செய்திக்காகவும் மற்றவர்களின் நன்மைக்காகவும் தீர்க்கதரிசனப்பணியை ஆற்ற முன்வருவதை அவதானிக்கலாம். குறிப்பாக அரசியல், மத, எல்லைகளில் நடைபெறும் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பதை நாம் அவதானிக்கலாம். குறிப்பாக யூத செனகரிம் சங்கம் இயேசுவைப் பற்றி பிறருக்கு எடுத்துக் கூறக் கூடாது எனக் கட்டளை பிறப்பித்த போது பேதுரு மதவாதிகளை நோக்கி உங்களுக்கு கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் கடவுளுக்குக் கீழ்ப்படிவது மேலானது எனக் கூறுகின்றார் (தி. பணிகள் 4 : 19). மேலும் ஸ்தேவான் ஆதித்திருச்சபையில் காணப்பட்ட இனவாதத்தையும் (திஇ பணிகள் 6 : 5), கடவுள் கைகளினால் கட்டப்பட்ட ஆலயத்தில் மாத்திரம் வாசம் செய்வார் என்ற பிழையான இறையியலையும் (தி. பணிகள் 6 : 48) சவாலிடுகின்றார். எனவே தூய ஆவியால் வழிநடத்தப்படும் ஒரு மனிதனோ அல்லது சமூகமோ சவால்களை உருவாக்குவதற்கோ அல்லது நடைமுறைப்படுத்துவதற்கோ அச்சமடையமாட்டார்கள்.

எனவே தூய ஆவியானவர் மற்றவர்களின் நன்மைக்காக அவமானங்களை ஏற்றுக் கொள்ளவும் நற்செய்தியின் ஒளியில் இறைவாக்குரைக்கவும் நிச்சயமற்ற சூழலில் மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளவும் இறைவாக்குகளை பிறருக்குப் புரிய வைப்பதற்காகவும் புரிந்து கொள்ளமுடியாத ஏற்றுக்கொள்ள முடியாத அனுபவங்களுக்கூடாக எம்மை வழிநடத்தவும் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கவும் நற்செய்தியின் பொருட்டு துயரங்களை அனுபவிப்பதற்காகவும் எம்மை அழைத்து வழிநடத்துகின்றார். எனவே தூய ஆவியினால் வழிநடத்தப்படுகின்ற நாங்கள் ஆவியின் செயற்பாடுகளை புரிந்து கொண்டு செயல்பட இறைவன் எம்மை அழைக்கின்றார்.

By Rev. Arulampalm Stephen